எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மாவீரர்களை மதிப்போம்! அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!! : த ஜெயபாலன்

IDP_Camp_Injuredநினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

IDP_Camp_Injured_Manபிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும். தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

Speech from Vanni 27/11/2010
:http://www.youtube.com/watch?v=jDH_U5uZLMA&feature=player_embedded

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை

Amirthalingam_A_TULFதமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு வவுனியாவில் சிலை அமைப்பதற்கு தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டக்கிளையின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளைத் தலைவர் டேவிட் நாதன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னிக்கான கூட்டம் வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற போது தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பேசுகையில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியதுடன், ஆக்கபூர்வமான செயற்பாட்டு வடிவங்களுக்கும் முதன்மை அளிக்க வேண்டும். அதற்கென மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் விரைவில் தமிழரசுக்கட்சியின் அலுவலகங்களை திறப்பதுடன் வவுனியாவிலும்  செட்டிகுளம், ஓமந்தை, நெடுங்கேணி, சாஸ்திரிகூளாங்குளம் ஆகிய பகுதிகளில் வட்ட செயலகங்களும் திறக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகின்றது. முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kirishna_SM_ExternalAffairsMinister_Indiaதமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று செவ்வாய் கிழமை மாலை சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம் கருத்தத் தெரிவிக்கையில், பத்து தமிழ் அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மாலை கூடி முக்கிய சில விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவுள்ள நிலையில் அவருடன் தமிழ் கட்சிகளின் அரங்கம் மேற்கொள்ளவுள்ள பேச்சுக்கள் குறித்தும், தீர்வுத்திட்டம் ஒன்றை வடிவமைப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தடுப்பு முகாமில் இருந்து யாழ் பல்கலைக்கழகம் வந்த மாணவன் மீது பகிடிவதை. மாணவன் தற்கொலை முயற்சி!

Univercity_of_Jaffnaயாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைததிய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக விடுதியில் வசிக்கும் கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவனாகிய எஸ்.ராஜேஸ் கண்ணா (வயது 23)என்பவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் பாடசாலை அதிபர் மாணவர்களை ஏசியதால் நான்கு மாணவிகள் நஞ்சருந்திய சம்பவம் ஒன்று வலிகாமம் பாடசாலை ஒன்றில் நிகழ்ந்தது அறிந்ததே. (பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.)மேலும் பல்கலைக்கழக மாணவிகள் மத்தியில் தற்கொலை வீதம் அதிகமாக உள்ளதாகவும் அதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலரின் பாலியல் துஸ்பிரயொகங்கள் காரணமாக இருப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்)

நேற்று திங்கள் கிழமை மாலை எஸ்.ராஜேஸ் கண்ணா தங்கியிருந்த பாலசிங்கம் விடுதியில் வைத்து மூன்று மாணவர்கள் இவரைத் தாக்கியுள்ளதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அதிகளவு பனடோல் வில்லைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது தாக்குலை மேற்கொண்ட மாணவர்கள் இவரை பகிடிவதை செய்யும் நோக்கத்துடன் தாக்கவில்லை எனவும், குறித்த மாணவர் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளிக்க உரிய மருந்து இல்லாததால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊடாக கொழும்பிலிருந்து அம்மருந்தினைப் பெற ஏற்பாடு செய்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

50 வருடங்களின் பின் வடக்கு மாகாணத்தில் அதிகளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Paddy_Fieldsவட மாகாண சபைக்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் இவ்வருட காலபோக நெற்செய்கை இரண்டு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐம்பது வருடங்களின் பின்னர் இந்தளவு அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் செ.பத்மநாதன் இத்தகலை தெரிவித்துள்ளார்.

இந்த நெற்செய்கைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சிறந்த விளைச்சலை விவசாயிகள் பெறுவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அறுவடை செய்யும் நெல்லை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடும் எனவும், கடந்த சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லையே விவசாயிகள் இன்னமும் முழுவதுமாக சந்தைப்படுத்த முடியாத நிலையுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இனியபாரதிக்கு பத்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

Iniyaparathy_TMVPமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரும், பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளில் இணைந்தவருமான, தற்போது அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக பணியாற்றும் இனியபாரதி என்ற கந்தசாமி நிசாந்தனுக்கு கல்முனை மேல் நீதிமன்றினால் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்பபை வழங்கினார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சந்திரகாந்தனை இனியபாரதி 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியதாகவும், இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இனியபாரதி இக்குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத்தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. பத்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் அத்துடன், 25 000 ரூபா அபாராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். குறிப்பட்ட பத்து வருடகாலத்தில் எதிரி ஏதாவது குற்றச்செயலில் தண்டிக்கப்பட்டால் அதற்கான தண்டனையுடன் இதனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டி வரும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரியின் பொதுச் சேவை மற்றும், எதிர்காலத்தில் அவர் மேற்கொள்விருக்கும் சேவைகள் என்பனவற்றைக் கொண்டு இத்தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை – மக்கள் சேவையில் அக்கறை காட்டுங்கள்

new.jpgஇலங் கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுள்ளது. இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 60 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதில் பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுமாக 60 அமைச்சர்களும், 31 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பத்துப்பதினைந்து வாகனங்களை வைத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமாகிச் செயற்படவேண்டாமெனவும், அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தலை விடுத்தார்.

.திங்கட்கிழமை (22.11.2010) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தையடுத்து அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்று முடிந்தவுடன் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையை நிகழ்த்திய உரையில் கூறியதாவது;

இன்றைய அமைச்சரவைக்கு பல புதிய முகங்களை நான் அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். மூத்தவர்கள் சிலரை சிரேஷ்ட அமைச்சர்களாக நியமித்து கௌரவமளித்துள்ளேன். அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டிய கடப்பாடு எம்மிடம் காணப்படுவதாலேயே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.நாட்டுமக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் உரிய முறையில் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதத்தில் சிக்கியிருந்த நாட்டை நீண்டகால போராட்டத்தின் பின்னர் மீட்டெடுத்து பிளவுபட்டிருந்த தேசத்தை ஒரே நாடாக கட்டியெழுப்பியுள்ளோம். இப்போது ஒரேநாடாக ஒன்றுபடுத்தியுள்ளோம். இனிமேல் எம்மீதுள்ள பாரிய பொறுப்பு நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு செல்வதே ஆகும்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களிடம் நான் ஒப்படைத்துள்ளேன்.

இந்த அமைச்சுப் பதவிகளை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த முனையாதீர்கள். 10,15 வாகனங்களை வைத்துக் கொண்டு அலங்கார ஊர்வலம் செல்ல முற்படாதீர்கள். அப்படிச் செய்ய நீங்கள் முயற்சித்தால் மக்கள் உங்களை நிராகரிக்க தயங்கமாட்டார்கள். மக்களிடமிருந்து தூரமாகும் நிலைக்கு உங்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

வீண்விரயம், ஊழல்,மோசடிகளுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். அதன் மூலம் உங்களுக்கும், அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படவாய்ப்பாகிவிடும். அந்த நெருக்கடிநிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது. உங்கள் கைகளில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

ஏனைய அமைச்சுக்களினதும், அமைச்சர்கள், அதிகாரிகளதும் குறைகளை கண்டுபிடித்து குறைசொல்லித்திரிய நீங்கள் எவரும் முற்படக்கூடாது. அப்படிச்செய்வதன் மூலம் அரசுக்கும், கட்சிக்குமே அபகீர்த்தி ஏற்படலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நீங்கள் சரிவர நிறைவேற்றினால் எவரிடமும் குறை ஏற்படப்போவதில்லை. நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது. அரசிலுள்ளவர்களைப் பற்றித் தவறாகப் பேசி எதிரணியினருக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள்.

நாமனைவரும் ஒன்றுபட்டு ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வோம். அதுதான் எம்முன்னுள்ள பிரதான பணியாகும். நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றவேண்டும். அதனையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

நான் இரண்டுபேருக்கு அமைச்சர் பதவி வழங்க அழைத்தபோது அவர்கள் பெருந்தன்மையுடன் என்னிடம் கூறியது அமைச்சுப் பதவி வேண்டாம். பிரதியமைச்சர்களாக எனது அமைச்சுக்களுக்கு நியமிக்குமாறு கோரினர். அவர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த நிமிடம் முதல் தேசத்தை வளமாகக்கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டுடன் தாய்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோம். உங்களனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 

சிரேஸ்ட அமைச்சர்கள் விபரங்கள்

டி எம் ஜயரத்ன – பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்
ரட்னசிறி விக்கிரமநாயக்க  – நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
டியு குணசேகர – மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன –  கிராமிய விவகார சிரேஷ்ட  அமைச்சு
பி.தயாரட்ன, –  உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி  –   நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன, –   நுகர்வோர் சேமநலன்
பியசேன கமகே  –  தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்
திஸ்ஸ விதாரண  –   விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம  –   சர்வதேச நிதி ஒத்துழைப்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 49 போ்

நிமல் சிறிபால டி சில்வா –  நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன, –  சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த  –  கனியவளதுறை
ஆறுமுகன் தொண்டமான்  –  கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன  –  நீர்வழங்கல் துறை
டக்ளஸ் தேவானந்தா  –  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, –  உள்ளுராட்சி – மாகாணசபை
ரிசாத் பதியுதீன், –  கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க – மின்சக்தி சக்திவலுத்துறை
விமல் வீரசங்ச –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு, பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம், –  நீதித்துறை
பசில் ராஜபக்ச –  பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார –  தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க  –  உயர் கல்வி
ஜி எல் பீரிஸ் – வெளிவிவகாரம்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – அரசநிர்வாக – உள்நாட்டலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன –  நாடாளுமன்ற விவகாரம்
ஜீவன் குமாரதுங்க –  அஞ்சல்துறை
பவித்ரா வன்னியாராச்சி  –  தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா –  சுற்றாடல் துறை
திஸ்ஸ கரலியத்த  –  சிறுவர் அபிவிருத்தி> மகளிர் விவகாரம்
காமினி லொகுகே –  தொழில் மற்றும் தொழிலுறவு
பந்துல குணவர்த்தன – கல்வி
மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்டத்துறை
ராஜித சேனாரத்ன –  மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன் –  காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
சி.பி.ரட்னாயக்க – தனியார் போக்குவரத்து சேவை
மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயத்துறை
கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடக மற்றும் செய்தித்துறை
குமார வெல்கம  – போக்குவரத்து
டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகார, திறன் மேம்பாட்டு
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர – புனருத்தாபன, சிறைச்சாலை சீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க  –  தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே – சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி
டிலான் பெரேரா –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
ஜகத் புஸ்பகுமார –  தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க – கலாசார மற்றும் கலைவிவகாரம்
மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன  – விவசாய சேவை மற்றும் வனவிலங்கு
குணரத்ன வீரக்கோன் –  மீள்குடியேற்றதுறை
மேர்வின் சில்வா –  மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை
தயாஸ்ரீ த திசேரா – அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய –  தேசிய மரபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரட்ன –  உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க – அரச முகாமைத்து மீளமைப்பு
பிரியங்கர ஜயரட்ன – சிவில் விமான சேவைகள்

பிரதியமைச்சர்கள்

சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி, நீர்வளத்துறை
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பண்டு பண்டாரநாயக்க –  தேசிய வைத்திய துறை
ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க –  இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க – போக்குவரத்து
எச்,ஆர்.மித்ரபால – கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை
கீதாஞ்சன குணவர்தன –  நிதி மற்றும் திட்டமிடல்
விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
பைசர் முஸ்தபா –  தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க – உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத் – காணி மற்றும் காணி அபிவிருத்தி
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்
சந்திரசிறி சூரிய ஆராயச்சி – சமூகசேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க –  உயர்கல்வி
நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க – சுகாதாரம்
சரண குணவர்தன – கனியவள தொழில்துறை
காமினி விஜித் விஜயமுனி சொய்சா – கல்வித்துறை
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
ஏ.டி.எஸ்.குணவர்தன –    புத்த சாசன மதவிவகார
ஏர்ல் குணசேகர –    பெருந்தோட்டதுறை
பசிர் ஷேகுதாவுத் –    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர் –  சுற்றாடல்
டுலிப் விஜேசேகர –   அனர்த்த முகாமைத்துவம்

பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலாளர்களில் மாற்றமில்லை 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க தொடர்ந்து செயற்படுவார். 

”தமிழ் மக்களின் நலன் கருதி ஏனைய தமிழ் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயார்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

TNAதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த யுத்தம் நடைபெற்ற காலங்களில் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிய போது பல சிக்கல்களுக்கு மத்தியில் 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த இந்த தொண்டர்  அசிரியர்கள் வேறு தொழில்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்க வில்லை எனக்கூறுகின்றனர். ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவித்துள்ள இத்தொண்டர் ஆசிரியர்கள்  தங்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது.

Douglas Devanandaமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல வீதிகள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. சீன நிறுவனமொன்றினால் இவை புனரமைக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு – பு ல்மோட்டை வீதி, அகியனவே இவ்வாறு புனரமைக்கப்படவள்ளன. இதற்கான ஆரம்ப நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் கொத்தலாவல, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, சிறிரங்கா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.