எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் சீர்குலைந்த 370 கி.மீ. தூரமான வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதனடிப்படையில் இத்திட்டத்துக்கு கடனுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 4 வருட காலம் கொண்ட இத்திட்டத்துக்கு 78 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி 70 மில்லியன் டொலரையும் இலங்கை அரசாங்கம் 8 மில்லியன் டொலரையம் வழங்கவுள்ளது.

ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்!

290909mahinda.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.

வியட்நாமின் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக,  மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மடு கட்டளைத் தளபதி விபத்தில் பலி – குருநாகலில் சம்பவம்

குருநாகல் தோரயாய பிரதேசத்தில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் மடு, 611வது படையணியின் கட்டளையிடும் தளபதி கேர்ணல் துமிந்த பலிஹகார அமரசேகர உயிரிழந்துள்ளார்.

மேலும் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்து குருநாகல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டமொன்றில் பங்கேற்பதற்காக வந்த கேர்ணல் அமரசேகரவின் இராணுவ கெப் வாகனமும் பொலிஸ் டிரக் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முன்னாள் சென்ற பொலிஸ் டிரக் வண்டியை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோது இராணுவ கெப் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் டிரக்குடன் மோதியுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேர்ணல் அதிகாலை இறந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வருட இறுதிக்கு முன் வடக்கில் சிவில் நிர்வாகம் : ஒரு இலட்சம் பேர் மீள்குடியேறுவர் – அமைச்சர் அமுனுகம

வட பகுதியில் இவ்வாண்டு இறுதிக்குள் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும் (யு. என். டி. பி.) இணைந்து இதற்கென பாரிய திட்டம் ஒன்றை அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யு. என். டி. பியின் பிரதிநிதி நீல் பூனுக்கும், தனக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த திட்டத்திற்கு இணக்கம் கண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் உரையாற்றுகையில்:-

கிராம சேவகர் பிரிவு தொடக்கம் பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் வரையான சகல செயற்பாடுகளும் முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொலைத் தொடர்பு உட்பட உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை நிர்வாக வசதிகள் வெகு விரைவில் ஏற்படுத்தப்பட்டு இந்த மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

சுனாமி அனர்த்தத்தின் போதும், கிழக்கு மீட்டெடுக்கப்பட்ட பின்னரும் இது போன்ற நிர்வாக கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.

கிராம மட்டத்திலிருந்து நிர்வாக நடவடிக்கைகளை ஸ்தாபிக்க தேவையான சகல செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றோம்.

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyமுருகையன் இறந்து ஏறத்தாழ நான்கு மாதங்களில் நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

Dr Rajani Thiranagamaஅடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு

தற்கொடை என்ப தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரை தான் ஈயும்
சான்றாண்மை தற்கொடையாம்
ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை

கற்கண் டினிது பழங் கள் இனிதே
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்: அடங்கார்:
அவர்க்குயிரோ
துச்சம்: எதிரி வெறுந்தூள்.

கொல்வோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
ஏல்லா உலகும் தொழும்.

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும்.

மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

ஏவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
கள்ளோழ் ஓழ்த்தாருக்கு

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான  யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Selviபுலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம் (Commissioned to)    எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்)

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு.  ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக  ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். இவ்வாண்டில் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான இறுதிச் சமரொன்றின் போது பண்டிதர் புதுக்குடியிருப்பில் தள்ளாத வயதிலும் போரிட்டு மடிந்தார். அவருக்கு நெற்றியிலோ நெஞ்சிலோதான் சன்னம் பாய்ந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

நல்லையல்லை நெடுவெண்ணிலவே

இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம்
ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம்
வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல்
போற்றெருவோரம் புளியோ வேம்போ
ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை
ஒழியுநாள் வருமோ?
முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு
ஆர உண்டே மூரல் முறுவலர்
சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ
இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன
வாரியிடையே வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன
கிள்ளை மழலையும் கேளா நல் ஆன்
கன்று துள்ளா கறவை சுரவா
எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல்
புல்லென்றாகிப் போன
யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்
இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில்
ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது.

Arnold_Weskerமுருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான  Antigone, Oedipus Rex  என்பவற்றை  தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht  இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு  “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும்  தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார்.

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse)  எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல.  மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும்.  முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’  பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர்.

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition  (இலக்கிய ஞானம்) ஐ  அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை.

அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள்.

இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது”  என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல்.

Sergei_Mikhalkovஇந்த ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் இசைக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார்.

முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது)  முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

திருடர்கள் தாக்கியதில் தமிழக வாலிபர் லண்டனில் மரணம்

லண்டன் குரொய்டனில் வாழ்ந்து வந்த சரவணகுமார் செல்லப்பன் (25) என்ற இளைஞர் ஒக்ரோபர் 19ல் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட உடற்காயம் காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழ்நாடு நாமக்கல்லைச் சேர்ந்த இளைஞர் தனது கல்வியைத் தொடர்வதற்காக லண்டன் வந்திருந்தார். தீபாவளி தினமான ஒக்ரோபர் 17ல் மாலை ஏழு மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் இருந்த வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பன் இனம்தெரியாத சில இளைஞர்களால் தாக்கப்பட்டதாக அதே ஊரைச் சேர்ந்த சரவணகுமாரின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பனிடம் இருந்த தொலைபேசி மற்றும் கிறடிட்காட் போன்ற உடமைகள் பறிக்கப்பட்டது என்றும் திருடிச் சென்றவர்கள் வீதியில் நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்த சரவணகுமார் செல்லப்பனின் பிடரியில் இரும்புக் குற்றியினால் தாக்கிவிட்டு அவரது உடைமைகளைப் பறித்துச் சென்றதாகவும் சரவணகுமாரின் நண்பர் கூறினார்.

வீதியில் வீழ்ந்த சரவணகுமார் செல்லப்பன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுந்து தனது வீட்டுக்குச் சென்று அங்கு நடந்ததை தான் தங்கியிருந்த வீட்டுக்காரர் ராஜனக்கு தெரிவித்ததாக ராஜனின் நண்பர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். தான் தன்னுடைய நண்பர்களுடன் மேடே மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாகக் கூறிவிட்டு அவருடைய நண்பர்களிடம் சென்றுள்ளார். நண்பர்களிடம் நடந்ததைக் கூறி விட்டு தனக்கு பிடரியில் வலி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் மேடே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சரவணகுமார் செல்லப்பனைக் காண்பித்துள்ளனர். சரவணகுமார் செல்லப்பனைப் பார்வையிட்ட மருத்துவர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியே அது என்று கூறி வலிநிவாரணியை வழங்கியாதாகத் தெரியவருகிறது. அன்றைய தினம் இரவு சரவணகுமார் தான் தங்கியிருந்த வீட்டில் தங்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் வீட்டிலேயே தங்கியதாகவும் சரவணகுமார் தங்கியிருந்த வீட்டுக்காரரர் ராஜனின் நண்பர் கூறுகிறார். இரவு படுக்கைக்குச் சென்ற போதும் சரவணகுமார் செல்லப்பனின் வலி குறைந்திருக்கவி;ல்லை என்றும் நண்பர்கள் அடிபட்ட இடத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தனர் என்றும் சரவணகுமாரின் நண்பர் தெரிவிக்கின்றார்.

வலியுடன் படுக்கைகுச் சென்ற சரவணகுமார் செல்லப்பன் மறுநாள் 18 ஒக்ரோபர் காலையில் எழுந்திருக்கவில்லை. காலை எழுந்து வேலைக்கு புறம்பட்ட நண்பன் வலியுடன் படுக்கைக்குச் சென்றவன் எப்படி உள்ளான் என்று பார்க்கச் சென்ற போதும் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வடிந்தபடி சரவணகுமார் செல்லப்பன் படுத்திருந்தார். உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து ரூற்றிங் சென் ஜோர்ஜ் மருத்துவமனைக்கு சரவணகுமார் செல்லப்பன் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு மறுநாள் மதியம் ஒரு மணியளவில் சரவணகுமார் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சரவணகுமார் செல்லப்பன் தனது இளம் வயதில் தன்னுயிரை இழந்ததையிட்டு உலகத் தமிழர் இயக்கம் (யுகே) தனது ஆழந்த மனவருத்தத்தை தெரிவித்துள்ளதுடன் இறந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளனர். தமிழ்பேசும் நாங்கள் சரணவனகுமாரது உடலை பொறுப்பெற்காவிட்டால் கவுன்சில் அனாதையாக கருதி உடலை அடக்கம் செய்வவே வழமை. ஆதலால் சரவணகுமாரின் உடலைப் பொறுப்பெற்று அவரது உறுவினர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சியை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் உலகத் தமிழர் இயக்கம் சார்பில் ஜேக்கப் ரவிபாலன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஏற்கனவே விபத்தில் மரணமடைந்த மருத்துவத்தாதி செல்வி மஞ்சுளாவின் உடலையும் உலகத் தமிழர் இயக்கம் அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி 6ல் விபத்தில் மரணமான தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞரின் உடல் இங்கு உறவினர்கள் இல்லாத நிலையில் ரவர்ஹம்லற் கவுன்சிலால் அனாதையாக் கருதப்பட்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்ரம்பர் 9ல் முத்துக்குமாரின் உடலை கவுன்சிலர் போல் சத்தியநேசன் பொறுப்பேற்று லண்டன் சைவமுன்னேற்றச் சங்க ஐயரின் உதவியுடன் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டு அஸ்தியை முத்துக்குமாரின் பெற்றோருக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் 500 கோடியால்; வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தகவல்.

sri-lanka.jpgஇந்தியா வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபா மேலதிக நிதயுதவித் தொகை மூலம் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இடம்பெயர்ந்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவை மேலதிகமாக வழங்க முன்வந்துள்ளது.

மடு – தலைமன்னார் மற்றும் ஓமந்தை – பளைக்கிடையிலான ரயில் பாதைகளை புனரமைத்தல்  ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்தல்; யாழ். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்தல் மற்றும்  கலாசார நிலையம் அமைத்தல் போன்றவற்றை இதன் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கான திட்ட அறிக்கை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன்; இது குறித்து இரு நாடுகளுக்குமிடையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த தமிழக எம்.பி.க்கள் குழு சர்வதேச சமூகத்திற்கு தெளிவான செய்தியொன்றை முன்வைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக எம்.பி.க்களின் இலங்கை விஜயத்தை அடுத்தே இந்த உதவி கிடைக்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற வேண்டுமென்பதே தமிழக எம்.பி.க்களின் பிரதான கோரிக்கையாகும்.
அந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 11 அமைச்சர்கள் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளாரஎன அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் நவம்பர்; 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் – ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தலின்  ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும்,  அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது.  இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பொய் செய்தி வெளியிடும் இணையத்தளம் குறித்து மக்களுக்கு அறிவூட்டல்

000lakshman_yapa_abeywardena.jpgபொய்யான செய்திகளை பிரசுரித்து வரும் சில இணையதளங்கள் குறித்து மக்களை அறிவூட்ட உள்ளதாகவும், இவை குறித்த தகவல்கள் அடுத்த வாரம் முதல் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடவுள்ள தாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறி பல பொய்யான செய்திகளை சில வெப்தளங்கள் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகின்றன.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது

211009proelanco.jpgபுதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் செம்மொழி இளம் அறிஞர் விருது! ஒரு இலட்சம் தொகையும், சான்றிதழும் குடியரசுத்தலைவர் வழங்வுள்ளார் !

இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு “இளம் அறிஞர் விருது”வை நேற்று அறிவித்துள்ளது. இவ்விருதுக்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர்மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன.சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

 முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள்(2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்றனவாகும்.
 
சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர்.சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டுவந்தார்.சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து,இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார்.அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன்.எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம்,புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம்,இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

 இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். 

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார்.இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும்.உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார்.தேசிய அளவில் 42 கட்டுரைகளும்,இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி,தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்சுதமிழ்,  தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள்,வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

 சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை,முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “பாரதிதாசன் பரம்பரை” என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர்பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

பேராசிரியர் மு.இளங்கோவனுக்குச் தேசம்நெற்றின் வாழ்த்துக்கள்