எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

‘யாழ்தேவி’ ஊடாக வடக்கும் தெற்கும் உறவை புதுப்பிப்பதை காண்பதே நோக்கம் – ஜனாதிபதி

he_the_president.jpgவட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக அரச மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்த நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- ‘தெற்கின் தோழன்’ நிதியம் பெளதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்குமாகும். ‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக தனிப்பட்ட மட்டத்தில் கொடுக்கப்படும் நிதி அன்பளிப்புகளை விட பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க மட்டத்தில் வழங்கப்படும் நிதி அன்பளிப்புகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், நோலிமிட் நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தொழிற் சங்கம், இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தாய் சங்கம், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி ஊழியர்கள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நவலோக கன்ஸ்ட்ரக்ஸன் தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் நேற்று ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்தன.

வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

கட்சிச் செயலாளர்களும், கட்சிகளால் பிரேரிக்கப்பட்டவர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் தவிர வேறு எவரும் மாவட்ட செயலகங்களுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்களென தேர்தல் செயலகம் தெரிவித்தது. கட்சி ஆதரவாளர்கள் கச்சேரிகளுக்கு அருகில் கூடுவதற்கும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் இன்று முதல் (19) – 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளன. பிரதான கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த 26 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னரே பெருந்தொகைப் பணம் பெட்டகத்தில் வைப்பு

gl.jpgதேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே சரத் பொன்சேகா பெருந்தொகைப் பணத்தை வங்கியின் பெட்டகத்தில் வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா பொன்சேகா கூறியதற்கிணங்க, பொன்சேகாவின் அலுவலகத்திலிருந்தே அந்தப் பணத்தைக் கொண்டு பெட்டகத்தில் வைத்ததாக ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன கூறியுள்ளார். அவை தன்னுடைய பணம் அல்லவென்றும் அவர் கூறியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பீரிஸ், ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவையின் மற்றொரு பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்டவும் கலந்து கொண்டனர்.

“சம்பத் வங்கியில் பெரிய பெட்டகமொன்றைக் கேட்டிருக்கிறார்கள். அங்கு பெரியவை இல்லாததால், திருமதி அசோகா திலகரட்னவின் பெயரில் இரண்டு பெட்டகங்களையும், மற்றையவர்களின் பெயரில் மேலும் இரண்டு பெட்டகங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதன் அனைத்துத் திறப்புகளையும் அசோக்கா திலகரட்னவே வைத்திருந்தார்.

வேறு பெயர்களில் இருந்தாலும் பெட்டகங்களை அவர்தான் திறக்கமுடியும். நகைகள் வைக்கப்படும் பெட்டகத்தில் கற்றை, கற்றையாகப் பண நோட்டுக்களை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு நாணயத்தாள்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றவும் இல்லை.

வங்கியில் நடைமுறைக் கணக்கோ, சேமிப்புக் கணக்கோ ஆரம்பிக்காமல் மூடைகளில் பெட்டகத்தில் ஏன் வைத்தார்களென்று தெரியவில்லை. இலங்கையின் சட்டத்தின்படி வெளிநாடுகளிலிருந்து வரும் ஒருவர் பிரகடனப்படுத்தாமல் 15 ஆயிரம் டொலர் வரை கொண்டு வரமுடியும்.

அதற்கு மேலதிகம் என்றால் மத்திய வங்கியின் சட்டதிட்டத்தின்படி அனுமதி பெறவேண்டும். பின்னர் இலங்கை ரூபாய்க்கு மாற்றிவிடவேண்டும். நாம் சுமாராக இரண்டாயிரம் டொலர்களை மாத்திரமே தம்முடன் வைத்திருக்க முடியும். ஆனால், அசோகா திலகரட்ன பெற்றிருந்த நான்கு பெட்டகங்களில் 527,000 அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் இருக்கின்றன.

அனைத்தும் புத்தம் புது நோட்டுக்கள். வரிசைக் கிரமப்படி இலக்கங்களைக் கொண்ட அவை முன்பு பயன்படுத்தப்படாத பணத்தாள்கள். இவை எங்கிருந்து, எவ்வாறு, ஏன் கிடைத்தன என்பதைப்பற்றிய விபரங்களை அறியவேண்டாமா? இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல். நீதிமன்றத்தின் அனுமதியின்படி குற்றப்புலனாய்வுத்துறையினர், வங்கி அதிகாரிகள் மற்றும் அசோகா திலகரட்ன முன்னிலையில்தான் பெட்டகங்கள் திறக்கப்பட்டன.

நூறு ஸ்ரேலிங் பவுண்கள், ஒன்றரை இலட்சம் இலங்கை நாணயத்தாள் என மூன்று நாடுகளின் பண நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். ஆகவே இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்காமல் எந்தவொரு அரசாலும் இருக்க முடியாது” என்று தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சரத் பென்சேகாவின் மருமகன் மீது பாரிய மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியதுடன், சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே மேற்கொள்ளப்படுமென்றும், அதற்கு மேலதிகமாக உச்சநீதிமன்றத்திற்கே செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

“சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றமிழைத்தவர் ஆர்ப்பாட்டம் செய்விப்பதற்குத் தகுதியுடையவரென்றால், அவருக்கு விலக்களிப்பது சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்” என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவுஷாட் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைந்தார்

nawsard.gifசம்மாந் துறையைச் சேர்ந்த ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.நவுஷாட் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

தமிழ்க் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த முப்படை வீரர்களுக்கு சான்றிதழ்

அடிப்படைத் தமிழ்க் கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட முப்படை வீரர்களுக்கு நேற்று சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பாமன்கடையிலுள்ள தேசிய கெடெட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது அதன் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

தேசிய கெடெட் படையணியின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட 36 முப்படை வீரர்களே சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

ரன்டெம்பேயிலுள்ள தேசிய கெடெட் படையின் பயிற்சி நிலையத்தில் இந்த படைவீரர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துத் கொண்ட தேசிய கெடெட் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்குடனே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இந்த கற்கை நெறி வழங்கப்பட்டது. தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் உள்ளத்தை வென்று ஐக்கியத்துட னும், அவர்களது பங்களிப்புகளுடனும் சேவைகளை வழங்க முடியும்.

நீங்கள் கற்றவற்றை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் இனப்பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க முடியும். தமிழ் மொழி தெரிந்த படை வீரர்கள் மிகவும் குறைந்தளவே உள்ளனர். இதனால், முப்படையினருக்கும் உங்களது சேவை மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

தமிழ் மொழியை கற்றதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிறந்த சேவைகளை செய்யவும், புலனாய்வுத் துறையினருக்கு ஒத்துழைக்கவும் முடியும் என்றும் மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுடன் பணிவாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும் என்றும், அவர் கற்கை நெறியை முடித்த முப்படை வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கலாபூசணம் மணிமேகலை காலமானார்

mani.jpgகலைஞர் கலாபூஷணம் மணி மேகலை இராமநாதன் கொழும்பில் காலமானார். சுமார் மூன்று மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த வேளையிலேயே நேற்று முன்தினம் இரவு காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 64. அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20 ஆம் திகதி கொழும்பு- 10. ஸ்ரீ பிரியதர்ஷன மாவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து கலாபவனத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படும். நாளை பி.ப.4 மணியளவில் பொரளை மயானத்தில் நடைபெறும்.

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் மணிமேகலை தனது 9வது வயதி லேயே பாடகியாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார். அதன்பின் நர்த்தகியாக, நடிகையாக கடந்த 53 ஆண்டுகள் ஈழத்துக் கலையுலகில் பிரகாசித்தார்.

மேடைநாடகம், வானொலி, வட மோடி தென்மோடிக் கூத்துகள், சினிமா சின்னத்திரை, வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஒரே கலைஞர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது

ரூ. 14 கோடி பெறுமதியான 28 கிலோ ஹெரோயின் முந்தலில் மீட்பு

பயணப் பொதி ஒன்றில் ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 28 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை கற்பிட்டி பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 14 கோடி ரூபா என மதிக்கப்பட்டு ள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை அருகில் வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். முந்தல் அக்கரவெளி பகுதி வீடொன்றில் இருந்தே 28 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒவ்வொரு கிலோவாக பாதுகாப்பான முறையில் பொதிசெய்யப்பட்டு பயணப் பொதி ஒன்றில் வைத்து கொண்டு செல்லவுள்ளதாக கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே விசேட பொலிஸ் குழுக்கள் இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டன

நந்தன குணதிலக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

nandana.jpgதேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். இதனை உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.

இவர் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்பிட்டியில் உணவு விஷமானதில் 107 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கல்பிட்டி கந்தகுலியமுன எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 107 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

எமிரேட்ஸில் மீண்டும் கண் வைக்கிறது அரசு

air-lanka.jpgடுபாயைத் தளமாகக் கொண்ட அரபுலகத்தின் பாரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏயார் லைன்ஸ் நிறுவனமானது இலங்கை அரச கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்புகின்றதா? என்பது தொடர்பாக கொழும்பு அந்த நிறுவனத்தை அணுகியுள்ளதாக எமிரேட்ஸ் தலைவர் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் ஆர்வம் காட்டுகின்றோமா என்பது பற்றி அவர்கள் (இலங்கை அரசு) பார்க்க விரும்புவதாக தென்படுகிறது என்று எமிரேட்ஸ் தலைவர் ரிம் கிளார்க் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார். ஏயார் லைனுக்கான முகாமைத்துவ ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸில் இருந்த தனது 43.6 சதவீத பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்கப்போவதாக 2008 இல் எமிரேட்ஸ் கூறியிருந்தது.

தற்போதைய பேச்சுகள் இன்னரும் முன்னேற்றகரமான கட்டத்தில் இல்லையெனவும் ஆனால், விலை சரியானதாக இருந்தால் எமிரேட்ஸ் இந்த விடயத்தை கையாளும் எனவும் ரிம் கிளார்க் கூறியுள்ளார்.55 பில்லியன் டொலர் எயார் பஸ், போயிங் விமானங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொண்டுள்ளது.  11 விமானங்களை விநியோகிக்கவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை செலவிடுதல் ஒரு பிரச்சினையாக இல்லையெனவும் அது தெரிவித்திருந்தது.