வட மற்றும் தென் பகுதி மக்கள் தமக்கிடையிலான பழைய தொடர்புகளை யாழ்தேவி ஊடாக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை காண்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக அரச மற்றும் தனியார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்த நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது:- ‘தெற்கின் தோழன்’ நிதியம் பெளதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கு மட்டும் ஆரம்பிக்கப்படவில்லை வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்குமாகும். ‘தெற்கின் தோழன்’ நிதியத்துக்காக தனிப்பட்ட மட்டத்தில் கொடுக்கப்படும் நிதி அன்பளிப்புகளை விட பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க மட்டத்தில் வழங்கப்படும் நிதி அன்பளிப்புகளையே அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், நோலிமிட் நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தொழிற் சங்கம், இலங்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தாய் சங்கம், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம், இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி ஊழியர்கள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நவலோக கன்ஸ்ட்ரக்ஸன் தனியார் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் நேற்று ஜனாதிபதியிடம் நிதி அன்பளிப்புகளை கையளித்தன.