டுபாயைத் தளமாகக் கொண்ட அரபுலகத்தின் பாரிய விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் ஏயார் லைன்ஸ் நிறுவனமானது இலங்கை அரச கட்டுப்பாட்டிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு விரும்புகின்றதா? என்பது தொடர்பாக கொழும்பு அந்த நிறுவனத்தை அணுகியுள்ளதாக எமிரேட்ஸ் தலைவர் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறார்.
நாங்கள் ஆர்வம் காட்டுகின்றோமா என்பது பற்றி அவர்கள் (இலங்கை அரசு) பார்க்க விரும்புவதாக தென்படுகிறது என்று எமிரேட்ஸ் தலைவர் ரிம் கிளார்க் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்திருக்கிறார். ஏயார் லைனுக்கான முகாமைத்துவ ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்ட பின் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸில் இருந்த தனது 43.6 சதவீத பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்கப்போவதாக 2008 இல் எமிரேட்ஸ் கூறியிருந்தது.
தற்போதைய பேச்சுகள் இன்னரும் முன்னேற்றகரமான கட்டத்தில் இல்லையெனவும் ஆனால், விலை சரியானதாக இருந்தால் எமிரேட்ஸ் இந்த விடயத்தை கையாளும் எனவும் ரிம் கிளார்க் கூறியுள்ளார்.55 பில்லியன் டொலர் எயார் பஸ், போயிங் விமானங்களை எமிரேட்ஸ் விமான நிறுவனம் கொண்டுள்ளது. 11 விமானங்களை விநியோகிக்கவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை செலவிடுதல் ஒரு பிரச்சினையாக இல்லையெனவும் அது தெரிவித்திருந்தது.