யாழ். நல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை களில் மட்டும் கூடும் சந்தையை யாழ். மாநகர சபை ஆரம்பிக்கவுள்ளது. இச்சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பும் வர்த்தகர்கள் முன்கூட்டியே தமது பெயர் விபரங்களை மாநகர சபையின் நானாவித இறைவரிப் பகுதியில் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ். மாநகர முதல்வர் திருமதி யோ. பற்குணராசா அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அதிகளவு விலை கொடுத்து கொள்வனவு செய்யப்பட்ட பல விதமான வீட்டுப் பாவனைப் பொருட்கள் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் தென் பகுதியிலிருந்து யாழ். நகருக்குக் கொண்டு வரப்பட்டு மிகவும் மலிவான விலையில் நகரின் பல பாகங்களிலும் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வ்வாறான வியாபாரத்தை மையப்படுத்தி மக்கள் தமக்குத் தேவையான சகல பொருட்களையும் ஓரிடத்தில் பெற்றுக் கொள்ளுவதற்காகவும் யாழ். நகரின் மத்தியில் தற்போது அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைப்பதற்காகவும் நல்லூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் கூடும் விடுமுறைச் சந்தையை விரைவில் ஆரம்பிப்பதற்கு மாநகர சபை முன்வந்துள்ளது.
மாநகர சபையின் நல்லூர் இந்து விடுதிக் கட்டித்தின் பின்புறமுள்ள கடைகளுக்குப் புறமுள்ளதும், பிராமணக் கட்டுக் குளத்தின் அருகாமையிலுள்ளதுமான பரந்த வெற்றுக் காணியில் ஞாயிறு சந்தை விரைவில் உருவாக்கப்படவுள்ளது. நாளாவட்டத்தில் இவ்விடத்தில் இட நெருக்கடி ஏற்படுமிடத்து இவ்விடுமுறைச் சந்தையை நல்லூர் சூழலிலுள்ள வேறு இடங்களுக்கு விஸ்தரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.