எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஈ. பி. டி. பி. பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி இன்று சந்திப்பு

douglas-devananda.jpgதமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.

பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளி இன்று

இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு மாணவர்களை அனுமதிக்கும் சகல பாடத்துறைகளுக்குமான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக உயர்கல்வி அமைச்சர்எஸ்.பி. திசாநாயக்க பிரதி உயர்கல்வி அமைச்சர் என்.எம். ஏக்கநாயக்க ஆகியோர் வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ. சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத் தொழில்துறையை மையமாகக்கொண்டதாகவே நிகழ்காலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடத்துறைகள் அமையுமெனவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த வகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக கணினிக்கற்கைநெறி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மலேஷிய,பினாங் மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி இந்தியா வரத்தடை?

prof_ramasami.jpgமலேஷிய, பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனி.ராமசாமி இந்தியா வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக அரசு விடுத்துள்ளது. பேராசிரியர் ராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசிவருபவர் என இந்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி ட்கோவையில் இடம்பெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் ராமசாமி வருகை தருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹதிர் மொஹமட் நாளை இலங்கை வருகை

மலேசிய முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார். நாளை மாலை 5.45 மணியளவில் இலங்கை வரும் அவரை வரவேற்பதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வரும் மஹதிர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இங்கே தங்கியிருப்பார். அவர் இங்கிருக்கும் காலப் பகுதியில் பிரதமர் தி.மு. ஜயரட்னவை சந்தித்து பேச்சு நடத்துவாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி உலகசேவையில் முடிவுற்ற யுத்தம் பற்றிய நான்கு நாள் சிறப்பு நிகழ்ச்சி

Stephen_Sackur_HardTalkபிபிசி தொலைக்காட்சியின் உலக சேவையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஹாட் ரோக் இலங்கையின் வடபகுதியில் பதிவாக்கப்பட்டு உள்ளது. இன்று யூன் 7 முதல் நான்கு நாட்களுக்கு இலங்கை பற்றிய விசேட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தை இலங்கையரசு முடிவுக்கு கொண்டு வந்த முறை யுத்தத்தின் பின்னான சூழல் இனமுரண்பாட்டின் எதிர்காலம் ஆகிய விடயங்கள் இந்நிழ்ச்சியில் ஆராயப்பட இருப்பதாகத் தெரியவருகின்றது.

நான்கு நாள் நிகழ்ச்சியில் முதல் நாள்: ”தமிழர்களும் முறிந்த வடக்கும் – Tamils and the broken north” என்ற பதிவு இடம்பெறுகின்றது. இதில் ஹாட் ரோக் நிகழ்ச்சி வழங்குனர் ஸ்ரிபன் சக்கர் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் இன்னமும் காடுகளினுள் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தப்பி வந்த பொதுமக்கள் ஆகிய பல்வேறு தரப்பினருடனுமான நேர்காணல்களின் தொகுப்பு இடம்பெற இருக்கின்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ”அச்சத்தின் கீழ் ஜனநாயகம் – Democracy under threat” என்ற தலைப்பில் ராஜபக்ச சகோதரர்களிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் பற்றிய பதிவாக இது வருகின்றது.

முன்றாம் நாள் நிகழ்ச்சி ”தனது வாழ்க்கையை மீளக்கட்டமைக்கும் குழந்தைப் போராளி – Former Tiger child soldiers rebuilding their lives.” யின் கதையாக வருகின்றது.

இறுதியாக நான்காம் நாள் நிகழ்ச்சியில் இலங்கையில் மிகுந்த ஆளுமையும் அதிகாரமும் நிறைந்தவரான ஜனாதிபதியின் சகோதரர் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஹாட் ரோக்கின் ஹொட் சீற்றில் அமர்த்தப்படுகிறார். கோதபாய ராஜபக்சவுடனான நேர்காணல்.

இந்நிகழ்ச்சிகளை ஹாட் ரோக் நிகழ்ச்சிக்காக ஸ்ரிபன் சக்கர்க்கு வடக்கே யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிபிசி தெரிவித்து உள்ளது.

HARDtalk நிகழ்ச்சி நேரம்:
BBC NEWS CHANNEL (UK): Mondays, Tuesdays, Wednesdays and Fridays – 0430 and 2330
BBC WORLD NEWS: Mon to Thurs – 03:30, 08:30, 15:30, 20:30

வட பகுதிகளில் மக்கள் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வுள் மேற்கொள்வது முக்கியமானதாம்!

வடக்கில்  மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக அங்குள்ள தொல்லியல் மையங்களை அடையாளம் கண்டு அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என தொல்லியல் திணைக்கள பிரதிப் பொதுப் பணிப்பாளர் கலாநிதி நிமல் பெரேரா கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவனியா, மன்னார் உள்ளிட்ட வடமாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொல்லியல்சார் இடங்களை அடையாளம் கண்டு யு.என்.டி.பியின் நிதியுதவியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

30 வருடங்கள் வடபகுதியில் போர் நடைபெற்றதால் தொல்லியல் சார் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடமுடியவில்லை. அதனால், தற்போது அப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் கண்ணிவெடிகள் மற்றும், வெடிபொருட்களை  அகற்றிய பின்னரே முழுமையாக மீள்குடியேற்றப்படுவர் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. அதனால் நிவாரண முகாம்களில் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் ஊர்களில் மீள்குடியேற்றப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் யுத்தத்திற்கு ஊக்கமளித்த ரிஎன்ஏ வட பகுதி மக்களின் அவலங்களுக்கு முக்கிய பொறுப்பு – பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vவடபகுதி மக்களின் இன்றைய அவலங்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பும் முக்கியமாக பொறுப்பேற்க வேண்டும் என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தான் வெளியேறிய போதிலும், தமிழ்தேசியக்கூட்டமைப்பு யுத்தத்தை முன்னெடுப்பதற்கு புலிகளுக்கு ஊக்கமளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்களின் நிலைமைகள் திருப்தியடையக் கூடிய நிலையில் இல்லை என்பது உண்மை. ஆனால் குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றம் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமானது. கூட்டமைப்பினர் குறைகளைக் கண்டு பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாது, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. இவை இப்போது இரண்டு மாகாணங்களாக செயற்படுவதில் தவறில்லை. இரு மாகாண அலகுகளாக இயங்குவதன் மூலம் அதிகளவு வளங்களை ஒதுக்கீடு செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘வெசாக்’ கொண்டாட்டத்திற்காக நயினாதீவுக்கு 27 ஆயிரம் சிங்கள மக்கள் வந்து சென்றுள்ளனர்!

யாழ். மாவட்டத்தில் இம்முறை நடைபெற்ற ‘வெசாக்’  பண்டிகை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து 27 ஆயிரம் பேர் நயினாதீவு நாகவிகாரைக்கு வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையினர் மேற்படி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். புங்குடுதீவு கடற்படையினரும், குறிக்கட்டுவான் பொலிஸாரும் இணைந்து இம்மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் யாழ்.மாவட்டத்தில் முன்னரெப்போதும் இல்லாத அளவில் ‘வெசாக்’கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியத்தின் போராளி மகரசிங்கம் காலமானார்!

Maharasingam_Sதமிழ்த் தேசியத்தின் போராளியான மகரசிங்கம் இன்று (யூன் 4 2010ல்) காலமானார். யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை இனப் பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்த மிக ஆரம்பகாலத்தவர் ஆவார். தென்கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவ இல்லத்தில் தனது 87வது வயதில் உயிர் நீத்துள்ளார்.

பிரித்தானியாவில் தமிழ் தேசியத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்ததில் மகரசிங்கம் குறிப்பிடத்தக்கவர். இவரே பிரித்தானியாவில் தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராக முதன் முதலில் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.

Maharasingam_Sபிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் அரசியல் தஞ்சம்கோரிப் புலம்பெயர்ந்த போது அவர்களுக்கான உதவி நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். தமிழ் அக்சன் கொமிட்டி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக அரசியல் தஞ்சம் கோரிப் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்தார். தமிழ் மக்கள் மீதான இனஒடுக்குமுறைக்கு எதிராகவும் அகதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் மகரசிங்கம் ஐநா வின் வெவ்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தவர்.

1980க்களின் இறுதிப்பகுதியில் பிரித்தானியத் தமிழர்களின் பிரதிநிதியாகத் தன்னை அறிவித்துக் கொண்ட மகரசிங்கம் அதற்கான கையெழுத்து வேட்டையையும் நடாத்தி இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை வன்னியில் இருந்திருந்தால் மகரசிங்கம் அவர்கள் நாட்டுப் பற்றாளராக கெளரவிக்கப்பட்டு இருப்பார்.

iifaவின் சிறந்த திரைப்படத்திற்கான விருது “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு

iifa-colombo.jpgகொழும் பில் நடைபெற்ற iifa சர்வதேச இந்திய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது “பா” திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனுக்கும் சிறந்த நடிகைக்கான விருது “பா” திரைப்படத்திற்காக விஜய பாலனுக்கும், “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்காக கரீனா கப்பூருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்டார் பிளஸ் புதுமுக நடிகைக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த ஜெக்குலின் பெர்ணான்டஸ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது விது வினோத் சொப்ரா தயாரித்த “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் வழங்கப்பட்ட ஏனைய விருதுகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு :- 

ஸ்டார் பிளஸ் வருடத்தின் சிறந்த புதுமுக நடிகை :-  மாஹி கில்
ஸ்டார் பிளஸ் வருடத்தின் புதுமுக நடிகர் :- ஜாக்கி பக்னனி
குளோபல் கிறீன் விருது :- விவேக் ஒப ரோய்
சிறந்த இசையமைப்பாளர் :- பிரிதம் சக்ர போர்த்தி
சிறந்த பாடலாசிரியர்  :- ஸ்வானந்த் கேர்கிரே
சிறந்த பின்னணி பாடகி  :- கவிதா சேத்
சிறந்த பின்னணி பாடகர்  :- ஷான்
சிறந்த திரைக்கதை: 3 இடியட்ஸ்
சிறந்த ஒளிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த வசனம்: 3 இடியட்ஸ்
சிறந்த பின்னணிஇசை: 3 இடியட்ஸ்
சிறந்த எடிட்டிங்: 3 இடியட்ஸ்
சிறந்த ஒலிப்பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த பாடல் பதிவு: 3 இடியட்ஸ்
சிறந்த ஆடையலங்காரம்: அனாஹிதா ஷெரோப், டோலி அஹ்லுவாலியா
சிறந்த கலை இயக்குநர்: சாபு சிரில்
சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர்: ஷாம் கௌஷல்
சிறந்த மேக்அப் கிறிஸ்றீன் டின்ஸ்லே, டொமினி டில்