எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளார்கள் உள்ளதாக  தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கல்விப்பணியகம் வெளியிட்டுள்ள இத்தகவலில், தனிப்பட்ட முறையிலும் பாலியல் மையங்களிலும் இரகசியமாக இவர்கள் செயற்பட்டு வருவதால் துல்லியமான கணக்கெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமலுள்ளதாக சுகாதாரக்கல்விப்பணியகத்தின் ஊடக இணைப்பாளர் டொக்ரர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய பாலியல் தொற்றுநோய் மற்றும், எயிட்ஸ் கட்டப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதும் 30 ஆயிரம் தொடக்கம் 40ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘மசாஜ்’ நிலையங்கள், நடமாடும் பாலியல் மையங்கள் ஊடாகவும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம். இருவரின் நிலை கவலைக்கிடம்!

இன்று (Aug 08 2010) மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரம்புக்கணையை சொந்த இடமாகக் கொண்ட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  பயணம் செய்து கொண்டிருந்த இவர்களின் முச்சக்கரவண்டி எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.  படுகாயமடைந்துள்ளவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

SriLanka_MAS_Factoryதென் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ். செயலகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியொன்றின் மூலம தொழில்உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இவ்வேலைவாய்ப்ப வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27, 28, 29ம் திகதிகளில் மாவட்ட திட்டமிடல் செயலகத்தினால் 145 மாணவர்களுக்கு ஆடைத் தொழிற்சாலைத்துறை சம்பந்தமான செயலமர்வு நடத்தப்பட்டது.  இவர்களில் 70 பேருக்கே தற்போது இவ்வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான உணவு, தங்குமிடவசதிகள் என்பன குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்!

IDP_Camp வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 4ம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கைகள் இம்மாதம் 30 திகதி வரை நடைபெறும் என கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகள் என்ற அடிப்படையில் இம்மீள்குடியேற்ற நடவடிக்கைககள் நடைபெற்று வருகின்றன.  இறுதிக்கட்ட போரின் போது வன்னியிலிருந்து வெளியேறி வவுனியா அகதிமுகாம்களில் இருந்து பின்னர் வெளி மாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

IDP_Campவெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மக்களுக்கான இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவென அறிவிக்கப்பட்டள்ளதால் பெருமளவிலான மக்கள் தற்போது கிளிநொச்சியிலுள்ள தங்கள் சொந்தக் காணிகளில் மீள்குடியமரும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளநொச்சி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள இடைக்கால முகாமில் வைத்து கிளிநொச்சிப் பகுதி மக்களுக்கான இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை 9 மணியிலிருந்து மாலை வரை இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் கிராமசேவையாளரின் பதிவுகள், பின்னர் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் பதிவுகள் மற்றும், அவர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் பதிவுகளும் பின்னர் அவர்களாலும் புகைப்படம் பிடிக்கப்படுகின்றன. அதன் பின்னர் அவ்வப்பகுதி சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள இராணுவத்தினர் பதவுகளுக்குற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் காணிகளில் கொண்டு சென்று விடுகின்றனர். முன்னர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 12 கூரைத் தகரங்கள் கொடுக்கப்பட்டன. பின்னர் தறப்பாள்கள் கொடுக்கப்பட்டன. தற்போது எதுவும் கொடுக்கப்படாத நிலையில் தங்கள் வீடுகள் அழிவடைந்த, சேதமுற்ற நிலையில் மிகவும் வசதியற்ற நிலையில் மக்கள் தங்களது காணிகளில் மீள்குடியமர்ந்து வருகின்றனர்.

இதே வேளை, படைத்தரப்பின் பதிவுகள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வுகளின் போது மக்கள் நீண்ட நேரங்கள் வரிசைகளில் காத்திருந்து பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வன்னியில் மீண்டும் குண்டுச்சத்தங்கள்!

Control_Explosionவன்னிப் பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் குண்டுச்சத்தங்களின் அதிர்வுகளை பல சந்தர்ப்பங்களில் கேட்க முடிகிறது. இன்றும் (08-08-2010) கிளிநொச்சிப் பகுதிகளில் இச்சத்தங்களை கேட்க முடிந்தது. படையினரால் மீட்கப்படும் வெடிபொருட்கள் சில சமயங்களில் வெடிக்கவைக்கும் போது இச்சத்தங்களை  மக்களால் உணரமுடிகின்றது. எனினும் கடந்தகால போரின் கொடுமைகளில் சிக்கியிருந்த மக்கள் இவ்வாறான ஒலிகளை கேட்கும் போது அச்சமடைகின்றனர். போரின் நினைவுகள் அவர்கள் மனங்களில் மீண்டும் எதிரொலிக்கின்றன.

இது இவ்வாறிருக்க, யாழ்.குடாநாட்டிலுள்ள மக்கள் வன்னி நிலமைகள் தொடர்பாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். வன்னியில் சில இடங்களில் சண்டை நடைபெறுவதாகவும், விமானக்குண்டு வீச்சுக்கள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தங்களுக்குள்  வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் வன்னிப்பகுதிகளில் சில சமயங்களில் கேட்கும் வெடிகுண்டு சத்தங்கள் படையினரால் மீட்கப்படும் அல்லது, அவர்களால் செயலிழிக்கச் செய்யப்படும் குண்டுகளின் ஒலி என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு: – 15 பேர் கொண்ட இலங்கை மருத்துவக் குழு பாக். பயணம்

doctor.jpgபாகிஸ் தானின் பல பிரதேசங்களில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களிடையே தொற்று நோய்கள் பரவக் கூடும் என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள இலங்கையிலிருந்து விசேட மருத்துவ குழுவொன்றை அனுப்பிவைக்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கேற்ப 15 பேரைக் கொண்ட விசேட மருத்துவ குழுவை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாடு கன்னியாகுமரி விடுதியொன்றில் தங்கியிருந்த 6 இலங்கையர்களை தமிழக பொலீஸார் வௌ்ளியிரவு கைது செய்துள்ளனர். தமிழக பொலிஸ் உயர் அதிகாரி பி.சக்திவேலின் தகவலின் படி இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜொன்ஸன் (20), அருள் பிரதாப் (24), ஜீவா (30), சதீஷ் (22), விமல் ராஜ் (25), ஜெயச்சந்திரன் (26) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்

5800 இலங்கையருக்கு இம்முறை ஹஜ்ஜை நிறைவேற்ற வாய்ப்பு பெளசிக்கு சவூதி அமைச்சர் அறிவிப்பு

haji.jpgஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 5800 இலங்கையருக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளசி தெரிவித்தார்.

கோட்டா அடிப்படையில் இலங்கையர் 2800 பேருக்கே புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையிலிருந்து ஹஜ் நிறைவேற்ற செல்வோரின் தொகையை அதிகரித்துத் தருமாறு அமைச்சர் ஏ. எச். எம். பெளசி சவூதி அரசிடம் விடுத்த

வேண்டுகோளுக்கமையவே இவ்வதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெளஸி தலைமையிலான குழுவினர் அண்மையில் சவூதி அரேபியா சென்று சவூதி மன்னர், ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சவூதி அரேபியாவின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் புசூட் பின் அப்துல் கலாம் அல் பாரிஸ் இத்தகவலை அமைச்சர் ஏ. எச். எம். பெளசிக்கு அறிவித்துள்ளார்.  ஹஜ்ஜாஜிகளின் தொகையை அதிகரித்து தந்ததற்காக அமைச்சர் பெளஸி, சவூதி மன்னர் மற்றும் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 1000 வீடமைப்பு திட்டம்; முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாக கட்டிக்கொடுக்கப்படவுள்ள 1000 மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்திய அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் இந்தியா முதற் கட்டமாக கட்டிக்கொடுக்கவுள்ளது.

மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையில் உள்ள வடபகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக இந்தியா கட்டிக்கொடுக்கவுள்ள 50,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளையும் ஜனாதிபதி செயலணி ஆரம்பித்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

இதே போன்று மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்தியா வழங்கும் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சவூதியில் நிர்க்கதியான பணிப்பெண்களை உடன் அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgசவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்துவர விசேட விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல். கே. ருகுணுகே தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று 44 பணிப்பெண்களும் நாளை மறுதினம் (11) 100 பணிப்பெண்களும் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் பணிப்பெண்களை அழைத்து வருவதற்காக விசேடமாக மிஹின் லங்கா விமானம் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த 250 பணிப்பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமது வேலையைக் கை விட்டுவிட்டு சவூதி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் சவூதியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன் னெடுக்கவில்லையெனவும் பல ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. உண்மையில், அவர்கள் அங்கு சிறைவைக்கப்படவில்லை. சகல வசதிகளுடனுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமான இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கால தாமதமே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டினாலும் மிஹின் லங்கா விமானம் மூலம் ஒரே தடவையில் நாளை மறுதினம் 100 பேர் அழைத்து வரப்படவிருப்பதாகவும் எல். கே. ருகுணுகே கூறினார்.

இன்று காலை 2.30 மணிக்கு 44 பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.