வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாக கட்டிக்கொடுக்கப்படவுள்ள 1000 மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்திய அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் இந்தியா முதற் கட்டமாக கட்டிக்கொடுக்கவுள்ளது.
மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்தியா இலங்கையில் உள்ள வடபகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக இந்தியா கட்டிக்கொடுக்கவுள்ள 50,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளையும் ஜனாதிபதி செயலணி ஆரம்பித்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.
இதே போன்று மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்தியா வழங்கும் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.