எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

புனர்வாழ்வு பெற்ற 30 பேர் 27 இல் பெற்றோரிடம் ஒப்படைப்பு – 59 குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு உதவிகள்

புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 30 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இம்முறை ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் சுகயீனமுற்ற 30 பேரை விடுவிக்க நட வடிக்கை எடுத்திருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

மோதல்களின் போது புலி உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கமைய சரணடைந்த பல்வேறு வயதிற்குட்பட்டவர்கள் வெவ் வேறு புனர்வாழ்வுநிலையங்களின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் வயதெல்லை அடிப்படையில் இவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரையில் 3080 முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்குரிய விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் கடும் சுகயீனமுற்ற 30 பேரே அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 59 குடும்பத்தாருக்கு சுய தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கான உபகரணங்கள், மரக்கன்றுகள், களை நாசினிகள் ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு அமை ச்சுடன் இணைந்து விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

அவுஸ்திரேலிய – எழுபது வருடங்களின் பின்னர் தொங்கு பாராளுமன்றம்

aus.jpgஅவுஸ்தி ரேலியாவில் சனிக்கிழமை நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனால் டொனி அபொட் தலைமையிலான எதிர்க்கட்சி பிரதமர் ஜுலியட் கிலாட் தலைமையிலான ஆளும்கட்சியைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாகப் பெற்றது.

மொத்தம் 150 ஆசனங்களைத் தெரிவு செய்ய சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடந்தது.  இதில் 76 ஆசனங்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைக்க முடியும். ஆனால் பிரதமர் தலைமையிலான கட்சி 72 ஆசனங்களையும் எதிர்க்கட்சி 73 ஆசனங்களையும் பெற்றது. எழுபது வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலே இம்முடிவுகள் வெளியாகின.

முன்னாள் பிரதமர் கெவின்ரூட்டை தண்டிக்கும் வகையில் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் மீதமாகவுள்ள ஐந்து ஆசனங்களின் முடிவுகள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் எழுபது வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் தொங்கு பாராளுமன்றம் அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1932ம் ஆண்டுக்குப் பின்னர் குறுகிய கால ஆயுள் தொழிற்கட்சிக்கு கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும். 2007ல் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று கெவின்ருட் பிரதமரானார். இரண்டு மாதங்களுக்குமுன்னர் பிரதமர் கெவின்ருட்டுக் கெதிரான எதிர்ப்புகள் கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஏற்பட்டது. காலநிலைமாற்றக் கொள்ளை வரிவிதிப்பு, பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கை தொடர்பாகவே பிரதமர் மீதான எதிர்ப்பு வலுப் பெற்றது. இதையடுத்து கெவின்ருட் பதவி விலகி ஜுலியட் கிலாட் பிரதமரானார். அவுஸ்திரேலியவின் பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஜுலியட்கிலாட் பெற்றுக் கொண்டார்.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வளர்வதற்கிடையில் மீண்டுமொரு தேர்தலை ஜுலியட் கிலாட் அறிவித்தார். இதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இடைநடுவில் துண்டிக்கப்பட்டது. தற்போது வெளியான முடிவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஜுலியட் கிலாட் இனிவருங்காலம் மோசமானதாக இருக்கும். அரசாங்கத்தை அமைப்பதற்கான பேரம் பேசும் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் என்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் டொனி அபொட் கூறுகையில் என்ன வகையிலும் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சவார்த்தைகளில் தனது கட்சி மும்முரமாகச் செயற்படுமென்றும் டொனி அபொட் தெரிவித்தார்.

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை: விடை சொல்லிக் கொடுத்த 3 ஆசிரியர் மீது நடவடிக்கை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்றதுடன், பரீட்சை மண்டபத்தில் விடைகளை மாணவர்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக மூன்று ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்புக்கு வெளியே இவ்வாறு நடைபெற்றுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2744 பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நேற்று நடைபெற்றதுடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் செம்டம்பர் 4ம் திகதி ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர் அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தாகவும் தெரிவித்தார்

இலங்கை அணி வெற்றி

randiv.gifஇலங்கை இந்திய அணிகளுக்கிடையே தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை பெற்றது.

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 60 பில்லியன் ரூபா தேவை – அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவிப்பு

jaffna-town.jpgயாழ்.  மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 60 பில்லியன் ரூபா தேவை என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சியாவோ யூ. சர்வோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு வியாழன் மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.

இக்குழுவினர் யாழ். செயலகத்தில் யாழ். அரச அதிகர் இமெல்டா சுகுமார் தலை மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பேசிய யாழ். அரச அதிபர் கூறியதாவது,

யாழ். மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆறாவது திட்டமாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே யான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்திற்கு 20 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளது. அத்துடன் அரச திணைக்கள புனரமைப்புக்கு 226 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 வீதிகள் புனரமைப்புக்கும் இறங்குதுறை புனரமைப்புக்கும் நிதி வழங்கி வருகிறது. நெடுந்தீவு – குறிக் கட்டுவான் இடையில் பயணிகள் சேவையிலீடுபடுத்துவதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதுதவிர சுகாதார சேவைகளுக்கு 160 மில்லியன் ரூபா, போதனா வைத் தியசாலைக்கு ஆயிரத்து 395.50 மில்லியன் ரூபா, விவசாயத்துறைக்கு 543.50 மில்லியன் ரூபா, சுயதொழில் கடன் தேவைகளுக்கு 100 மில்லியன் ரூபா, மின்சாரத் துறைக்கு ஆயிரத்து 123 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் துறைக்கு இரண்டாயிரத்து 810.38 மில்லியன் ரூபா, வீதி அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா. இன்னமும் தேவைப்படுவதாக அரச அதிபர் எடுத்து விளக்கினார்.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் – உரியவர்களை அடையாளம் காணும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்

kilinochchi-district.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.

இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுமென்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கணக் காளர் ஜெயராசா  தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தேர்தலில் ஜூலியாவின் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை

அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்   தலைமையிலான தொழிற்கட்சி தோல்வியைத் தழுவும் சாத்தியம் காணப்படுகிறது.

12.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜூலியாவின் தொழிற்கட்சி 49.2 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 50.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
2007 தேர்தலில் தொழிற்கட்சி பெற்றிருந்த வாக்குகளின் 3.5 சதவீதம் எதிரணிக் கூட்டணி வசம் சென்றுள்ளது. 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

பொன்சேகா மீது இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை

sf.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.  நேற்றைய அமர்வில் நான்காவது சாட்சியின் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியால் குறுக்கு விசாரணை இடம் பெற்றதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவலவை மேற்கோள்காட்டி இணையத்தள செய்திச்சேவை தெரிவித்தது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு இராணுவ நீதிமன்ற அமர்வு இடை நிறுத்தப்பட்டதுடன் நாளை திங்கட்கிழமை 2 மணிக்கு மீண்டும் அமர்வு இடம் பெறும் என்று பேச்சாளர் கூறியுள்ளார். பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்த போது இலங்கை இராணுவத்துக்கு முறையற்ற விதத்தில் கொள்வனவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம் பெறுகிறது.

இந்தியா – இலங்கை இன்று மோதல் : யுவராஜ்சிங் உடல் தகுதி

randiv.gifஇந்தியா,  இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை 4 ஆட்டம் முடிந்துள்ளன. அதன்படி நியூசிலாந்து 7 புள்ளியுடனும், இலங்கை 6 புள்ளியுடனும், இந்தியா 5 புள்ளியுடனும் உள்ளன.

5-வது “லீக்” ஆட்டம் தம்புள்ளவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடும்.

கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடாத யுவராஜ்சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். அவர் இடம் பெறும் பட்சத்தில் வீரட் கோக்லி அல்லது ரோகித் சர்மா நீக்கப்படலாம்.

நாடு முழுவதும் இன்று இடியுடன் கடும் மழை – பலத்த காற்று; மின்னல் தாக்கம்:

rain0000.jpgதென் மேற்கு பருவ காலநிலை தீவிர மடைந்திருப்பதால் நாட்டின் பல பகுதி களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதென காலநிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது. சில இடங்களில் இன்று 100 மி.மீற்றருக்கும் கூடுதலான மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக் கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மேற்கு, சப்ர கமுவ, மத்திய மாகாணங்களில் பரவலான மழை பெய்யும். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டது. இதேநேரம், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் மழை பெய்யும்.

மின்னல் தாக்கமும் அதிகமாக இருக்குமென காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 90.6 மி.மீ மழை பெய்துள்ளது.

மலையகத்தில் நீரேந்து பகுதிகளிலும் கூடுதலான மழை பெய்துள்ளது. இதன்படி, லக்ஷபானவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக 141.8 மி.மீ மழை பெய்துள்ளது. நோட்டன் பிறிட்ஜில் 138 மி.மீ மழையும் கென்யனில் 112 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதற்கிடையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 139.9 மி.மீ மழை கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.