எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாருமே இல்லாத கிளிநொச்சியைத் தான் ராணுவம் பிடித்துள்ளது.- புலிகள் கருத்து

0301-ltte.jpgயாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமையகத்தையும் நாங்கள் ஏற்கனவே மாற்றி விட்டோம் என விடுதலைப் புலிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ந்தது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆட்களே வசிக்காத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளதாக அவர்கள் சார்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், கிளிநொச்சியில், இருந்த மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஏற்கனவே வட கிழக்குக்கு இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமை அலுவலகமும் வட கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மொத்தத்தில் யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது.

கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை * ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக “இந்து’ ஆசிரியர் ராம் தெரிவிப்பு

கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் “இந்து’ பத்திரிகையின் முதல் பக்கத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது “பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை’ படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். “அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்’ என்று ராஜபக்ஷ கூறினார்.

விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.

“கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை’

கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை. இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது; விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது. தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.

இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.

கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது. கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார

விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் – அமெரிக்கா யோசனை

kili-04.jpg
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், அவர்களது கோரிக்கை தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா இவ்வாறு யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கார்டன் டூகிட் கூறுகையில், இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றார் டூகிட்.

முல்லை நோக்கி முன்னேறும் படைக்கு உதவியாக நேற்று 4 தடவைகள் கடும் விமானத் தாக்குதல்

mi24-1912.jpg
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தினருக்கு உதவியாக விமானப் படையினர் நேற்று நான்கு தடவைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மற்றும் பலமான நிலைகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. – 24 ரக விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒட்டுச்சுட்டானுக்கு வடகிழக்கே உள்ள புலிகளின் பலமான நிலைகளை இலக்கு வைத்து நேற்றுக்காலை 6.15 மணியளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு தெற்காக முன்னேறிவரும் இராணுவத்தின் 59 வது படைப்பிரிவினருக்கு உதவியாக நேற்றுக்காலை 6.15 மணியளவிலும் 10.30 மணியளவிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது செயலணியினருக்கு உதவியாக பரந்தன் முல்லைத்தீவு வீதியை நோக்கி நேற்றுப் பிற்பகல் 1.15 மணியளவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளை முல்லைத்தீவு களப்பு பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளம் ஒன்றை இலக்கு வைத்து நேற்றுப் பிற்பகல் 2.10 மணியளவில் விமானப் படையின் ஜெட் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்களை அடுத்து அங்கிருந்த கடற்புலிகள் முல்லைத்தீவிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை ஆணையிறவு, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள கடற்புலித் தளம், ஆயுத முகாம், தொலைத்தொடர்பு நிலையம் மற்றும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து நேற்று முன்தினம் பத்துத் தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு

rambukwella.jpg
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.  எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.

மத்திய வங்கி குண்டுவெடிப்பு பிரதான சந்தேக நபர் கைது

centralbank.jpgமத்திய வங்கி குண்டுவெடிப்புடன் தொடர்பான பிரதான சந்தேக நபரை வவுனியா இரட்டைபெரியகுளம் சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர், வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் கடந்த 30 ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்டார்.

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் அர்ஜுன கொடிகாரவின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய வங்கி குண்டுவெடிப்பின் பிரதான சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது. மாவட்ட நீதிவான் சந்தேக நபரை, எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பொலிஸார் பொதுமக்களிடையே நல்லுறவுகளை பலப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும்’

blast.jpg பொலிஸாருக்கும் ,பொதுமக்களுக்குமுள்ள நல்லுறவுகள் பலப்படுத்தப்படும் போதே குற்றச் செயல்களை பெருமளவில் குறைக்க முடியும். ஆகையால் பொலிஸாருக்கு பொதுமக்கள் கூடிய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் மத்துரட்ட தெரிவித்தார். பசறை மியன்கந்துர கிராமத்தின் சமூகதிட்ட மொன்றினை ஆரம்பித்து வைத்ததன் பின் அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் தலைமை வகித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது, மியன்கந்துர ஏத்பிட்டிய கிராமியப்பாதை சீரமைப்பு, வைத்திய சிகிச்சை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை போன்ற வேலைத்திட்டங்களை பதுளை பொலிஸ் அதிகாரி சுனில் மத்துரட்ட வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது கூறியதாவது;” தற்போதைய நிலையில் பொலிஸாரை பலவாறாக விமர்சிக்கும் வகையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பொலிஸார் மிகவும் மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் தொடர்பாக எமக்கு கிடைக்கும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் கவனத்திற்கு எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிடைக்கப்பெற்ற புகார்கள் ஊர்ஜிதப்படுத்தப்படும் போது சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது போன்ற விடயங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பொலிஸாருடனான நல்லுறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படவேண்டும் என்பதை நான் விரும்புகின்றேன். குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களினால் எப்பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. மியன்கந்துர போன்ற பின்தள்ளப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று அக்கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதற்கமைவான வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கவேண்டும்.

அதுவே மக்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும். பொலிஸாருக்கும், பொதுமக்களுக்குமான நல்லுறவுகள் பேணப்படவேண்டும்’ என்றார்

மூன்று முறைப்பாடுகள் – பவ்ரல் அறிவிப்பு

vote.jpg
தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பிற்கு இது வரை மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாவட்டங்களிலும் நிலையங்களை அமைத்து வன்முறை தொடர்பில் அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவிக்கையில் கூறியதாவது;

வேட்புமனு திகதி அறிவிக்கப்பட்டது முதல் இன்று(03) வரை நாம் மூன்று தேர்தல் வன்முறைகளை பதிவு செய்துள்ளோம். நேற்று முன்தினம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி ஹோங்ககே தனதுதேர்தல் அலுவலகத்தை அமைத்த போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது சகோதரி காயமடைந்துள்ளார். இதற்கு அடுத்ததாக மிகப்பெரிய தேர்தல் வன்முறை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்ததினமான டிசம்பர் 31 ஆம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது. மற்றைய மூன்றாவது சம்பவமும் நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் நாம் 5 மாவட்டங்களிலும் எமது நிலையங்களை அமைத்து அவதானித்து வருவதுடன் இதனை அவதானிப்பதற்கு இரு மாகாணங்களிலும் 3 ஆயிரம் பேரை நாம் பயிற்சியளித்து நியமித்துள்ளோம் . 2,400 பேர் நிலையாகவும் 600 பேர் நடமாடியும் இதனை அவதானிக்கவுள்ளனர்.தற்போது இரு மாகாணங்களிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆள் அடையாள அட்டை இல்லாமையால் வாக்களிக்க முடியாது வாக்களிக்கும் உரிமையை இழக்கவுள்ளனர். இதனால் இவர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம் என்றார

நுவரெலியாவில் கடும் பனி; இயல்பு நிலை ஸ்தம்பிதம் -தோட்டத் தொழிலாளர்கள் மோசமாக பாதிப்பு

நுவரெலியா பிரதேசத்தில் பனிமழை பெய்யும் காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்களுக்குள் பெய்த பனி மழையினால் நுவரெலியா, கந்தப்பளை,ஹைபொரஸ்ட் , நானுஓயா, ரதல்ல போன்ற இடங்களிலுள்ள தோட்டங்களில் தேயிலை கொழுந்துகள் கருகிப் போயுள்ளது. தற்போது நுவரெலியாவில் இரவில் வழமை நாட்களை விட குளிர் அதிகமாகவும் பகலில் சூரிய வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே இப்பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் வேலைநாட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்தன.

தற்பொழுது பனியினால் தேயிலை கொழுந்து கருகியதால் மேலும் வேலைநாட்கள் குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மேலும் இப்பிரதேச தோட்ட தொழிலாளர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றார்கள். இதேவேளை, இப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு , பீட் , கரட், உட்பட மரக்கறி செடிகளும் புற்தரைகளும் கருகிப்போயுள்ளன. உருளைக் கிழங்கு , மரக்கறி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயன உரம் , மருந்து விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இயற்கை பனியாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இப்பகுதியிலுள்ள புற்தரைகளும் கருகியதால் இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பவர்களும் கால்நடைகளுக்கு உணவு தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. நுவரெலியாவில் பனி காலம் ஆரம்பித்ததையடுத்து இப்பகுதி மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் – தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

kili-01.jpgகிளி நொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம்  கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்

0301-bush.jpgஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.