எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற இலங்கையர் மூவர் கைது

handcuff.jpgஐக்கிய அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்ற இலங்கையர் மூவரும் அவர்களுக்கு உதவியவர் ஒருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். மக் அலனிலுள்ள மில்லர் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று சட்டவிரோத குடிவரவாளர்களுக்கான விமானப் பயணச் சீட்டுகள், போலி கனேடிய அடையாள அட்டைகளுடன், கனடாவைச் சேர்ந்த சுரேஷ் சுந்தரலிங்கம் (வயது 28) என்பவரை கைது செய்தனர்

அத்துடன், அவரின் உதவியுடன் ஐக்கிய அமெரிக்காவினுட் புக முனைந்த இலங்கையர் மூவரும் அமெரிக்க எல்லைப்பகுதி ரோந்து படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தம் குடும்பத்தை ஐக்கிய அமெரிக்கா மெச்சிக்கோ ஊடாக கனடாவுக்கு அழைத்துச் செல்வதற்காக 32 ஆயிரம் டொலர்களை சுந்தரலிங்கத்திற்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், வழக்கறிஞரின்றி புலனாய்வாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு சுந்தரலிங்கம் மறுத்து விட்டார். இந்நால்வரதும் ஆரம்ப விசாரணைகள் நாளை இடம் பெறும். உரிய மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் தமிழ் மொழியிலேயே வாக்கு மூலம் அளிப்பர்.

வடமேல், மத்திய மாகாண தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கு 75000 பேர் விண்ணப்பம்

ballot-box.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கென 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட் டாரங்கள் தெரிவித்தன. இரண்டு மாகாணங்களிலுமுள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களினது தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமே இவ்விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தகுதியுள்ளோர் பெப்ரவரி 02ஆம் 03ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும். இதற்கான வாக்குச்சீட்டுக்கள் இம் மாதம் 21ஆம் திகதி கிடைக்கும் வகையில் ஐந்து மாவட்டங்களது தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் கூறின.

சென்னை விமான நிலையத்தில் பெண்அதிகாரியிடம் சச்சரவில் ஈடுபட்ட இலங்கை நபர் கைது

air.jpgவிமான நிலைய பெண் அதிகாரியிடம் போதையில் ரகளையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்தனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவீந்திரன் (வயது 33). லண்டனில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருபவர். இவர் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு லண்டனுக்கு புறப்படும் ஜெட் எயார்வேஸில் டிக்கெட் எடுத்திருந்தார்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரது சகோதரி வசிக்கும் தாம்பரம் சேலையூருக்குச் சென்றார். பின் மதுக்கடையில் நுழைந்து மதுஅருந்தி விட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு ஜெட்எயார்வேய்ஸ் விமான அதிகாரி தேவி (வயது 30) நவீந்திரனின் விசா மற்றும் பாஸ்போட்டை சோதனை செய்ய முயன்றார். நவீந்திரன் குடிபோதையில் இருந்ததால் “இன்று விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது. நாளை செல்லும் விமானத்தில் அனுப்புகிறோம் ‘ என தேவி கூறினார்.

இதில் கோபமடைந்த நவீந்திரன் “நான் யார் தெரியுமா? என்னுடைய செல்வாக்கு என்ன” என விமானப்பெண் அதிகாரி தேவியிடம் ரகளையில் ஈடுபட்டார். இதையறிந்த விமான நிலைய பொலிஸார் குடிபோதையில் இருந்த நவீந்திரனை அழைத்துச் சென்று குரோம்பேட்டை அரச மருத்துவமனையில் மருத்துவச் சான்று பெற்றனர். அதன்பின் அவர் மீது பொலிஸார் வழக்கு பதிந்து ஆலந்தூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லண்டன் நியூஹாமில் எளிமையுடன் தைப்பொங்கல் – வீதி விளக்குகளுக்கு துணைமேயர் ஒளியூட்டினார். : த ஜெயபாலன்

Pongal_Newham_2009தமிழர்களின் புது வருடப் பிறப்பாகிய தைப்பொங்கல் லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் தெரு விளக்குகள் ஒளியூட்டப்பட்டு அமைதியான முறையில் நடைபெற்றது. ஐரோப்பாவில் தைப்பொங்கல் தினம் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படும் ஒரே நகரம் லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஹாம் துணை மேயர் கிறிஸ்ரைன் போல்டன் தெருவிளக்குகளுக்கு ஒளியூட்டி தமிழ் புதுவருடத்தை வரவேற்றார்.

2001 முதல் கடந்த எட்டு ஆண்டுகளாக தைப்பொங்கலையொட்டி வீதி விளக்குகளுக்கு ஒளியூட்டும் நிகழ்வு ஈஸ்ற்ஹாமில் இடம்பெற்று வருகிறது. இந்நிகழ்வில் மத வேறுபாடுகளைக் கடந்து இந்துக்கள் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் பங்கேற்பது வழமை. இன்று இலங்கையில் நிகழும் யுத்த சூழல் காரணமாக இந்நிகழ்வு மிக எளிமையான முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டது.

ஈஸ்ற்ஹாம் ஹைஸ்ரிற் நோத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் துணைமேயருடன் கவுன்சிலர்கள் சிவிக் அம்பாசிடர் கவுன்சில் அலுவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர். நியூஹாம் கவுன்சிலுக்கு மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்ட கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை கடந்த எட்டு ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இன்று ஏற்றப்பட்ட இவ்வெளிச்சம் இலங்கையிலும் உலகிலும் சமாதானத்திற்கான வெளிச்சம் இந்த வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். பல்கலாச்சார மக்களும் வாழும் நியூஹாமில் தமிழர்களுடைய புது வருடத்தை குறிக்கும் இந்நிகழ்வு இடம்பெறுவது நியூஹாமிற்கு பெருமை சேர்க்கிறது என்று குறிப்பிட்ட போல் சத்தியநேசன் நியூஹாம் மக்களுடன் சேர்ந்தே முன்னேறுகிறது என்று குறிப்பிட்டார்.

துணை மேயர் கிறிஸ்ரின் போல்டன் பேசுகையில் இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றிய தனது வேதனையை வெளிப்படுத்தினார். துன்பங்கள் வந்தாலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவது அவசியம் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களுடைய ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. இதையொட்டி எண்பதுகளின் நடுப்பகுதிகளில் அடுத்த பொங்கலில் தமிழீழம் என்பது போன்ற கருத்துக்கள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் இன்று நிலைமை மறுதலையாகி விட்டது. தங்களுக்குள் முட்டி மோதிய தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு தங்களையும் அழித்துக் கொண்டன.

இன்று இலங்கைத் தமிழர்கள் தை பிறந்தாலும் சமாதானத்திற்கு ஏதும் வழி இருக்கா என்ற அங்கலாய்ப்புடனேயே உள்ளனர்.

பேரழிவிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

world_news.jpgபாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம் இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டித் தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் இலங்கை அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத்தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களை சிங்கள அரசு விமானம் மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது. பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கைத் தமிழ் மக்களையும் அழிவிலிருந்து நாம் காப்பற்ற வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டித்தனர். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார். சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் படும் துயரங்களைப் பற்றிப் பேசி அதற்குத் தீர்வு காணப்பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய அரசிடம் இந்தியன் காங்கிரஸும் கோரிக்கை. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென்று கோரி, மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவின் ஆலோசகர் சா.வேள்பாரியும் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் காஸாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருவதைப் போல் இலங்கையிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களால் குழந்தைகள் முதல் அப்பாவி மக்கள் வரை தினம் தினம் மடிந்து வருகின்றனர். மக்களின் மரண ஓலம் வானைப்பிளந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இலங்கை விவகாரத்திலும் உலக அமைப்பான ஐ.நா.உடனடியாக தலையிட வேண்டும் என்று மலேசியா சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தின் தாக்குதலினால் காயமடைந்திருக்கும் அப்பாவித் தமிழ் மக்களும் குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு அமைதி நிலை ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக ஐ.நா.உடனடியாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டார். இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்பட்டு வருகின்றவர்கள் இனத்தினாலும் மொழியினாலும் சமயத்தாலும் தமிழர்கள். எனவே அங்கு நடக்கின்ற அட்டூழியத்தை மலேசிய இந்தியர்கள் என்ற முறையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மலேசிய ஆளுங்கட்சியில் ஓர் உறுப்புக் கட்சி என்ற முறையில் மலேசிய இந்தியன் காங்கிரஸின் இளைஞர் பிரிவு இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் உடனடித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றது. வேள்பாரியின் இந்த அறைகூவலை வரவேற்று பல சமூக இயக்கங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஆஸ்பத்திரியில் 37 புலிகளின் உடல்கள்

வவுனியா பொது வைத்தியசாலையில் விடுதலைப் புலிகளின் 37 உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் இந்த 37 உடல்களும் படையினரால் கொண்டுவரப்பட்டு வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வன்னிப் போர் முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைகள் நடைபெற்ற நிலையில் இந்த உடல்களை பொறுப்பேற்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை கேட்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உடல்கள் எப்போது வன்னிக்குக் கொண்டு செல்லப்படுமெனத் தெரியவில்லையெனவும் கூறப்படுகிறது.

பயங்கரவாத அமைப்பொன்றினால் மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்

nimal_sripaladesiva_.jpg1984  மற்றும் 2000 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதிகளில் புலிகள் 168 தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த காலப்பகதிகளில் இதுதான் ஒரு பயஙகரவாத அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் அதிகளவிலான தற்கொலைத்தாக்குதல் எனவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குருநாகலில் உள்ள யு.பி.எவ்.ஏ யின் அலுவலகத்தில் சனிக்கிழமை (10.01.009) நடைபெற்ற தேர்தல் சந்திப்பின்போது அமைச்சர் டி சில்வா இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பாகங்களில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான 346 தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் 1984-2006 காலப்பகுதிகளில் 3,262 பொதுமக்களைக் கொன்றுள்ளனா. இதில் 2,252 சிங்கள மக்களும் 309 தமிழ் மக்களும் மற்றும் 701 முஸ்லிம் மக்களும் அடங்குவர். மற்றும் 3,494 பொதுமக்கள் கடுமையான காயங்களுக்குள்ளாகினர் எனவும் அவர்களில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாரும் அடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை வேண்டும்’ ஒபாமா, ஹிலாரிக்கு மகஜர் அனுப்ப கையெழுத்து வேட்டை

obama.jpgஅமெரிக்காவில் இயங்கும் “ஒபாமாவுக்கான தமிழர்கள்’ (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள பராக் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெறுகின்ற ஹிலாறி கிளிண்டனுக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. தமிழர்களின் சார்பில் அனுப்பப்படவுள்ள இந்த மனுவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே 50 ஆயிரம் பேர் கையெழுத்திட்டிருப்பதாக அந்த அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ள?ர்.

இணையம் ஊடாக கையெழுத்துகள் சேகரிக்கப்படும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்த் தேசிய இனப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன், இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியையும் வெளியுறவு அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றது.

“உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால், ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்’ என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். தமிழர்கள் தாம் கையெழுத்திடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், வேலைத் தளங்களில் உள்ள தமிழர்கள் அல்லாத தமது நண்பர்களுக்கும் தமிழர் நிலைமையை எடுத்து விளக்கி, அவர்களையும் இதில் கையெழுத்திட வைக்க வேண்டும்’ எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். காலத்தின் மிக அவசரமான தேவை கருதி எல்லோரும் இதனை உடனடியாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட விரும்புவோர் கீழே உள்ள இணைப்பு (Link) ஊடாக கையெழுத்திடும் பக்கத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் “ஒபாமாவுக்கான தமிழர்கள்’ கேட்டுக்கொண்டுள்ளது. கையெழுத்திடும் இணைப்பு: http://www.tamilsforobama.com/sign/usersign.html/ கடிதத்தின் விபரம் வருமாறு:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இக்கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கும் நாங்கள், இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம். ஏனெனில்,

1.இந்தப் போரானது தமிழர்களின் பூர்வீக நிலமான இலங்கையின் வடகிழக்கு பகுதி மீது இலங்கை அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும் அழிவை ஏற்படுத்தி, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் இருந்து அவர்களை அகற்றி இனச்சுத்திகரிப்புச் செய்வதே இந்தப் போரின் நோக்கமாகும். முதலாம் நூற்றாண்டு காலத்தில், ரோமன் இராச்சியத்தில் பலஸ்தீனத்திலிருந்து யூதர்களைத் துரத்தியது போன்ற பெரும் மக்கள் இடம்பெயர்வு அங்கு இப்போது நிகழ்கின்றது.

2.ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலேயே இந்தத் தமிழின அழிப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழர் நிலங்களைப் பறித்து, அவற்றுக்கு சிங்களப் பெயர்களைச் சூட்டி, அவற்றில் குடியேற்றி, அவற்றில் இராணுவ முகாம்களை நிறுவுதல் என இந்த இனச் சுத்திகரிப்பு ஆரம்பித்தது. தொடர்ந்து, தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு தமிழர்களது பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டது. மேலும், கடந்த 25 வருட காலமாக தமிழர் படுகொலைகளும் கைதுகளும் காணாமல் போதலும் மட்டுமன்றி, தமிழர் வாழ்விடங்கள் மீது வான், தரை மற்றும் கடல் வழியான தொடர்ச்சியான குண்டுவீச்சுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

3.இலங்கை அரசாங்கமானது புத்த மதத்தை நாட்டின் அரச மதமாக்கி, இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை குண்டுவீசி அழித்துவிட்டு, பின்னர் அந்த இடங்களில் புத்த விகாரைகளைக் கட்டுகின்றது.

4.அனைத்து சமாதான முயற்சிகளையும் நிராகரித்து, சமரச உடன்பாடுகளையும் கிழித்தெறிந்த இலங்கை அரசாங்கங்கள், இப்படியான முயற்சிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளையும் போடுகின்றன.

5. தமிழ் மக்களுக்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்தியதோடு, அரசாங்கமானது அந்த நிறுவனங்களை நாட்டைவிட்டும் வெளியேற்றியது. இந்த இனப்படுகொலைப் போரை நிறுத்துவதற்கு, புதிய ஒபாமா அரசாங்கம் உடனடியாக காத்திரமான நடவடிக்கையை எடுக்குமென்றும், தமிழர்களுக்கு நல்ல வழி ஏற்படுத்தும் என்றும் நாங்கள் நம்புகின்றோம். எங்களது இந்த விண்ணப்பத்திற்கு மதிப்பளித்தமைக்கு எமது நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

யாழ் சுண்டிக்குளம் பகுதி முழுவதும் படையினர் வசம்

army-1401.jpgபுலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சுண்டிக்குளம் பகுதியையும் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்தப் பிரதேசத்தை இன்று (14.01.2009) மாலை தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதன்போது இராணுவம் யாழ் தீபகற்பத்தை முழுமையாக விடுவித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது

16ம் திகதி 4.30 மணிக்கு, லசந்த கொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு பலியாகி வரும் தருணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்வதாக அதை நியாயப்படுத்தி வருகிறது அரசு. அரசின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக தெற்கின் இனவாதிகள் உக்கிர பணி செய்துவருகிறார்கள். ராஜபக்ச சகோதரர்கள் தமது கூலிக்குழுக்களை வைத்து கட்டற்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி பக்கச்சார்பற்ற குரலை ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகிற இத்தருணத்தில் துணிந்து எழும் ஒவ்வொருவரும் சாவை நோக்கியே எழுகிறார்கள். சமரசமற்ற ஊடகவியலை செய்ய விரும்பிய லசந்த தனக்கு சாவு நிச்சயம் என்று நம்பியிருந்ததில் யாருக்கும் ஆச்சரியம் வரப்போவதில்லை. ராஜபக்ச மன்னராட்சிக்கு எதிராக மூச்சு பேச்சு வரமுடியாத படிக்கு வன்முறை குழுக்கள் -கைக்கூலிகள் பயக்கெடுதி பரப்பி வைத்திருக்கிறார்கள்.

சன்டே லீடர் லசந்தவின் கொலை ராஜபக்ச அதிகாரத்தின் திரையை உலகுக்கு கிளித்து காட்டியுள்ளது. அரசின் யுத்த முன்னெடுப்புகளின் பின்னிருக்கும் அதிகார வெறியையும் மனித உரிமை மீறல்களையும் ஊழலையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது இக்கொலை.

ஊடகத்துக்கெதிரான வன்முறையில் இலங்கை உலகின் முன்ணனி நாடு. அதிலும் தற்போதய அரசு ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை புதிய உச்சத்துக்கு இட்டுசென்றுள்ளது. இந்த போக்குக்கு எதிராக நாம் கடும் எதிர்ப்பு கிளப்பியாக வேண்டும். மக்களை வேட்டையாடிக்கொண்டு அதை எழுத முற்பட்ட ஒரு தரமான ஊடகவியலாளனை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளிக்கொண்டு சர்வாதிகாரம் செய்யும் இந்த அரசுக்கெதிரான எல்லாவித எதிர்ப்பையும் நாம் செய்தாகவேண்டும்.

லசந்தவின் கொலையை கண்டித்து ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ (Committee for Worrkers International) பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.


இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 4.30 மணிக்கு, இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடக்க இருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த எதிர் நடவடிக்கைக்கு முழு ஆதரவும் வழங்கி கலந்து கொள்ளுங்கள். நன்றி

தேசம்நெற்

எக்சைல் யேர்னலிஸ்ட் நெட்வேர்க் –

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள;
சேனன் 07908050217
ஜெயபாலன் 07800596786

இக்கொலை சம்பந்தமாக ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ வெளியுட்டுள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. (இது நேரடி மொழிபெயர்ப்பல்ல)

கடந்த 8ம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரதுங்க கொல்லப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

எம் ரி வி நிலையதின் மேலான காடைத்தனமான தாக்குதல் நடந்து மூன்று மணித்தியாளத்துக்குள் இன்னுமொரு முக்கிய ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் ஊடகவியலாளர் மேலான அரச வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். துணிந்து உண்மையை கதைக்க நினைப்பவர்களை ராஜபக்ச அரசு எவ்வாறு அடக்க முயலுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களும் நல்ல உதாரணம்.

உண்மைகள் – இலங்கை மக்கள் படும்துன்பங்கள் வெளியில் வராமல் இருக்க இந்த அரசு எதைச்செய்யவும் தயாராக இருக்கிறது. புலிகளுக்கு எதிரான தமது புதிய வெற்றி பெருமித்துடன் அரசின் அட்டூளியங்கள் கேட்பாரற்று கூடிக்கொண்டிருக்கிறது. தமது ஊழல்களையும் சர்வாதிகார முறைகளையும் கபடமாக மறைக்கவும் இவர்கள் ஊடகங்களுக்கு எதிராக தமது பலத்தை காட்டி வருகிறார்கள்.

நாட்டின் மிக முக்கியமான ஒரு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இக்கதி, சாதாரண மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் போராளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பக்கசார்பற்ற ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைவாதிகள் தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்ட தனியார் விசாரனைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட யுத்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகளும் சரியாக விசாரிக்கப்படவேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரச எதிர்தரப்பினரையும் ஊடகவியலாளர்களையும் கொல்வதும் தாக்கப்படுவதும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

ஊடகங்களுக்கான உண்மையான சுதந்திரம் வழங்கப்படுவதுடன் ஜனநாயக மனித உரிமைகள் மீளமைக்கப்படவேண்டும்.