300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு. மரணங்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்கிறது. முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு – பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 40 நாட்களில் தினமும் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எப்போதுமே இவ்வளவு தொகையான பொதுமக்கள் ஒரு குறுகிய காலத்தில் கொல்லப்பட்டு இருக்கவில்லை. புலிகளிடமுள்ள கடைசிச் சில கிராமங்களுக்காக நடைபெறும் இந்த வன்னி யுத்தத்தில் 5000 முதல் 10000 தமிழ் மக்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
மிக மோசமான வார்தைகளுக்குள் அடக்க முடியாத மனித அவலம் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் வன்னி அவலம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளது. உண்மைநிலையை அறிந்துகொண்ட சர்வதேச அரசுகள் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்காமல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளன.
‘பயங்கரவாதிகளான புலிகளை’ அழிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசு ஒட்டுமொத்த வன்னித் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடாத்துகிறது. உணவு மற்றும் மருத்துவ சேவைகளை அம்மக்களுக்கு வழங்காது வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் இலங்கை அரசு, தான் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளையும் மருத்துவமனையையுமே கொலைக்களமாக்கி உள்ளது. அங்குள்ள மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பெப் 11 அன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 300 000 வரையான மக்கள் யுத்தமுனையில் மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
உலகத்தின் மிகக் கட்டுக்கோப்பான செல்வந்த விடுதலை அமைப்பாக கருதப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களுடன் பின்வாங்கி முல்லைத்தீவின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கீராமங்களில் மக்களை அரணாக வைத்து தாக்குவதாக அனைத்து முக்கிய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.
யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற முயலும் மக்கள் மீது புலிகளும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான இளம்பருதி பெப் 11ல் அதனை மறுத்துள்ளார். மக்கள் வெளியேறிச் செல்லும் முன்னரங்க நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமிழ் பொது மக்களும் இராணுவதினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் புலிகள் மறுப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வந்த பல நூற்றுக் கணக்கானவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மூன்று இளைஞர்கள் தீக்குளிக்குமளவிற்கு தமிழக மக்கள் கொந்தளித்த போதும் தமிழக மாநில அரசும் குறிப்பாக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. புலிகளுக்கு இந்தியா எடுக்கும் கடைசிப் பாடமாக இது கருதப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் படுதோல்வியை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிளவு ஏற்படலாம் எனச் செய்திகள் கசிகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய இலங்கை அரசு சார்பான அணி ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமுள்ள கடைசியான முல்லைக் கிராமங்கள் பறிபோகும் போது இந்தப் பிளவு எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் உயிரிழப்புகள் ஆயிரக் கணக்கில் செல்லும் போது அந்த மனித அவலத்தில் இருந்து மீண்டும் புலிகள் தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த முல்லைக் கிராமங்களில் நடைபெறும் யுத்தம் கருதப்படுகிறது. இங்கு சிக்குண்ட மக்கள் அனைவரையும் புலிகள் பயங்கரவாதிகள் என்ற தோரணையில் இலங்கை அரசு தாக்குதலை நடத்துகிறது. அங்கு கொல்லப்படும் பச்சிளம் குழந்தையையும் புலிக்குட்டி என்று சொல்வதற்கு இலங்கை அரசு எவ்வித தயக்கமும் காட்டவில்லை.
தமிழ் மக்களின் குருதியில் முல்லை மண் சிவக்கிறது என்றால் அது மிகையல்ல. அவலம் முடிவின்றித் தொடர்கிறது. சொல்லி அழ நாதியில்லை! கேட்பதற்கும் யாரும் இல்லை!! வேலிகளே பயிரை மேய்கிறது.
லண்டன் குரல் : இதழ் 27
————————
இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதலும் புலிகளின் உதாசீனமும் வன்னி மக்களை சொல்லொனாத் துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதுகாப்பாக இருக்க இடமும் இல்லாமல் தப்பிச் செல்ல வழியுமில்லாமல் அவர்கள் படுகின்ற அவஸ்தை கொடூரமானது. சிங்கத்திடமும் புலியிடமும் சிக்கித் தவிக்கும் இந்த வன்னி மக்கள் கூட்டம் இவ்வாறான ஒரு கொடுமையை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒருபுறம் மரணங்கள் மறுபக்கம் பிரசவங்களும் நிகழ்கின்றன.
வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பின்வாங்கிய போதும் புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதியை யுத்த மையமாக்கி உள்ளனர். இலங்கை அரசோ எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக் கொடி ஏற்றினால் போதும் என்றளவில் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது.
பெப் 9 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவே புலிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தாக்கதல் இராணுவ இலக்கு மீதான தாக்குதல் என்பதிலும் பார்க்க மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல். புலிகள் மேலும் மேலும் தவறிழைக்கின்றனர். அதுமட்டுமல்ல இப்படியான தவறுகள் தாக்குதல்கள் நடைபெற்றால் அவற்றை நியாயப்படுத்தும்; அப்படியான நியாயங்களை பரப்புரை செய்யும் முறையும் கண்டிக்கப்பட வேண்டியது.
முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புலிகளும் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறே புலிகளை ஆதரிப்பவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களதும் செயற்பாடுகள் உள்ளது. புலிகளை ஆதரிப்பவர்கள் புலிகள் மீதும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கததின் மீதும் அழுத்தங்கள் கொடுப்பதில்லை.
மக்கள் தாம் சுயமாக வெளியேற முடியுமாயின் எப்பவோ புலிகளின் பிடியை மீறிக் கொண்டு வெளியேறியிருப்பார்கள். அப்படி அவர்கள் வெளியேற முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மக்களுக்கு இலங்கை அரசு மீதும் அரச படைகள் மீதுமுள்ள அவநம்பிக்கை மிக முக்கியமானது. அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரச தரப்பில் பாதுகாப்பு செயலர் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம்களில் என்ன நடக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு விரிவாககச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரைம்ஸ் பத்திரிகையாளர் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.
வன்னியில் உள்ள அத்தனை இளைஞர்களும் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அத்தனை பேரையும் புலிகளாக அரசு நோக்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. தப்பி வந்த இளைஞர்களை அகதி முகாம்களிலிருந்து தனித்து அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது இதில் சில மிககவும் பயமூட்டும் செய்திகளாளாகும். இது தமிழர் வரலாற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ரெலோ(TELO) – ஈபிஆர்எல்எப்(EPRLF) அழிப்பு அல்லது வெருகலில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு ஒப்பானதொரு செயலாகும். இவை மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத மனித நேயமற்ற செயலாகும்.
வன்னியில் புலிகளின் பிடியில் இருக்கும் தமிழ் மக்களில் பெருந் தொகையானோர் புலிகளை சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருப்பதால் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து செயற்பபடுவதாலும் அவர்கள் புலிகளின் ஆயுததாரிகள் என்ற தப்புக் கணக்கில் அரசும் இராணுவமும் செயற்படுவது மிகத் தவறாகும்.
புலிகள் கடந்த காலங்களின் செய்த தவறுகளும், மனித உரிமை மீறல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அவர்கள் வழிபின்பற்றி வந்த ரிஎன்ஏ(TNA) யினரின் பம்மாத்து அரசியலும் இன்றுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு தமிழ் பேசும் மக்களை கொண்டுவந்து விட்டுள்ளது.
புலிகள் இறுதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது தமது பாதுகாப்பிற்காக தம்முடன் இழுத்து வந்த மக்களை இன்று இன்னுமொரு தடவை தமது பாதுகாப்பிற்காக வன்னியில் கேடயமாக்கி உள்ளனர். ஒவ்வொரு தடவையும் தமது பாதுகாப்பிற்கு குந்தகமான சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் புலிகளின் செயற்ப்பாடானது தமிழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துமே வந்துள்ளனர். இவ்வாறான நிலைகளிலும் புலத்தில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் புலிகளின் மீது எந்தவித அழுத்தங்களையும் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் ரிஎன்ஏ(TNA) யும் தவறிழைத்துள்ளது.
இலங்கை அரசு இந்த இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றியது மிக மோசமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இலங்கை அரசு எப்படியான மனித உரிமை நடவடிக்கைகளை செய்யப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிக்கின்றது. அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தொடரும் வரை மக்களுடைய அவலங்களும் தொடரும்.
அரசும் அரசியற் கட்சிகளும் குறிப்பாக கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் போராட்டவாதிகளும் மக்களுக்காகவே என்று சொல்லிக் கொள்கின்ற போதிலும் வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களுக்காவே இருக்க வேண்டும். இந்த மக்கள் அவர்களின் இனம், மொழி போன்றவற்றிக்கு அப்பால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்னி மக்களை பாதுகாக்காமல், இந்த மக்களின் உயிர் அழிவிற்கு மேல் இனிமேல் என்றுமே மக்ளுக்கான அரசியல் செய்ய முடியாது. இந்த அரசியல்வாதிகள் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது அபத்தமாகி விடும். மக்களை பாதுகாக்க முடியாத இந்த கட்சிகள் மக்களின் பெயரால் இனிமேல் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும் இந்த அரசியற் கட்சிகள் அர்த்தமற்றதாகி விடும்.
பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டி அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும் வன்னியில் உள்ள மக்களை புலிகளாகக் காட்டி அவர்களது அவலத்தின் மீது வெற்றியை நிலைநாட்டத் துடிக்கிறது. அந்த வெற்றியின் மீது இந்த தேர்தலை சந்திக்க தயாராகுகின்றது மகிந்த அரசு. இதற்கான ஒத்திகையாக மாகாணங்களுக்கான தேர்தல்களை அரசு பரீட்சார்த்தமாக (14 பெப்) சந்தித்துள்ளதது.
தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளித்து ஆயுதபாணிகளாக்கி தனது பிராந்திய வல்லாதிக்கத்தை பயிற்ச்சி செய்த அதே இந்தியா இன்று வன்னி யுத்த களத்திலும் இலைமறை காயாக நிற்கின்றது. தமிழக மக்கள் கொதித்தெழுந்த போதும் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. வன்னி யுத்த களத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உயிரில் அக்கறையில்லாமல் உள்ளது. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது.
வன்னி மக்கள் மீதான இராணுவ தாக்கதல்களுக்கு முற்படும் அரசும், அரச ஆதரவு தமிழ் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் – வன்னி மக்களை தமது மிக குறுகிய பிரதேசத்தில் அடக்கி வைத்திருக்கும் புலிகளும், புலிகள் ஆதரவு இயக்கங்களும், ரிஎன்ஏ(TNA) யும் வன்னி மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து அவர்கள் பாதுகாப்பாக சுயகௌரவத்துடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.