எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிறர் உயிரைப்பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை; பிரதமர் விக்கிரமநாயக்க

srilanka-parliament.jpgஎவருக்கும் பிறிதொருவரது உயிரைப் பறிக்கும் உரிமை கிடையாதென  வெள்ளிக்கிழமை சபையில் வலியுறுத்தி தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இதன் காரணமாகவே நாட்டில் ஏனைய பிரச்சினைகள் இருப்பினும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அனுதாப பிரேரணையில் பேசும் போதே பிரதமர் விக்கிரம நாயக்க இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பூரணத்துவமிக்க மனிதர், ஒரு அரசியல்வாதி என்பதற்கு அப்பால் சிறந்த மனிதத்துவம் மிக்கவர் என்ற வகையில் தான் நான் அவரைமதித்தேன். ஜெயராஜ் என்பவர் சிறந்த மனிதர், பண்பானவர், நட்பானவர்.

அவர் மரணிக்கவில்லை, அவரது உயிரை பிரித்தெடுத்துவிட்டார்கள். மக்களுக்கென சேவைகளை தொடர அவருக்கு இன்னும் நீண்ட காலம் இருந்த போதிலும் அவரது உயிர் பறித்தெடுக்கப்பட்டமையே எமக்கு அதிக கவலையளிக்கிறது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை பலரும் நம்பினார்கள். அதனால் தான் அவர் பாதுகாப்பற்ற இடங்களுக்கும் சென்றார். இந்த நிலையிலேயே அவர் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளானார். இம் மாதிரியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்காகத் தான் பயங்கரவாதத்தை ஒழித்துவருகிறது.

எவர்க்கும் பிறிதொருவரது உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. இதனால் தான் ஏனைய பிரச்சினைகள் இன்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதை அரசாங்கம் முக்கிய பிரச்சினையாக எடுத்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. ஜெயராஜ் கல்வி தொடர்பாக மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். இதனால் தான் அவர் கல்வி மன்றமொன்றையும் ஏற்படுத்தி செயற்பட்டு வந்தார். பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த அரசியல்வாதியொருவரை இழந்துவிட்டோம். ஜெயராஜ் பிறப்பில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது, மதத்துக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ஏனைய மதங்கள் தொடர்பாகவும் அக்கறையுடனும் நட்புடனும் செயற்பட்டுவந்தார். நாம் மதத்துக்கு மதம் வேறுபட்டு முரண்பட்டுக்கொண்டு ஏனையவர்களின் உரிமைகளை கூறு போடுவது தவறு.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சகல துறைகளிலும் தனித்துவம் பெற்று தெரிகிறார். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பரீட்சைத் திணைக்கள செயற்பாட்டை மேம்படுத்த சிபார்சுகளை வழங்க புத்திஜீவிகள் குழு – கல்வியமைச்சர் நியமிப்பு

srilanka-students.jpgஇலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு அவசியமான சிபார்சுகளை செய்வதற்காக நால்வர் கொண்ட புத்திஜீவிகள் குழுவை கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நியமித்துள்ளார். கலாநிதி எம். உபாலி சேதர தலைமையிலான இக்குழுவில் பேராசிரியர் டபிள்யூ. ஜீ. குலரத்ன, எம். என். ஜுனைத், பீ.என். அயிலப்பெரும ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

குழுவின் செயலாளராக அயிலப்பெரும செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்துசர்வதேச தரத்துக்கமைய பரீட்சைகள் திணைக்களத்தை மேம்படுத்துதல் தேசிய மதிப்பீட்டுக்கான நவீன தொழில்நுட்பவளங்களை பயன்படுத்துதல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்பணியை தரம் கொண்டதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களையும் ஆராய்ந்து இக்குழு சிபார்சுகளை வழங்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வருடமொன்றுக்கு 217 விதமான பரீட்சைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாத காலத்திற்குள் மேற்படி குழு அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல்: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை

justice.jpgசென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

நீர்க்கட்டண அதிகரிப்பை உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல்

water-tap.jpgமக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையிலான நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறும் அது தொடர்பாக அரசினால் வெளியிடப் பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜே.வி.பி. அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை சபாநாயகரின் அனுமதியுடன் விஷேட கூற்றொன்றை வெளியிட்டு உரை நிகழ்த்துகையிலேயே இதனை வலியுறுத்திய ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது;

பெப்ரவரி 15 ஆம் திகதியிலிருந்து நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படப் போவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நீர் வழங்கல் வடிகால் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. இது சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் அவர்களது தொழிற்துறையையும் அநாவசியமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

இதற்கு முன்னர் வீட்டுப் பாவனைக்கான நீரைப் பெற்றுக் கொள்ளும் போது மாதாந்தம் 50 ரூபா நிலையான கட்டணம் அறவிடப்பட்டது. என்றாலும் மேற்படி நிலையான கட்டணத்துக்குப் பதிலாக 50 ரூபாவிலிருந்து 1,600 ரூபா வரையிலான மாதாந்தச் சேவைக் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவைத் தாக்குப் பிடிக்க முடியாத மக்கள் தலையில் மேலும் சுமையேற்றுவதாகவே இது இருக்கும்.

எமது நாட்டிலுள்ள பெரும்பாலான வீடுகளில் மாதாந்தம் 15 க்கும் 25க்கும் இடைப்பட்ட அலகு நீரையே பயன்படுத்துகின்றனர். அவர்களது நீர்க் கட்டணம் 23 மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 20 அலகுகள் நீரைப் பயன்படுத்தும் வீட்டுக்கான கட்டணம் 131 ரூபாவிலிருந்து 397.60 ரூபா வரை 203.51% அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆகக் குறைந்தளவு நீரைப் பயன்படுத்துவதற்காக கணிக்கப்படும் வீடுகளுக்கான நீர்க் கட்டணம் 84 ரூபாவிலிருந்து 218.40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் 40 அலகுகள் வரை நீரைப் பயன்படுத்துகின்றனர். அவர்களது மாதாந்த நீர்க் கட்டணம் 2,464 ரூபாவாக அதிகரிக்கப்படப் போகின்றது. இவ்வாறு நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்படுவது மக்கள் மீது அதிக சுமையை ஏற்றுவதாகவே இருக்கும்.

சமுர்த்தி குடும்பங்களுக்காக விஷேட நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும் 15 அலகுகளுக்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படும். 16 அலகுகளுக்கு மேல் அதிகரிக்கும் போது ஏனைய பாவனையாளர்களைப் போன்று அவர்களும் நீர்ப் பாவனை கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான வீடுகளில் நீர்ப் பாவனை 15 அலகுகளுக்கு மேல் இருப்பதால் இந்த நிவாரணம் வெறும் கண் துடைப்பு மாத்திரமே.

மத ஸ்தாபனங்களுக்காக இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 ரூபா கட்டணம் 50 ரூபாவுக்கும் 1,600 ரூபாவுக்கும் இடைப்பட்ட தொகை வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தேநீர் கடைகளைப் போன்ற சிறு கடைகளுக்கான நீர்ப் பாவனை கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது தேநீர் கடைகளும் சிறு ஹோட்டல்களும் ஆகக் குறைந்தது 50 அலகுகள் நீரைப் பயன்படுத்துகின்றன. இதுவரை அவர்களிடமிருந்து 70 ரூபா நிலையான கட்டணமாக அறவிடப்பட்டது. புதிய கட்டணத்துக்கேற்ப நிலையான கட்டணம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தேநீர் கோப்பையிலிருந்து அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்படும். இது சாதாரண பொதுமக்களைப் பாதிக்கக் கூடியதாகும்.

அதேபோன்று, கைத்தொழில் துறையின் நீர்ப் பாவனை கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் மாதமொன்றுக்கு 20,000 அலகுகளுக்கும் மேலாக நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. பதிய கட்டணத்தின் படி மாதாந்த நீர்வழங்கலுக்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் பொதுவாக 1,000 அலகுகள் நீர்ப் பாவனை செய்யப்படுகிறது. அவ்வாறான தொழிற்சாலைகள் மாதாந்தக் கட்டணமாக 4,000 ரூபா செலுத்த வேண்டி ஏற்படும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக துன்பத்துக்குள்ளாகியிருக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு இந்த விலை அதிகரிப்பு மேலும் சுமையாக இருக்கும். நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் உலகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு அந்தந்த நாடுகள் நிவாரணம் வழங்கும் நிலையில் எமது நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு மேலும் சுமையேற்றுவது தொடர்பாக எமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் நாட்டின் தொழிற்சாலைகளை வீழ்ச்சியடையச் செய்யக்கூடிய நீர்க் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

“ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை தடைசெய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை’

justice.jpg“பொது மக்களுக்குத் தகவல்களை வழங்கவேண்டியது ஊடகவியலாளரின் பொறுப்பாகும். அத்தகைய தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் பொறுப்பினை நிறைவேற்றி வருகின்றவர்களுக்கு சட்டவிரோதமான முறைகளில் தடைகளை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது’ என்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் ருவிர வெலிவத்த தெரிவித்துள்ளார்.

“லங்கா தீப’ பத்திரிகையின் செய்தியாளரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியமை மற்றும் அவரது பணிகளுக்குத் தடை ஏற்படுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்த வேளையிலேயே நீதிவான் மேற்கண்டவாறு கூறினார்.

லங்காதீப பத்திரிகையின் ஊடகவியலாளர் அத்துல பண்டார சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சந்தன வீரக்கோன் “விஸ்வமடு பிரதேசத்தில் பயங்கரவாதிகள் சிவிலியன்கள் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களையடுத்து மிகவும் மோசமாகக் காயமுற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவரின் அழைப்பின் பேரில் அத்துல வைத்தியசாலைக்குச் சென்றவேளையில், சந்தேகநபரின் பலத்த தாக்குதலுக்காளானதாகவும் அக்காட்சிகள் ஏனைய ஊடகவியலாளரின் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் விளக்கினார்.

ஊடக நிறுவனங்களின் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய முக்கிய தகவல்களுக்குத் தடை ஏற்பட்டது எனவும், ஊடகவியலாளரின் கடமைக்கு எவரும் குந்தகம் செய்வதை அனுமதிக்க முடியாதெனவும் மற்றுமொரு சிரேஷ்ட சட்டத்தரணியான ராஜ்கருணா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் அத்துல பண்டாரமீது இவ்வாறு தாக்குதல் நடாத்திய சந்தேக நபரான ஜீ.ஏ.சாந்த ஹரிஸ்சந்குர என்பவரை 7500 ரூபா ரொக்கப் பிணையிலும், 30 ஆயிரம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிப்பதற்கு உத்தரவு வழங்கிய நீதிவான் ருவிர வெலிவத்த, மாதாந்தம், இறுதி ஞாயிறு தினங்களில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் பணித்தார்.

இறைச்சிக்காக விலங்கு உற்பத்தியென்ற திட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் -ஐ.தே.க.எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா

sri-lanka-parliment.jpgஇறைச் சிக்காக விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தை இல்லா தொழிக்க வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. வின் கம்பஹா மாவட்ட எம்.பி.யும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கல் பெரேரா, விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் அரசின் திட்டத்துக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விலங்குகள் திருத்தசட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்டம் தொடர்பில் ஐ.தே.க.வுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும் இந்தச் சட்டமானது பால் உற்பத்தியை பாதிப்புக்குள்ளாக்கும் விதமாக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவோ அல்லது இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் கொல்லப்படுவதை தடுப்பதாகவோ மட்டும் இருக்கக் கூடாது.

ஆடு,மாடு,பன்றி, எலிகள் கூட இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. விலங்குகள் மீது கருணைகாட்டுகின்ற சட்டமாக இருந்தால் இறைச்சிக்கான விலங்கு உற்பத்தி என்ற திட்டத்தையே இல்லாதொழிக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் இணங்குகின்றதா என்று கேட்க விரும்புகின்றேன் . மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படும்போது கூட அரசியல் நிறம்பார்த்தே வழங்கப்படுகின்றன. கால்நடை உத்தியோகத்தர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர். அவர்கள் யாரின் பட்டியல்களை முன்வைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

கறவை மாடுகள் அறுக்கப்படுவதை நாம் உண்மையாக எதிர்க்கின்றோம். எனவே அமைச்சரின் இந்த திட்டத்தை நாம் வரவேற்கின்றோம்.

காயமடைந்த படையினருக்கு சிகிச்சையளிக்க மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

medicine.jpgகாயம டைந்த படைவீரர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரன வியாழக்கிழமை சபையில் முன்வைத்த குற்றச்சாட்டை, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மறுத்துவிட்டார்.

அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ரணவீர பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

“அநுராதபுரம் வைத்தியசாலையில், காயமடைந்த படையினருக்கும் நோயாளிகளுக்கும் சத்திரசிகிச்சை செய்வதற்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றனவே’ என்று ரணவீர பத்திரன இதன்போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,”” அந்த செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது. அங்கு ஒரேயொரு மருந்துக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவுகிறது. ஏனெனில், அது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், அதற்கு அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பணியகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதை அடுத்து, தற்போது தருவிப்பதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று கூறினார்.

அத்துடன், அநுராதபுரம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு போதியளவு மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பேசியதன் மூலம் அங்கு மருந்துப் பொருட்களில் எந்த தட்டுப்பாடுகளும் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், தான் இப்போது தொடர்பு கொண்டு பேசிய போது அநுராதபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கான இரு அத்தியாவசிய மருந்துகள் இல்லையென கூறப்பட்டதாக ரணவீர பத்திரன எம்.பி. மீண்டும் தெரிவிக்கவே;

“ஜே.வி.பி. யிடம் 23 வைத்தியர்களைக் கொண்ட சங்கமொன்று உள்ளது. இவ்வாறான அறிக்கைகளை விடுப்பதே இவர்களது வேலை. 8,594 வகையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் 8,593 ஐப் பற்றி பேசாமல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். மருந்துப் பொருட்கள் என்பது கடையில் சென்று சீனி வாங்குவதைப் போல தருவிக்க முடியாது’ என்று சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.

வீட்டை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்த இலங்கைப் பெண்

bahrain.jpgபஹ்ரெய் னின் வீடொன்றில் பணிபுரிந்த இலங்கைப் பணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவ்வீட்டைத் தீக்கிரையாக்கியதுடன் தானும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் பணிபுரிந்த மரியம்மா பெருநான் (வயது 32) எனும் பெண்ணே வீட்டின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்கிரையாக்கியுள்ளதாக நம்பப்படுவதாக கல்வ் டெய்லி நியூஸ் தெரிவித்திருக்கிறது.

இவ்விபத்தையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அவ்வீட்டினுள் சுயநினைவற்ற நிலையிலிருந்த பஹ்ரெய்னைச் சேர்ந்த இரு பிள்ளைகளைக் காப்பாற்றியதுடன், அவ்வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாகவிருந்த அப்பணிப் பெண்ணின் உடலையும் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஏ.ஏ.எம். அல் ஹமாடா தெரிவிக்கையில்;

ஆயிஷா (வயது 21), தலால் (வயது 15) ஆகிய இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இப் பணிப்பெண் வீட்டிற்கு தீயிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தலால் சுகயீனம் காரணமாக பாடசாலை செல்லாமையாலும் பஹ்ரெய்ன் பல்கலைக்கழகமொன்றின் மாணவியான ஆயிஷாவிற்கு அன்று மதியமே வகுப்புகள் இருந்ததாலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்றார்.

வீட்டிலிருந்து புகையேறுவதைக் கண்ட அயலவர்கள் அச்சமயத்தில் வெளியே சென்றிருந்த அல் ஹமாடாவின் மனைவிக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

புகையை சுவாசித்தமையால் சுயநினைவற்ற நிலையிலிருந்த இருபிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேர சிகிச்சையைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

இப் பணிப்பெண் கடந்த 8 மாதங்களாக இவ்வீட்டிலேயே பணிபுரிந்தார் எனவும் இவர் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையிலேயே பணியாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் அல் ஹமாடா தெரிவித்தார்.

மேலும், இப்பணிப் பெண் தூக்கிட்டுக் கொள்வதற்கு சற்று முன்னர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் எனவும் அதுவே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இப் பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட தொலைபேசி பொலிஸாரால் மீட்கப்பட்ட போதிலும் அது மிக மோசமாக சேதமடைந்த நிலையிலிருந்தது.

இத்தீவிபத்து தொடர்பாக அவசர அழைப்பையடுத்து காலை 11.09 மணியளவில் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டதுடன், இறந்த பணிப் பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது என அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விபத்து மண்ணெண்ணெயை வீடு முழுவதிலும் ஊற்றி எரிக்கப்பட்டதாலேயே ஏற்ப்பட்டுள்ளதென்பதை அவ்வமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.

ஆயினும் எவ்விதமான எரிகாயங்களும் காணப்படவில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.

வன்னியிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியை ஏற்க இலங்கை தயார்

puthumaattalan-hospital.gifமோதல் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இலங்கை தெரிவித்திருக்கின்றது.

பொதுமக்களின் துன்பம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகளவு அக்கறைகொண்டுள்ளது என்றும் இது தொடர்பான இந்தியாவின் உணர்வுகளை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம் எனவும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான தனது ஆர்வத்தை இந்தியா முறைப்படி வெளியிட்டுள்ளது. இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உதவியை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்று ஜயசிங்க கூறியுள்ளார். ஆனாலும் களநிலை யதார்த்தத்திலேயே இது தொடர்பான தீர்மானம் தங்கியிருப்பதாக கொழும்பு தெரிவித்துள்ளது.

வெளியேற்றும் திட்டம் தொடர்பான விபரங்கள் பின்னர் தயாரிக்கப்படும். இது களநிலைவரத்தைப் பொறுத்ததாகும். பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு புலிகள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ஜயசிங்க கூறியுள்ளார்.

சகல பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியாகவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும் வன்னியில் மோதலுக்கிடையே அகப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவத் தயாரெனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தெரிவித்ததை தூதுவர் ஜயசிங்க வரவேற்றுள்ளார்.

“இதுவொரு ஆக்கபூர்வமான அறிக்கை. களநிலை யதார்த்தத்தை மிகச்சரியாக பிரதிபலிக்கும் அறிக்கையாக அது உள்ளது. சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக முன்னோக்கிச் செல்வதை வெளிப்படுத்தும் அறிக்கை அதுவெனவும் ஜயசிங்க கூறியுள்ளார்.