எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

முல்லைத்தீவிலிருந்து மேலும் 400 நோயாளர்களை திருமலை அழைத்துவர ஏற்பாடு

trico.gifமுல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த சிங்கள காதல் ஜோடி இலங்கை தூதரிடம் ஒப்படைப்பு

tamilnadu.jpgஅகதி களோடு வந்து கைதாகி தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கள காதலர்களை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க பொலிஸார் சென்னை அழைத்து சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 2008 டிசம்பர் 20 ஆ ம் திகதி படகில் வந்திறங்கிய வவுனியாவை சேர்ந்த அகதிகளுடன் இலங்கை கொழும்பு நகர் மகரகம பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர் துஷாரா சந்தனா (வயது 30) கடுவத்தை பகுதியை சேர்ந்த பெண் தாரகா தில்கானி (வயது 17) ஆகிய இருவரும் அகதிகளாக வந்தனர்.

சிங்கள மொழி தவிர வேறு மொழி தெரியாத இருவரையும் வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த வசந்தமாலா (49 வயது) அழைத்து வந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான பாடசாலை மாணவி தாரகா தில்கானியும், வாகன சாரதியான துஷாரா சந்தனாவும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் வவுனியா வந்து அங்கிருந்து படகில் அகதிகளாக வந்தனர்.

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக இவர்கள் இராமேஸ்வரம் வந்ததால் இருவரையும் பொலிஸார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க இராமேஸ்வரம் பொலிஸார் இவர்களை சென்னைக்கு அழைத்து சென்றனர்

சார்க் வலய நாடுகளின் கல்வி, உயர் கல்வி அமைச்சர்களது மாநாடு!

vishva-warnapala.jpgசார்க் வலய நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். தெற்காசிய உயர்கல்விக் கொள்கை மற்றும் நுட்பங்கள் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தவும் அதற்கென 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்!

rohitha-bogollagama.jpgஈராக்கின் தலைநகர் பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகத்தைத் மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கைக்கும் ஈராக்குக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் 2003 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஈராக்குக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.மீண்டும் தூதரகத்தைத் திறப்பதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலரை ஒதுக்கவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

சரணடையுங்கள்: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஹசீனா எச்சரிக்கை

bangladesh-president.jpgவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு கிளர்ச்சியாளர்கள் சரணடைய வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

கலகத்தை கைவிடத் தவறினால் நாட்டின் நலன் கருதி எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டி வரும் என்றும் கிளர்ச்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில், கலகத்தில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மன்னிக்க முடிவு செய்துள்ளேன். வீரர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

கிளர்ச்சியை கைவிடுவதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு முகாமுக்கு திரும்புமாறு வீரர்களை வலியுறுத்துகிறேன். கிளர்ச்சியாளர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்காது. ஊதிய விகிதம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பாதையை மீள புனரமைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

railways-in-jaffna.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையை மீள புனரமைக்க சகல மக்களின் ஒத்துழைப்பையும் பெற போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக விசேட திட்டமொன்று முன் னெடுக்கப்பட உள்ளதோடு இந்த திட்டம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர் வமாக நாட்டு மக்களுக்கு வெளியிடப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரி வித்தது. யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை மீள அமைப் பதற்கு நாட்டு மக்கள் அனைவரினதும் நிதி உதவி, உழைப்பு என்பவற்றை பெறுவதற்காக இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாண ரயில் நிலையத்தையும், ரயில் பாதையையும் நிர்மாணிப்பதற்கு அம்பாந்தோட்டை மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும கூறினார். கிளிநொச்சி ரயில் நிலையத்தையும் ரயில் பாதையையும் அமைக்க மாத்தறை நகர மக்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பான தமது சகோதரத்துவ வாஞ்சையை பிரதிபலிக்கும் வகையில் தென்பகுதி சிங்கள, முஸ்லிம் மக்களும் மலையக தமிழ் மக்களும் இணைந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதையையும் ரயில் நிலையங்களையும் மீள அமைக்க உள்ளனர். இது இலங்கை மக்களின் சகோதரத்துவத்தையும், புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் காட்டும் குறிகாட்டியாக வரலாற்றில் பதியப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சேரிநாய்க் கோடீஸ்வரன் – (சிலம்டோக் மில்லியனர்) – வறுமை விற்பனைக்கு அல்ல!!! : சேனன்

Slumdog_Millionare_Protestசிலம்டோக் மில்லியனர் – இயக்கம்: டேனிபோய்ல்

ஐந்து விமர்சகத் தேர்வு விருதுகள் நான்கு தங்கப் பூகோள விருதுகள், பாஃப்ரா விருதுகள் மற்றும் பத்து அக்கடமி விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கோ அல்லது சிறிதளவேனும் சில ஊக்கமளிக்கக் கூடிய கருத்துகள் கொண்டிருக்குமென நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலம்டோக் மில்லியனர், அதைப் பற்றிய அதீத விளம்பரங்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளின் பரிமாணத்தைத் தாண்ட முடியவில்லை. அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனச் சொல்லலாம்.

Slumdog_Millionare_Protestஅதே வேளையில் இந்தியத் திரைப்பட ரசிகர்களையும் கவர்வதில் அது தோல்வியுற்று உள்ளது. உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 25 வீதமான இருக்கைகளே நிரம்பியிருந்ததாக ரைம்ஸ் மகசின் தெரிவித்திருந்தது. இந்திய மக்களுக்கு எப்போதுமே இவ்வகைப் பிரமாண்டமான கலைப் படைப்புகள் மீது சந்தேகமுண்டு. ஏனென்றால் இம்மாதிரியான கலைப் படைப்புகளைத் தயாரிப்பதன் முக்கிய குறிக்கோள் தங்களின் வறுமையை வியாபாரஞ் செய்து பணமாக்குவதே என்பதை அவர்கள் அறிவார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த அனில் கபூரின் வீட்டின் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதைத் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கைகளிலிருந்த அட்டைகள் பிரதிபலித்தன. அவற்றில் ‘வறுமை விற்பனைக்கல்ல” என்ற சுலோகம் எழுதியிருந்ததன் மூலமாக இதைப் பிரதிபலித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் சேரியும் சேரி மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதும் இப்படத்தின் தலைப்பில் சேரி என்ற சொல்லுடன் நாய் எனும் சொல்லும் உபயோகித்திருந்ததுமாகும்.

சிலம்டோக் மில்லியனர் எழுதப்பட்டதும் இயக்கப்பட்டதும் ஒருபுறம் மேற்கத்தைய சந்தை மறுபுறம் இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய மிகப் பெரும் திரைப்படத்துறை மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள இந்தியர்களையும் வைத்துப் பணம் கறக்கலாம் என்பதனாலாகும்.

சினிமாத்துறை மூலமாகப் பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்கள். ஆங்கிலமல்லாத இந்தித் திரைப்படங்கள் மூலமாக பிரிட்டனில் அதிக பணம் சம்பாதிக்கப்படுகிறது. சனரஞ்கமாகத் தயாரிக்கப்பட்ட ஐரோப்பியத் திரைப்படங்களை விட இந்தியத் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களை மிகவும் கவருகின்றது. பிரிட்டனில் பெருஞ் சனத்தொகை இந்தியர்கள் வாழுகின்றனர்.

பிரித்தானியக் கதாசிரியர்களும் முதலீட்டாளர்களும் தந்திரமான வழிமுறையொன்றைத் தேடினார்கள். வணிக ரீதியிலான சனரஞ்சகத் திரைப்படங்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பிரபல்யமாக ஓடுவதலிருந்து பெறும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து ஒரு பங்கை இந்தியத் திரைப்படத்துறையிலிருந்து பெற்றுக் கொள்வதே அதுவாகும்.

ஆனால் சிலம்டோக் மில்லியனர், சராசரி இந்தியர்களின் சனரஞ்சகக் கற்பனாசக்தியை மட்டுமல்ல சேரி மக்களையும் கூட அப்படம் கவரவில்லை.

எவ்வாறாயினும் இத்திரைப்படம் மேற்கத்தைய மனோபாவத்தைக் கவர முயற்சித்துள்ளது.

ஏமாற்றம்.

Slumdog_Millionaire_Sceneஎந்த உலகில, ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பதே துன்பங்கள் தீர ஒரே வழியெனத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதோ, அவர்கள் ஒவ்வொருவரது கனவும் கோடீசுவரனாவதாகவே இருக்கும். ஆனால் சிலம்டோக் மில்லியனர் திரைப்படம் இக்கேள்வியை வெறும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு உடனே மலிவான காதல் கதையில் இறங்கி நகர்கிறது. இந்தியா, யார் கோடீஸ்வரனாகப் போகிறீர்கள்? நிகழ்ச்சிக்குச் சேரியிலிருந்து பங்குபற்றப் போகும் ஒரு இளைஞன் உச்சத்தொகையான இருபது கோடி ரூபாய் வெல்கின்றான். அவனுக்கு எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிந்தது? என்ற புலன்விசாரணையின் போது அவனது வாழ்க்கைக் கதை வெளிவருகிறது.

சிலம்டோக் மில்லியனர் ஒரு சாதாரண கதையாகும். இந்தியப் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பதனால் வித்தியாசமான அசாதாரணமான பரிமாணங்களைப் பெற்றது. உச்சக் கட்ட வறுமையும் வன்முறையும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஐரோப்பியப் பார்வையாளர்களுக்கு இவை புதியவையாகத் தெரியும்.

இப்படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகின்றது. வேகமான கமராவின் நகர்வு, சேரிக்குள் ஓடும் சிறுவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதிலே நடித்த சிறுவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதை சேரிக்கு வரும் மத்தியதர வர்க்க உல்லாசப் பயணியின் பரிதாபப் பார்வையுடன் பார்க்கிறது. இந்நிலையில் கழிப்பறையிலிருக்கக் கூடியவை கூட பார்வைக்கு மிக அழகாகக் காட்டப்படுகின்றது.

ஒரு வேளை, இந்த இந்தியாவின் அதாவது பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் நாட்டில் நீண்ட காலமாக ஆழமாக இருக்கும் வறுமையை அழகுபடுத்தும் முயற்சி தான் இத்திரைப்படம். அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சினால் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. சேரியின் மாதிரியை வடிவமைப்பாகக் கொண்டு இப்போது மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே எவராவது இப்படத்தினைப் பார்த்துத் தான் இந்திய சேரிவாழ்க்கையை அறியச் சென்றால் ஏமாற்றமேயடைவார்கள்.

1988 இல் மீரா நாயரினால் இயக்கப்பட்ட ‘சலாம்பாம்பே’ திரைப்படம் இதைவிட ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகும்.

தோட்டத்துறைக்கான நிவாரணத் திட்டம்!

milroy_fernando.bmpஅரசாங்கம் பிரதேச தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய நிவாரணத் திட்டத்தை இலங்கை அரச பெருந்தோட்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அல்கடுவ தோட்டக் கைத்தொழில் நிறுவனம் ஆகிய அரச தோட்ட நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வரும் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படமாட்டாது – கோத்தபாய

gothabaya.jpgபயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது  நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள பிரதேசங்களைக் மீட்கும் நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் உயிர்ப்பெற முயற்சிக்கின்றனர்.