பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் வரையில் வடக்கில் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் மூலமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக வடக்கில் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள பிரதேசங்களைக் மீட்கும் நடவடிக்கைகள் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கும் வரையில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அவர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் உயிர்ப்பெற முயற்சிக்கின்றனர்.