விஸ்வா

விஸ்வா

வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 அகதி முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 2இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த 47 இடைத்தங்கள் முகாம்களில் 42 முகாம்கள் மூடப்பட்டுவிட்டதாக மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். இம்முகாம்களில் தங்கியிருந்த மக்களில் இன்னும் 27 ஆயிரம் பேரே எஞ்சியுள்ள ஐந்து முகாம்களிலும் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எஞ்சியுள்ளவர்களும் இவ்வருட இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுவிடுவர் எனவும், அதன் பின்பு வவுனியாவில் அகதி முகாம்கள் எவையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்.தென்மராட்சியிலுள்ள அல்லாரை முகாமில் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தங்கியுள்ளனர் எனபதும் தற்போது வடமராட்சிக்கிழக்கு மக்கள் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கேரதீவு- சங்குப்பிட்டி பாதை அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.

கேரதீவு சங்குப்பிட்டி பாதையின் திருத்த வேலைகள் நிறைவு பெற்று வரும் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இப்பாதை திறக்கப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரதீவு – சங்குப்பிட்டி இடையிலான 4 கிலோ மீற்றர் வரைலான பழுதடைந்த பாதையும், அப்பகுதியில் அமைந்திருந்த பாலமும் திருத்தப்பட்டு நிறைவு பெறும் நிலையிலுள்ளது.

இப்பாதை ஆனையிறவு ஊடான பாதைக்குப் மாற்றுப் பாதையாக விளங்குகின்றது. மன்னார் மற்றும் பூனகரி பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணத்திற்கான குறுகிய தூர பாதையாகவும் இது விளங்ககுன்றது. கேரதீவு சங்குப்பிட்டி ஆகியவற்றின் பாதைகளை சுமார் 50 மீற்றர் வரையிலான கடல் நீர் பிரிக்கின்றது. அதற்கான நகரும் பாதை ஒன்று முன்னர் பயன்பாட்டில் இருந்தமையும், ஆனையிறவுப்பாதை போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் வன்னிக்கும் யாழ்.குடாநாட்டிற்குமான பிரதான பாதையாக இப்பாதை பயன்படுத்தப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.கல்வியங்காடு குளத்தில் ஆயுதங்கள் தேடப்படுகின்றன!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதான தகவலையடுத்து அப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கல்வியங்காடு சந்திரசேகரர் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றிற்குள் ஆயுதங்கள் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட குளம் அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிக்கப்பட்டு ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குளத்தின் நீர் படையினரால் பத்து நீரிறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு இறைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொக்கிளாய் கிராம மக்கள் 26 வருடங்களின் பின்னர் மீள்குடியமர அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் மக்கள் 26 வருடங்களின் பின் அவர்களின் கிராமத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இக்கிராமத்திலிருந்து 1984ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் வசித்து வந்தனர்.

கொக்கிளாய் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் மீள்குடியேற 34 குடும்பங்கள் மட்டும் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியுள்ள இக்குடும்பங்கள் இன்று திங்கள் கிழமை முல்லைத்தீவிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்படுகின்றவர்கள் பாடசாலையொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பின் அவர்களது காணிகளில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிக்குட்பட்ட விசுவமடு கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் எதிர்வரும் 29ம் திகதி மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் காயம்.

நோயாளியை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் காயமடைந்தார். மந்திகை வைத்தியசாலையிலிருந்து சென்ற அம்புலன்ஸ் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிறு மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்குச் சொந்தமான இந்த அம்புலன்ஸ் வாகனம் மந்திகை வைத்தியசாலை நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கோப்பாய் பகுதியிலுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

யாழ்.குடாநாட்டு வீதிகளிலும், யாழ். ஏ-9 பாதையிலும் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றமையும், இவ்வீதிகளில் வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுவதே இதற்குக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆறு பேருக்கெதிராக வழக்குத் தாக்கல்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் மேல்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த விடுதலைப்புலி உறுப்பினர்களால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுத் தொடர்பில் பதிலளிக்கும் போதே இவ்வாறு சட்டமாஅதிபர் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறித்த ஆறு விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக் கெதிராக கொழும்பு மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாண்டில் மட்டும் 46 பேர் விவாகரத்து கோரி யாழ்.நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் 123 பேர் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்திருந்ததாகவும், முப்பது வயதிற்குட்பட்ட இளம் தம்பதியினரே இவ்வாறு விவாகரத்து கோரி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும் நீதிமன்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையின்மை, பொருளாதாரப் பிரச்சினைகள், என்பனவே யாழ் மாவட்டத்தில் விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விவாகரத்து கோரும் தம்பதிகள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த நீதிமன்றங்கள் முயல்கின்ற போதும் விவாகரத்துக் கோருவதில் பலர் பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விவாகரத்துக் கோருபவர்களில் அரசாங்க ஊழியர்களே அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாண சமூகத்தின் மத்தியில் பலருக்கு இணக்கமான குடும்பவாழ்வு இல்லாத நிலை தோன்றியுள்ளதாகவும் சில சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வயதான தம்பதிகள் மத்தியில் இவ்வாறான முரண்பாடுகள் தோன்றுவதாகவும் ஆனால், தங்களின் பிள்ளைகளின் நலன்குறித்த எண்ணத்தினாலும், சமூகத்திற்கு பயந்த நிலையிலும் விவாகரத்தை நாடாமல் போலியான குடும்ப வாழ்க்கையை அவர்கள் நடத்துவதாகவும் சமூகவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு.

ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு தற்போது அரசாங்கத்தின் பக்கம் தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா தமக்கு வாக்களித்த ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை ஏமாற்றிட்டார் எனவும், அவருக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிறீரங்காவுடனான உடன்பாடுகள் அனைத்தும் ரத்துச் செய்ய்பட்டுள்ளதாகவும் சிறிரங்கா எடுக்கும் தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது எனவும், இதே நேரம் அவரது தனிப்பட்ட தீர்மானங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி பொறுப்பேற்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீரங்கா கொழும்பைத் தளமாக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ‘மின்னல்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் என்பதும் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி பட்டியலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்படத்தக்கது.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் மக்கள் மீள்குடியமர அனுமதி.

மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட நாகதாழ்வுப் பகுதியில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக 1985 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மன்னார் நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் வசித்து வந்தனர்.

இவ்வாறு தங்கியிருந்தவர்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை மன்னார் வாழ்வோதயம் அமைப்பும், வீட்டுப்பாவனைப் பொருட்களை ஐ.நாவின் உயர்ஸ்தானிகராலய பணிமனையும்; வழங்கின. இவர்களுக்கு அறுமாதகால உலருணவுப்பொருட்களை வழங்க பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்க நடவடிக்கை.

வன்னிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கும் பாடசாலைகளுக்கு அடுத்தவாரம் புதிய தளபாடங்கள் வழங்கப்படும் என மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளவும் இயங்கத் தொடங்கியுள்ள பாடசாலைகளில் தளபாடப் பற்றாக்குறைகள் காரணமாக மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து கற்றலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இப்பாடசாலைகளுக்கு தளபாடங்களை பெற்றுக்கொடுப்பதில் ஆளுநர் துரித கதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் இத்தளபாடங்கள் வலையக் கல்விப்பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.