மன்னார் நாகதாழ்வுப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட நாகதாழ்வுப் பகுதியில் கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக 1985 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மன்னார் நகர் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் வசித்து வந்தனர்.
இவ்வாறு தங்கியிருந்தவர்களில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான தற்காலிக இருப்பிடங்களை மன்னார் வாழ்வோதயம் அமைப்பும், வீட்டுப்பாவனைப் பொருட்களை ஐ.நாவின் உயர்ஸ்தானிகராலய பணிமனையும்; வழங்கின. இவர்களுக்கு அறுமாதகால உலருணவுப்பொருட்களை வழங்க பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.