::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 81 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ் எண்ணிக்கையான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 28 பாரியளவிலான வன்முறைச் சம்பவங்களும் 53 சிறுவன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், கடுவெல தேர்தல் தொகுதியிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதுவரை நடைபெற்ற வன்முறைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதுடன் ஒருகொலை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 6 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவட்ட அடிப்படையில் கொழும்பில் 33 வன்முறைச் சம்பவங்களும் கம்பஹாவில் 25 வன்முறைச்சம்பவங்களும் களுத்துறையில் 23 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கட்சி அடிப்படையில் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராக 21 சம்பவங்களும், ஐ.தே.க.வுக்கு எதிராக 07 சம்பவங்களும் ஜே.வி.பி.க்கு எதிராக 01 சம்பவமும் ஏனைய கட்சிகளுக்கு எதிராக 52 சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே இந்த அரசிடமிருப்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது -கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை சர்வதேசம் இன்று உணரத் தொடங்கியுள்ளது. இந்த அரசாங்கத்திடம் தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனை உணர்ந்தே சர்வதேச நாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியவர்கள் இன்று தீர்வை முன்வைக்குமாறு நிர்பந்திக்கின்றனர்.

இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேல் மாகாணசபைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து கொலன்னாவ சாத்தம்மா தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

தொடந்து பேசிய அவர்; பொறுப்பும், கௌரவமும் மிக்க பதவியான பிரதமர் பதவியில் இருப்போர் சவப்பெட்டி, ஆணி, இரத்தம்மென மக்களை போரை நோக்கி நகரச் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இன்று வன்னியில் வாழும் மக்கள் தம் மண்ணை விட்டு அகலமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இம்மக்களின் மன உறுதிக்கு மாசு கற்பிக்க முயன்ற அரசின் முயற்சிகள் யாவும் தவிடுபொடியாகி உள்ளது. இன்று தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக நாம் மட்டுமே போராடுகின்றோம். மற்?றய கட்சிகள் என்ன செய்கின்றன.

ஐக்கிய தேசியக்கட்சி தென்னிலங்கையில் நடக்கும் மரண வைபவங்களுக்கு கதிரைகளை வழங்கிவருகின்றது. போரைப்பற்றியோ, தீர்வை பற்றியே ஐக்கிய தேசியக்கட்சி இன்று அதிகம் கதைப்பதில்லை. அவசரகாலச்சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும்போது எதிர்த்துவாக்களிக்காமல் ஒதுங்கி போவது அதற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானதாகும். எதிர்வரும் காலங்களில் வார்த்தைகளால் மக்களுடன் விளையாடமுடியாது. சரியான நிலைப்பாட்டுடன் மட்டுமே மக்களை அணுகமுடியுமென்றார்.

தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் மோசமாக அதிகரிக்கும் அபாயம் – பவ்ரல்

எதிரணி அரசியல் கட்சிகளுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதகாரிகள் உடனடியாக மேற்கொள்ளாதுவிட்டால் எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான வன்முறைகள் இடம்பெறும் சூழ்நிலை ஏற்படுமென தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் எச்சரித்துள்ளது.

அத்துடன் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இல்லாத நிலையில் மேல்மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை நீதியானதும் நேர்மையானதாகவும் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு கலாசார, சமய உறவுகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த பவ்ரல் அமைப்பின் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறியதாவது;

எமது அமைப்பு வேட்பு மனு கையளிப்பு ஆரம்பித்த நாள் முதலே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது. நாம் முதல் கட்டமாக தேர்தல் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் முக்கிய பொறிமுறையான நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம்.

இரண்டாம் கட்டமாக அக்குழுவில் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதுடன், அவரையும் உள்ளடக்கும் தேர்தல் குழுவொன்றை பவ்ரல் தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஏற்படுத்துவதாகும். தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளையும் தகவல்களையும் ஆராய்வதற்கான அலுவலகத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக் குழு தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை இணைத்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன. இந்நிலையில், இவற்றுக்கென மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பாளருக்கு உதவும் பொருட்டு தொகுதிவாரியாக பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள 2,299 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒருவர் வீதம் எமது கண்காணிப்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களுக்கான செயலமர்வுகளையும் மாவட்டம் தோறும் நடத்தவுள்ளோம்.

இதற்கு மேலதிகமாக தேர்தல் தினத்தன்று 40 நடமாடும் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தி 200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பதற்காக சேவையில் ஈடுபடுத்துவதும் எமது திட்டங்களாகும்.

மேலும், எமது ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெறும் சர்வகட்சி நடவடிக்கை கூடம் தேர்தல் செயலகத்தில் இயங்கும். அதேவேளை, பிரதேச ரீதியாக நிறுவப்படும் பிரதேச சர்வகட்சி நடவடிக்கை கூடத்திலும் எமது பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள் சார்ந்த சில சம்பவங்கள் தவிர்ந்த ஏனைய பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாது அமைதியான முறையில் இடம்பெற்றது. நாம் அவதானித்ததன் பிரகாரம் 70% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது அதிகரிக்கலாம்.

இதேவேளை, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக சட்ட முறையற்றவிதத்திலான சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுத்ததுடன், வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போட், சாரதி அனுமதிப்பத்திரம், ரயில்வே பருவகாலச் சீட்டு, தற்காலிக அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை என்பவற்றுக்கு அனுமதியளித்துள்ளார்.

இத்தேர்தலில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் அநேகர் மத்தியில் இவை இரண்டுமற்ற வேட்பாளர்கள் கவனிக்கப்படாமல் போவது ஜனநாயக பண்பல்ல. இந்த பண அரசியல் பலம் உள்ளவர்களால் 500 மில்லியன் ரூபா சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு உள்ள நிலையில், இதனை அகற்றுவதற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இட்ட முறையற்ற பிரசாரத்தை அகற்றும் போது மீண்டும் அவை ஒட்டப்படுகின்றன. இதனை நிறுத்த கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒத்துழைப்பு அவசியம்

அத்துடன் பிரச்சினை ஏற்படும்போது சர்வகட்சி மூலம் உடனடியாக தீர்வு காண்பது போல் இதற்கும் தீர்வைக் காணவேண்டும். குறிப்பாக எவ்வித அரசியல் அடிப்படையும் அற்ற கட்சிகளும் குழுக்களும் பெயரளவில் மாத்திரம் தேர்தலில் களமிறங்குவதை மட்டுப்படுத்தாத யாதேனும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்டதோர் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடைய ஆவணத்தை இல்லாமல் செய்யமுடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.2,378 வேட்பாளர்களில் 19 பேரே பெண்களாவர், இது கவலைக்குரியது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் குறைந்தது 30 பெண்களை தெரிவு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். பெண்கள் நிலைமை தொடர்பில் இந்த குறைவான எண்ணிக்கையான வேட்பாளர்கள் மூலம் பாரதூரமான பலவீனமுள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எமது கண்காணிப்பின்போது கொலைச்சம்பவம் ஒன்றுடன் 13 தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ளோம். மொத்தமாக 38 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். ஜே.வி.பி. ஆதரவாளர் கொல்லப்பட்டமை, அவர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளமையை நாம் பதிவுசெய்துள்ள நிலையில், எதிரணி அரசியல் கட்சிகளுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் வருடப்பிறப்புக்கு பின்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் நிலைமை இன்னும் மோசமாகும்.

17 ஆவது அரசியலமைப்பு இல்லாத நிலையில் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இல்லாது முன்னர் போன்று தேர்தல் இடம்பெறுவதால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்காளர் அட்டைகளை மேலதிகமாக விநியோகித்து தேர்தலில் வெற்றிபெற ஆளும் கட்சி புதிய தந்திரம் – ஐ.தே.க. குற்றச்சாட்டு

unp-members.jpg1,33,000 அட்டைகள் சட்ட விரோதமானவை ‘அரசாங்கம் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்ற நிலையில், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் “சட்ட விரோத வாக்காளர் அட்டை’யெனும் புதிய முறையொன்றை அரசு கையாண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி இவ்வட்டைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாதென்ற வகையில் இதற்கு பதிலளிக்க அவர் கடப்பாடுடையவர் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மகாநாட்டில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்த முன்னோடி ஏற்பாடுகள். 20ம் திகதி சபையில் சட்டமூலம்

parliament.jpgவடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம், மேற்கொண்டு வருவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இதற்கான பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய சட்டமூலம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்தற்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே மேற்படி சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த போதும் அந்த அங்கீகாரம் ஆறு மாத காலத்திற்கே செல்லுபடியாகும். வடக்கில் நிலவும் யுத்த சூழ்ல்நிலை காரணமாக குறித்த ஆறு மாத காலத்திற்குள் மேற்படி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாமற் போனது.  வடக்கு மீட்கப்பட்டு வரும் இவ்வேளையில் வடக்கில் உள்ளூராட்சிச் சபை தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் மக்களுக்கான அரசாங்கத்தின் சேவைகள் சகல மக்களுக்கும் சென்றடையும் வகையில் நிர்வாகங்களை செயற்படுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெரிதும் உதவும் என்பதால் முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசியல்வாதி வாக்களிக்கும்போது புகைப்படம் எடுக்க தடைவிதிப்பு

election_ballot_cast.jpgமேல் மாகாணசபைத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட எந்தவொரு அரசியல்வாதியும் வாக்களிக்கும்போது புகைப்படமெடுப்பதை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தடைசெய்துள்ளார்.

வாக்களிப்பு தினத்தில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் ஊடகவியலாளர்கள், புகைப்படப் பிடிப்பாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் எவரையும் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அனுமதிக்க வேண்டாமென அவர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர்கள், அரசாங்கத் தரப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எவராக இருப்பினும் அவர்களை புகைப்படங்கள் எடுக்கக் கூட அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள்ளும் ஊடகவியலாளர்களையோ, படப்பிடிப்பாளர்களையோ தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்களையோ அனுமதிக்க வேண்டாமென தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் ஆணையாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் தலைவர்களிடம் பேட்டி காணவும் புகைப்படமெடுக்கவும் விரும்பும் ஊடகவியலாளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நூறு யார் தொலைவுக்கப்பால் அதனைச் செய்ய முடியுமெனவும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு மாவட்டங்களில் இணைகிறது : ரவூப் ஹக்கீம்

election_ballot_cast.jpgஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை மேல்மாகாண சபை தேர்தலில் இரு மாவட்டங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளாக தம்மை நிலை நிறுத்தும் பொருட்டு ஒற்றுமையுடன் இத்தீர்மானத்தினை இரு கட்சிகளும் எடுத்ததாக ரவூப் ஹக்கீம் இன்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிரணியிலுள்ள பல சிறுபான்மைக் கட்சிகளையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நாம் பாடுபடுவோம். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்களின் உரிமை இழக்க நேரிடும் சந்தர்ப்பத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இது ஒரு ஆரம்பகட்டமே.

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியுடன் 200 சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 7 ஆம் திகதி ‘சுதந்திரத்திற்கான மேடை’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்கவுள்ளன. இந்த இயக்கத்திலும் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவுள்ளோம். தேர்தல் சட்டங்களை மறைமுகமாக மாற்றும் முயற்சியில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மற்றக்கட்சிகளில் இருந்து உறுப்பினர்களைத் தனது பக்கம் அழைத்து, பதவிகள் வழங்கி, பெரும்பான்மை பலத்தை இன்றைய அரசு தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது.

“தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் மனோகணேசனின் கரத்தை பலப்படுத்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்’

election_ballot_cast.jpgதலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் உண்மைக்குரலாக, உரிமைகளை பெறுவதற்கு உரிய விதத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் மனோ கணேசன் என்பதை உலகமே அறியும் என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் மேல்மாகாணசபைக்கான வேட்பாருமான ஏணி.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ் சமூகத்தின் உரிமைகருதி, உயர்வு கருதி தனது சிந்தனையையும் , செயலையும் விரிவுபடுத்துவதோடு, உரிமைக்குரலை நேர்மையாக முன்வைக்கும் நிகரற்ற தலைவர் மனோகணேசன். கடந்த காலங்களில் நடந்தநிகழ்வுகளில் கடத்தல், காணாமல்போனோருக்காக கரிசனையுடன் கடமையாற்றிய அவரின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் கொழும்பில் இப்படியும் ஓர் அரசியல்வாதியா! என்று வியந்து பார்க்கும் அளவுக்கு பெருமைக்குரியது.

நமக்காக, நமது சமூகத்துக்காக நற்சிந்தனையுடன் காரியமாற்றும் மனோகணேசனின் கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பம் மேல் மாகாணசபைத் தேர்தலாகும். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மூவர் போட்டியிடுகின்றோம். மூவருக்கும் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள் மூன்றையும் அளித்து அமோக வெற்றிபெறச் செய்வது நமது தலைவர் மனோகணசேனின் கரங்களை பலப்படுத்தும் ஓர் அரிய கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் தங்களது விருப்பு வாக்குகள் மூன்றினையும் ஜனநாயக மக்கள் முன்னணிவேட்பாளர்களுக்கே அளித்து, அமோக ஆதரவை தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதித்துவம் மேலும் இரண்டில் மூன்றாக அதிகரிக்கப்படும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மேல் மாகாணசபையில் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேல் மாகாணசபையில் மூன்று பிரதிநிதித்துவத்தை பெறுவதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரின் பலம் அதிகரிக்கப்படுகின்றது என்பதை நாம் நன்குணர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்கும் அதேசமயம் மூன்று விருப்பு வாக்குகளையும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கே அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தன்மானக்கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காது. வெற்றிபெறும் மூன்று வேட்பாளர்களையும் அமோக வெற்றி பெறச் செய்வதே ஆரோக்கியமான வாக்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 60 ஆக உயர்வு : கபே

caffe.jpgமேல் மாகாண சபைக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏப்ரல் 02ஆம் திகதி வரையில் 60 வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  கபே நிலையம் அறிவித்துள்ளது.

பதியப்பட்டுள்ள சம்பவங்களில் கூடுதலான பாரிய சம்பவங்கள் கடுவெல தேர்தல் தொகுதியிலேயே பதிவாகியுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதி வரையான 60 சம்பவங்களில் 20 பாரிய சம்பவங்களும் 40 சிறியளவிலான சம்பவங்களும் அடங்குகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ள தேர்தல் கண்காணிப்புக்கான நிலையம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும், ஐ.தே.கவுக்கு எதிராக 07 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேவேளை, ம.வி.மு. (ஜே.வி.பி.) எதிராக எவ்விதமான முறைப்பாடுகளும் பதியப்படவில்லை. அத்துடன், அடையாளப்படுத்தப்பட முடியாத 39 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களுக்கு வாக்களிப்பு வசதி

duglas_devanandass.jpg
பார்வையற்றவர்கள் தேர்தல்களின்போது வாக்களிப்பதற்காக நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்லும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக  அரசியல் கட்சித் தலைவர்களுடனும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.