மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் – மகிந்த ராஜபக்ச

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

15 ஆவது இராணுவ வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சிப் பெற்றது.

தற்கொலை மனித குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலை புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலை குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்த கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களை கொண்டு வரும் கப்பல்கள் என பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூற வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாக பலரை கொலை செய்த விடுதலை புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளை நிராகரித்து விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதலை தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் எதிர் தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காவது ஈழ போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு பாதுகாப்பு செயலாளர்,பாதுகாப்பு சபையின் பிரதானி,முப்படையின் தளபதிகள்,பொலிஸ்மா அதிபர்,சிவில் பாதுகாப்பு படையணியின் பிரதானிகள்,மற்றும் முப்படையினருக்கும்,நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கிறேன்.

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம். ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்த்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் – பின்னணியில் ராஜபக்சக்கள் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக விரைவில் ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக, தற்போது அரசியல் ரீதியாக தோற்றுப்போயுள்ள ராஜபக்ச தரப்பினர் இதன் பின்னணியில் செயற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

 

ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (07) , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், எந்த பிரச்சினையும் இல்லை.

அவர்கள் 10 கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்தனர் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டு!

மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தேசிய ரீதியில் புகையிரத, அரச மற்றும் தனியார் பேரூந்து என ஒரு இணைந்த சேவையாக போக்குவரத்து திட்டமிடல் அமைய வேண்டும்.

 

மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப் பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை.

 

குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை.

 

மகிந்த ராஜபக்ஷவினர் எப்போதும் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்.

 

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பினருக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.” – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

 

உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.

சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன. ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களின் குடியுரிமையை நீக்க நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ நிதியை பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும்.

 

அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும்.

 

எனவே, பொருளதார நெருக்கடிக்கு காரணமானர்கள் குறித்து தேவையேற்படின் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் உள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிழைத்துள்ளனர் என ஆணைக்குழு பரிந்துரைத்தால் அதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட நபர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இல்லாது செய்ய முடியும்.

 

இதற்கான யோசனையை அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றித்திலும் முன்வைக்கலாம்.

 

அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றேன் – சபையில் மகிந்த ராஜபக்ச

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

 

“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதற்கு பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.

 

எனினும், குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக சேற்றின் மீது கை வைக்க தேவையா? அதனால், சேறு பூசுபவர்கள் கைகளில் சேறு உள்ளதை கூற விரும்புகிறேன்.

 

ஒருவருடைய உரிமையை அழிக்கப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் நாட்டு மக்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய செயற்பட்டிருக்க வேண்டும்

 

வரலாறு நெடுகிலும் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம்.

 

எனவே, ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள், ஒரு உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என் தெரிவித்தார்.

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளது – நாடாளுமன்றத்தில் சுமந்திரன்!

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MAசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய முறையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பொறுப்புடையவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் அரசாங்கம் மற்றும் பொது மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதனாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்குமாறும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திறைச்சேறிக்கு கொண்டு வரும் படியும் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

“இலங்கையின் சிறுவர்களை அறிவாளிகளாக மாற்ற முயன்ற ராஜபக்சக்கள் மீது செனல்-04 செனலுக்கு பரம்பரை பிரச்சினை உள்ளது.” – நாமல் ராஜபக்ச விசனம் !

செனல் 4 செனலுக்கு மகிந்த ராஜபக்சவுடன் பரம்பரை பிரச்சினை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முல்கிரிகல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

டி.எம்.ராஜபக்ஷவுடன் நாங்கள் அரசியலைத் தொடங்கினோம். அதன்படி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எமது அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன. மகிந்த ராஜபக்ச 55 வருடங்கள் அரசியலில் இருந்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி பேசி நேரத்தை செலவிட மாட்டேன். 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நிலையும் இன்றைய மாவட்டத்தின் நிலையும் மக்களுக்குத் தெரியும். அப்போது, ​​இம்மாவட்ட குழந்தைகள், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மட்டுமே நினைத்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பல்கலைக்கழக அனுமதி பற்றி பேசுகிறார்கள்.

கடந்த காலத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தவில்லை. இதனால், உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரண்டாம் தடவை பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பிள்ளைகளுக்கும் ஏதாவது நீதி கிடைக்க வேண்டும். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பரீட்சைக்குத் தோற்றுவது இலகுவான காரியம் அல்ல. உயர்தரப் பரீட்சையே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான ஒரே வழியாக மாறியுள்ளது. இந்த கல்வி முறை மாற வேண்டும். பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அரசாங்கத்தின் நோக்கத்தை கற்பிக்காமல், உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையை மறுசீரமைக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதும் போது அவர்களில் நாற்பதாயிரம் பேர் பல்கலைக்கழகம் செல்கின்றனர். அந்த பிள்ளைகளை அரச சேவையில் சேர்க்க முடியாது. ஏனெனில் ஆறு லட்சமாக இருந்த அரச சேவை பதினான்கு லட்சமாக உயர்ந்துள்ளது. அரசு இயந்திரத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவில்லை என்றால், புதிய அரசு ஊழியர்களை சேர்ப்பது நடைமுறையில் இருக்காது. எனவே எதிர்கால குழந்தைகளுக்காக நாம் என்ன செய்வோம்? அவர்கள் தனியார் பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழிற்பயிற்சி பெற இடம் வழங்க வேண்டும். பயிற்சி நிலையங்களில் அந்த படிப்புகளுக்கு இடம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

இந்த சவாலை பார்த்த மஹிந்த ராஜபக்ஷ பசுமை பல்கலைக்கழகத்தை கட்டினார். கோத்தபாய ராஜபக்சவும் நகர பல்கலைக்கழகங்களை நிறுவ முயற்சித்தார் ஆனால் அது வெற்றியடையவில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தொழில் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நாங்கள் அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கிறோம். அண்மையில், நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை குறித்து விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் எவ்வளவோ விவாதம் செய்தாலும் கிராம மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கிடைப்பதில்லை. நம் நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்யாத வரை, சர்வதேச நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டும். இதனால்தான் அம்பாந்தோட்டை, அனுராதபுரம், ஒயாமடுவ ஆகிய இடங்களில் மருந்துக் கிராமங்களை அமைக்க ஆரம்பித்தனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக விவாதித்து வருகிறோம். இந்த நாட்களில் சனல் 4 ஒரு திரைப்படம் காட்டப்படுகிறது. அந்த சனலுக்கு ராஜபக்சக்களுடன், குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் பரம்பரை பிரச்சினை உள்ளது. 2009-ம் ஆண்டு இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் பற்றிய திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கம். அதனை ஓரளவு ஏற்றுக்கொண்டன. புலனாய்வு அமைப்புகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இராணுவம் பலவீனமடைந்தது. போர் வீரன் சிப்பாயாக மாறினான். இதனால், புலனாய்வு அமைப்புகள் வீழ்ந்தன. அவர்களின் தன்னம்பிக்கை குறைந்தது. அதன் முடிவைப் பார்த்தோம். போராட்டம் உருவாகும் போது அதைப் பற்றி அறிய உளவுத்துறை அமைப்புகள் இல்லை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளால் தகவல்கள் வழங்கப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. இன்றும் அந்த செனல் ராஜபக்சவுக்கு சேறுபூசுவதை விட நமது நாட்டின் புலனாய்வு அமைப்புகளை அழிக்கும் சதியை செய்து வருகிறது. இதனால் சிலர் அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள்.​

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் மேடையில் சஹ்ரான் என்ற நபர் இருந்தார். தன்னைக் கொன்றவர்களின் தந்தை இப்ராஹிம் ஜே.வி.பியின் தேசியப் பட்டியலில் உள்ளார். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்துவார்கள் என்று நினைக்க முடியாது.

எங்களிடம் ஒரு கொள்கை உள்ளது. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமுறை அந்தக் கொள்கைகளை நவீனமயமாக்கி முன்னேற வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். தேசிய வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் நாம் அந்நியமாதலுக்கு எதிரானவர்கள். இந்த நாடு நவீன உலகத்தை சமாளிக்க வேண்டும். போராடியவர்களுடன் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. வீடுகளை எரித்தும், மக்களைக் கொன்றும் போராட முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி அன்றைய தினம் 60000 இளைஞர்களைக் கொன்றது. 71,88,89 இளைஞர்களின் போராட்டம் தோல்வியடைந்தது. தனிநாடு உருவாக்க விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. நவீன உலகில் டிஜிட்டல் இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடைசியில் பலனை இழந்துவிட்டது. இந்த நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.