சரத் வீரசேகர

சரத் வீரசேகர

யுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழர்களின் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ.நா.சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.

அதேபோன்று இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் எந்த பிரேரணைகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.

இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கின்ற அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடியது மகிழ்வளிக்கிறது – சரத்வீரசேகர மகிழ்ச்சி!

தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று(4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என தெரிவித்தார்.

 

நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. – சரத் வீரசேகர

தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.

 

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெறுகிறது – சரத் வீரசேகர

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் இருபத்தைந்தாயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், இன்று அந்த மாகாணங்களில் ஒரு குடும்பம் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐம்பத்திரண்டு வீதமான தமிழ் மக்களில் வடக்கு, கிழக்கு வாழ்கின்றனர் எனத் தெரிவித்த அவர், சிங்கள மக்கள் பெரும் தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப்பாடசாலைகள் இல்லை எனவும், இது ஒரு துரதிஷ்டமான நிலை என தெரிவித்த அவர், இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும்.” – எச்சரிக்கிறார் சரத் வீரசேகர !

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் புலிகள் அமைப்பை தோற்கடித்ததையடுத்து, இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளினாலேயே நாம் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த நாடுகள் அன்று எம்மை போர் நிறுத்தம் செய்யுமாறு அறிவித்தன. ஆனால், இன்று காஸா மீது போரைத் தொடருமாறு அமே நாடுகள்தான் தெரிவித்து வருகின்றன. இது உண்மையில் வெட்கத்துக்குரிய விடயமாகும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், இன்றும் ஈழக்கனவுடன்தான் இருக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்.

இந்நிலையில், திவுல்பத்தான கிராமத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒன்றை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். யுத்த காலத்தின்போது புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அந்த கிராமத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தான், அந்த விவசாயிகள் தங்களின் பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் கிராம சேவகரிடம் உள்ளது. இந்த அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நினைப்பது தவறாகும்.

இது மீண்டும் தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு இடமளிக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றுக்கு வரும் முன்னர் பிரபாகரனிடம்தான் பதவியேற்றார்கள். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டாம் என் இவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” – சரத் வீரசேகர

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனவும் “தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாது போன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்.டி.டி.ஈ. அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.

இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 422 புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மீண்டும், எல்.டி.டி.ஈ. அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுங்கள் – சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் !

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

 

இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மேலும் நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பலவேறு கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

 

“குருந்தூர்மலையில் தமிழர்களை பொங்க அனுமதிகொடுத்த முல்லைத்தீவு நீதவான் மனநலம் பாதிக்கப்பட்டவர்.” – சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ” – எம்.கே. சிவாஜிலிங்கம்

“நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”  என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் சுரேன் இராகவன் போன்றோரின் அண்மைக்கால கருத்துகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.  இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி  தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர். அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட  பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற  வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்டவர். அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார்.

தற்போது இவர் அமைச்சரில்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக  காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல்  முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.

இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது  தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?

இனப்படுகொலைகள்  படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக  பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும்  இல்லை.

இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக . மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல்  தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு  அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர இதற்குவேறு வார்த்தைக்ள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை.  தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஓத்துதுகின்றவராக  சுரேன் இராகவனும் இணைந்துள்ளார். அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையேல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை  இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என்றார்.

குருந்தூர் மலை தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக நீதிபதிகளும் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி அரசியலமைப்பின் 9 ஆவது அத்தியாயத்தை முழுமையாக மீறியுள்ளார் என்றும் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க சிங்கள மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய நல்லிணக்கத்துக்கும்,தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.