“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர
யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியேற்றியமை நாட்டுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.
யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.