கொரோனா

கொரோனா

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது அஸ்ட்ராஜெனெகா !

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பிரிட்டன் நாட்டின் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனம். வர்த்தக ரீதியான காரணங்களால் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிட்-19 பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கானதடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குக தொடரப்பட்டது. இது அந்த நாட்டில் தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. இது அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கோவிட் தடுப்பூசியை தயாரிப்பதையும் விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்துள்ளது. இது நேற்று (மே 7) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மீண்டும் வேகமாக பரவிவரும் கொரோனா – எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் !

புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

 

எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்து உலக சுகாதார மையம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.

“எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்,” என்று உலக சுகாதார மையம் டுவிட் செய்துள்ளது.

சீனாவில் மக்கள் போரைாட்டத்தை அடுத்து தளர்த்தப்பட்டது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் !

உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களில் குவாங்ஜவ் மாகாணத்தில் தெருக்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) தூவி அவர்களை கலைந்து போக செய்ய ஷாங்காய் போலீசார் முயற்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து, புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டம் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். இதன்படி, மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை கவனித்து வரும் துணை பிரதமர் சன் சுன்லான் கூறும்போது, கொரோனாவின் தொற்று நோய் ஏற்படுத்தும் வீரியம் குறைந்து வருகிறது என கூறியுள்ளார். ஒரு புது சூழலை நாடு எதிர்கொண்டு வருகிறது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஒமைக்ரான் பலவீனமடைந்து வருகிறது. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு, வைரசின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சன் கூறியுள்ளார். எனினும் மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் – அறிகுறிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள் உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரோன்   நோய் அறிகுறிகள் சம்பந்தமாக தென் ஆபிரிக்காவின் மருத்துவ பேரவை அடிப்படையாக ஆய்வுகளை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

தசைவலி, லேசான இருமல், உடல் சோர்வு என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய நோயாளிகளிடம் காணப்பட்ட வாசணையை நுகர முடியாத தன்மையை இந்த புதிய வைரஸ் திரிபிடம் காண முடியவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவப் பேரவையின் மருத்துவர் எஞ்சலிக் கோழுடிசி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபு பரவுகிறது என்ற எச்சரிக்கையை இந்த மருத்துவரே முதலில் விடுத்திருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி தன்னிடம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

தொற்றாளர்களிடம் நடத்தப்பட்ட மரபணு ரீதியிலான ஆக்கிரமிப்பு சம்பந்தமான பரிசோதனைகளில் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் பரவியது என்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே நேரம் புதிய வகை கொரோனா இலங்கைக்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா – 7 இலட்சம் பேர் வரை இறக்க வாய்ப்பு !

கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!