அமைச்சர் பந்துல குணவர்தன

அமைச்சர் பந்துல குணவர்தன

ஜே.வி.பியினருக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன

ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியுடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெல்லவாய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. முறையான மறுசீரமைப்புக்களுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளோம் என்பதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார மீட்சிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றியமைத்தால் அல்லது இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களை தவறான வழிநடத்தும் வகையில் போலி அரசியல் வாக்குறுதிகளை வழங்குவதை அரசியல்வாதிகள் அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் வாக்குறுதிகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் அரசியல் வாக்குறுதிகளை அனைவரும் தவிர்த்துக் கொள்வது அத்தியாவசியமானது. இந்தியா, சீனா உள்ளிட்ட முன்னிலை நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய எதிர்ப்பு கொள்கைகளை கடைப்பிடித்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டமை வரவேற்கத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணிக்கு ஜப்பான், தென்கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க வேண்டும் என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியினரை இந்தியா அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தததது பாரிய பேசுபொருளானது. இலஙட்கை அரசியலில் சீனச்சார்புக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற நிலையிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு பின்னணியில் இருப்பதாக பலரும் குறிப்பிட்டிருந்த நிலையில் ஜே.வி.பியினர் இதனை முழுமையாக மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தனியார் மயமாக்கப்படவுள்ள இலங்கை போக்குவரத்து சபை..? – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன !

2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை(SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இதனை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும். இலங்கை போக்குவரத்து சபையின் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பயணி – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 84 ஊழியர்களே காரணம் என அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு!

ஹொரபேயில் நேற்று காலை நெரிசல் மிக்க ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பயணியின் மரணத்திற்கு 84 புகையிரத ஊழியர்களே நேரடிப் பொறுப்பு என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்,

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 84 ஊழியர்களின் சுயநல செயற்பாட்டினால் துரதிஷ்டவசமாக இளைஞன் உயிரை பணயம் வைக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

 

ஏறக்குறைய 18,000 தொழிலாளர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் அல்லது சுயநல நோக்கங்களுக்காக 84 ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ளும் முன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரயில்வே ஊழியர்களுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை புகையிரத பொது முகாமையாளருடன் அனைத்து பிரச்சினைகளையும் கலந்துரையாடுமாறும், அது தோல்வியுற்றால் போக்குவரத்து அமைச்சின் செயலாளரை சந்திக்குமாறும் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், தன்னை சந்திக்குமாறு ரயில் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுடன் நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கலந்துரையாடல் திட்டமிடப்பட்ட போதிலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்கள் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக நீண்ட தூர ரயில்களின் இயக்கத்தை பாதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

 

அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பதற்கு ஏற்கனவே தொழிலாளர்களுக்கு விருப்பங்களை வழங்கியிருப்பதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது .

 

84 ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தற்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறானதொரு துக்ககரமான மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரின் தலையீட்டை நாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் !

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தில் ஒருசில பிரிவுகள் தொடர்பாக பலர் கவலைகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அனைவரது கருத்துக்களையும் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்களை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.

ஒழுக்கக்கேடான பௌத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் இனிமேல் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன

பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் , முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட மூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று நேற்று செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேள்வியெழுப்பப்ட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். நாம் இன, மத பேதங்களால் பாரிய அழிவுகளை எதிர்கொண்ட நாட்டவராவோம்.

ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் பௌத்த மதகுமார்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிவரும் இரு மாதங்களுக்குள் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இது தொடர்பில் புத்த சாசன , மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன திஸாநாயக்க அறிவித்துள்ளார். இறுதி சட்ட மூலம் மகா சங்கத்தினரின் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மகா நாயக்க தேரர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு , அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் புத்த சாசன அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என்றார்.

தனியார் மயமாக்கப்படுகிறது இலங்கை ரயில் சேவை..?

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு என ஏற்படும் பாரிய செலவீனங்கள், திறமையின்மை மற்றும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க இயலாமை என்பன திணைக்களத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றம் செய்யபடாவிடின் ரயில்வே துறை தனியார் மயமாக்குவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

“IMF நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது.”- அமைச்சர் பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பெறப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய உண்மைகள் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

இன்று (21) காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் அது தொடர்பான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியளித்துள்ளார். நேற்றிரவு (20) இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிவசதி குறித்து கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, உடன்படிக்கையின்படி, அடுத்த 48 மாதங்களுக்குள் யார் ஆட்சிக்கு வந்தாலும், சம்பந்தப்பட்ட அரசாங்கம் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.

அரசியல் கருத்துக்களால் சூழப்பட்டிருந்தாலும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாங்கள் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளின்படி செயல்படாமல் இதற்கு முன் 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டோம் இம்முறையும் அது நடந்தால் நாடு மிகப் பெரிய பாதாளத்தில் விழும்.

எனவே, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்படுவதற்கு மாறாக, வேலைத்திட்டத்திற்கு இணங்கிப் பணியாற்றுவதில் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் என்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் இது தொடர்பான மாற்று ஆலோசனைகள் மற்றும் சாத்தியமான தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் அதன் பின்னர் விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்த முடியும் என்பதும் தனது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் கூறினார்.

இதே நேரம் “இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது  சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.” என ஜே.வி.பி கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

” பரீட்சைகள் எதுவாக இருந்த போதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும்.” – அமைச்சர் பந்துல குணவர்தன

நாட்டில் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சையையும், சிங்களவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்தியும், தமிழர்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்தியும் தமது தாய் மொழியில் பரீட்சை எழுதுவதற்கான உரிமை நாட்டில் நிலைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்த தீர்மானித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதற்கு இடைக்காலத்தின் போது சந்தர்ப்பம் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகள் எதுவாக இருந்த போதிலும் அதற்கு தாய்மொழியில் பதிலளிப்பதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் கூறினார். ஏந்தவொரு நாட்டிலும் ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை யுனெஸ்கோ சர்வதேச அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு, கலாநிதி பட்டம், அதற்கும் மேற்பட்ட பட்டங்களுக்கும் பதிலளிக்க தாய்மொழி தேவைப்படுமாயின் அதற்கு இடமளிக்கப்படுவது அடிப்படை மனித உரிமையாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், சட்டக் கல்லூரியின் நிருவாக சபையில் உள்ள நீதிபதிகள் இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அடிப்படை தாய்மொழியான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத முறையில் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்திக் கொண்டிருக்கிறோம் – அமைச்சர் பந்துல குணவர்தன

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது.

தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் ஒவ்வொரு அமைச்சின் செலவினங்களைக் குறைப்பதற்கான சுற்றுநிரூபத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தற்போது அரச சேவையில் இருப்பவர்களிடம் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை சுயமாக ஓய்வு பெறுவதற்கு அரச அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

எங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சுய ஓய்வு பெற விருப்பம் தெரிவித்தவர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சர் பந்துல

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அச்சம் இன்றி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.