ஆளுநர் வேதநாயகன்

ஆளுநர் வேதநாயகன்

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

அபிவிருத்தி திட்டங்களை கண்மூடித்தனமாக வடக்கு மக்கள் எதிர்க்கின்றனர் – ஆளுநர் வேதநாயகன் விசனம் !

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில் தங்களை மாற்றிக்கொள்வதற்குத் தயாராகவேண்டும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வடக்கு மாகாண விவசாய அமைச்சும், முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய உலக மண் தின நிகழ்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன் தனதுரையில், எமது மாகாணத்தில் விவசாயிகள் தங்களை இன்னமும் ஏழை விவசாயிகள் என்று விளித்துக்கூறிக்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு நவீன முறைமையிலான விவசாயத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது கண்மூடித்தனமாக எதிர்க்கின்றார்கள். அபிவிருத்திகளை முன்னெடுக்கும்போது ஆகக்குறைந்த சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து நாம் செய்யவேண்டும். அதைவிடுத்து எல்லாவற்றையும் எதிர்க்கும் மனநிலையில் நோக்கிக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது.

பல அரசு அதிகாரிகள் பிழையானவற்றுக்கு பழகிவிட்டார்கள். எங்கள் வடக்கு மாகாணமும் அதிலிருந்து விதிவிலக்கானது அல்ல. நேர்மையானவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள் அல்லது பந்தாடப்படுகின்றார்கள். அதைப்போலத்தான் வசதிபடைத்த செல்வாக்கானவர்கள் அரச திணைக்களங்களுக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதையுடன் விரைந்து சேவை வழங்கும் அதிகாரிகள், ஏழை எளிய மக்கள் வந்தால் அலைக்கழிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். புதிய அரசாங்கம் மக்கள் நேய சேவையைக் கொண்டு செல்லவே விரும்புகின்றது. அரச அதிகாரிகள் அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கைக்கு உண்மையை கூற முயற்சிக்கிறேன் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்றும் ஆளுநர் தெரிவித்தார். பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகை 25.12.2024 வயாவிளானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் வேதநாயகன், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் “இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள்இ வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” எனவும் இவற்றை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தி வருகின்றேன் என்றார் ஆளுநர்.

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!

தமிழக அகதிகள் பற்றி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மௌனம்! ஆளுநர் அவர்களைக் அழைத்துவர தீவிர முயற்சி!
வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வெளியேறுவதற்கு கடிதம் கொடுக்கும், காரணம் கண்டுபிடிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் உரிமைகள் இல்லாமல் வாழ்ந்துவரும் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் விடயம் தொடர்பில் மௌனமாகவே உள்ளனர். மாறாக இந்தியாவில் தொடர்ந்து தங்கியுள்ளவர்களை அவர்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி வடமாகாண ஆளுநர் வேதநாயகன் யுஎன்எச்சிஆர் ருNர்ஊசு ரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேவதநாயகன் ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் தலைவரான சஞ்சித்த சத்தியமூர்த்தியோடு டிசம்பர் 22 இல் கலந்துரையாடினார்.
தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலும் முகாம்களிற்கு வெளியேயும் 3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்கிறார்கள். 1992 ஆம் ஆண்டளவிலேயே பெருந்தொகையானவர்கள் யுத்தத்திலிருந்து தம்மை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்திற்கு அகதியாக சென்றனர். இவர்களில் ஒரு தொகுதியினரே நாடு திரும்பியுள்ளனர். தமிழக அகதி முகாம்களில் இரண்டு தலைமுறையாக வாழும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் இலங்கை திரும்ப விரும்பவில்லை. இவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிவதோடு அங்கேயே திருமணம் முடித்து அங்கேயே அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.
அவ்வாறே மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர். மேற்கு நாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்களின் இரண்டாவது தலைமுறையினரும் தங்களுடைய வாழ்க்கையை தங்கள் பெற்றோர் அகதியாக வந்த நாடுகளிலேயே அமைத்துக் கொண்டுவிட்டார்கள். அத்துடன் அவர்கள் வாழும் நாடுகளின் குடியுரிமையும் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது. அவர்களும் பெரும்பாலும் இலங்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை.
மாறாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் நீண்டகாலமாக தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்படி கோருகின்றனர். அவர்களும் கூட இந்தியப் பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர்.
எவ்வாறெனினும் சுயவிருப்பின் பேரில் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வருவதற்கான திட்டங்களை ஆலோசிப்பதும் அவசியமானதேயாகும். மேலும் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகளுக்கு இலங்கையில் நிரந்தர வாழ்விடமோ, தொழிலோ இல்லாமையால் அவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்ப விரும்பவில்லை.
ஒரு வேளை தமிழகத்திலிருந்து அவர்கள் அழைத்து வரப்படும் பட்சத்தில் இலங்கையில் அவர்களுக்கான மறுவாழ்த்திட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான அமைப்பானது உலகெங்கிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்கள் தமது சுயவிருப்புடன் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளை இலவசமாக செய்து கொடுக்கும். ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்தலுக்கான
அமைப்பானது 100 மேற்பட்ட நாடுகளில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது. சொந்த நாட்டிற்கு சுய விருப்புடன் மீள் திரும்பல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு திட்டத்தின் அகதிகள் நாடு திருப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும். இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்ட்ட பலர் தங்கள் சொந்த விருப்பில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற முறையில் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு, சட்டப்பூர்வமாக நாடு திரும்புவதற்கான ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதோடு விமானப் பயண ஒழுங்குகள் மற்றும் பயணப் பொதி தொடக்கம் ஒழுங்குகளையும் செய்து கொடுக்கும். மேலும் நாடு திரும்பியவர்களுக்கு தமது சொந்த இடங்களில் குடியமரவும் மற்றும் அவர்கள் தமது வாழ்வை தொடங்குவதற்கு உதவியாக ஆரம்ப கொடுப்பனவாக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்குகின்றது. இதனை ஸ்ராற் கெல்ப் என அழைக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்பவர்கள் சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை வழங்குகின்றனர். ஜேர்மனியைப் பொறுத்தவரை 18 வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு ஆயிரம் யூரோவும் குடும்பங்களுக்கு 4,000 யூரோக்களுக்கும் குறையாமலும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு 500 யூரோவும் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளுக்கு தலைக்கு ஒரு இலட்சம் ரூபாயும் விமானச் சீட்டும் வழங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி குறைந்த 5 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் வடமாகாணத்திலேயே உள்ளது. யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களே சனத்தொகை அடர்த்தி குறைந்த மாவட்டங்கள். இம்மாவட்டங்களில் சகல வசதிகளோடுமான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி, நாடு திரும்பும் அகதிகளைக் குடியேற்ற முடியும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள், பழைய மாணவர்சங்கங்கள் தாங்கள் சேகரிக்கும் பெரும்தொகைப் பணத்தை வினைத்திறனில்லாமல் செலவழிக்கின்றனர். வடமாகாண அளுநர் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இந்நிதியை இந்த மக்களின் மீள் குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட முடியும்.

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

ஆசிரியர்களைப் பேசி அனுப்பிய அதிகாரியின் நடத்தையைக் கண்டு வெட்கப்பட்ட ஆளுநர் வேதநாயகன்!

தனக்குக் கீழுள்ள சில அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்டு தான் வெட்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா வேதநாயகன் டிசம்பர் 22இல் தெரிவித்துள்ளார். கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற கலாச்சாரப் பெருவிழாவிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவது சவால் எனத் தெரிவித்தார். ஆளுநர் என்ன நடந்தது என்பதையும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

ஆளுநர் வேதநாயகன், தொலைபேசியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரை அழைத்து, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அவரிடமே அனுப்பியும் உள்ளார். குறித்த அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஆசிரியர்களை இரவு 7 மணிக்குத் தான் சந்தித்துள்ளார். அப்போது ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசித் திருப்பி அனுப்பி இருக்கின்றார். “இவ்வாறான அலுவலர்கள் எங்களுடைய மாகாணத்தில் எனக்குக் கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய இளையோர் மற்றவர்களை மதிக்கின்ற உதவி செய்கின்ற விழுமியங்களை வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை எனக் குறைப்பட்டார், தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை இருக்கின்றது எனத் தெரிவித்தார். வீதிகளில் குப்பை போடுகின்றோம், வெள்ள வாய்க்காலை மறித்து, கட்டிடங்களைக் கட்டுகின்றோம், ஒழுக்கமில்லாத சமூகமாக மாறிவருகின்றோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர் வேதநாயகன். இந்தப் பண்பாட்டு விழாவிலும் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக வந்திருப்பதையும் மக்கள் சமூகம் தராததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துங்கள் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துங்கள் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்!

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் 11.12.2024 இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்கவேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.

மக்களின் குறைகளை நேரில் கேட்டறிய முல்லைத்தீவிற்கு ஆளுநர் விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் – பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி பயன்பெற்றனர்.

இதேபோல் மன்னார், வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை இடம்பெற உள்ள திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.