தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை பம்பலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண், ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருமணமாகி சில காலம் குழந்தை பேறு இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தநிலையில், சந்தேகநபரான வைத்தியர், அடிக்கடி தகராறு செய்யும் தமது மனைவியை கொல்லும் நோக்கில் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.
மேலும், உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க மனைவியின் உடலில் இன்சுலின் ஊசியை வலுக்கட்டாயமாக செலுத்தி அவரை கொல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மயக்கமடைந்த மனைவி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய, சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.