இலங்கை கிரிக்கெட் அணி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. மிக நீண்ட காலமாக பெரிய வெற்றிகள் எவையும் கிடைத்திராத நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்ற நிலையில் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவேளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே தற்போது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வெல்ல காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்ச தான் காரணம் என கூறுவது நகைச்சுவையானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது எனத் தெரிவித்தார்.