ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி சனிக்கிழமை (09) நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி, கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்துடன் நுழைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹைலெவல் வீதியால் வந்து கொண்டிருந்த போராட்டக்காரர்களுக்கு மஹரகம நகரில் வைத்து, தனது தலைக்கவசத்தை கழற்றி வீசி குறித்த அதிகாரி ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஹோமாகம, மாகமனையில் உள்ள பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் அவர் கடமையாற்றியதாக பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் சீருடையுடன் செருப்பு அணிந்திருந்த குறித்த நபர் மீது இராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரிடம் நடத்திய சோதனையில் கூரிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார்.
அவரிடமிருந்து 10 அங்குல நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸ் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.