“பஸில் ராஜபக்சவுக்காக பதவியை துறக்க ஆளுந்தரப்பில் பலர் தயாராகவுள்ளனர்.” – பஷில் வருகையை உறுதி செய்கிறாரா கெஹலிய ரம்புக்வெல ?

“எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசைக் கவிழ்க்கவே முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.” என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசைக் கவிழ்க்க உள்ளேயும் வெளியேயும் சதி முயற்சிகள் நடக்கின்றன என்று ஊடகங்களின் செய்திகள் மூலம்தான் அறிந்துகொண்டேன். இது உண்மையா, பொய்யா என்று சதித் திட்டங்களைத் தீட்டுவோருக்குத்தான் தெரியும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு, நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறுவப்பட்ட அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கின்ற அரசு. எனவே, எந்தவொரு சதித் திட்டத்தாலும் இந்த அரசைக் கவிழ்க்கவே முடியாது. இந்தத் தகவலை அரசுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுவோருக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

எனினும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் – ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில்தான் செயற்படுகின்றார்கள். இதை மீறி கட்சிக்குள்ளே சதித்திட்டங்கள் நடக்கின்றன என்பதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன்.

அதேவேளை, அரசைக் கவிழ்க்க வெளியே நீண்ட நாட்களாகப் பல சதி முயற்சிகள் நடக்கின்றன. அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர்தான் பிரதான வகிபாகம் வகிக்கின்றனர். அரசையும், மக்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் குழப்பும் வகையில் ஊடகங்களுக்கு அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பஸில் ராஜபக்ச, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் என்ற தகவலைக்கூட எதிரணியினர்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். உண்மையில் இதுவரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினராகும் தீர்மானத்தை பஸில் ராஜபக்ச எடுக்கவில்லை. அவர் விரும்பினால் நாடாளுமன்றம் வர முடியும். அவருக்காக ஆளுந்தரப்பில் பலர் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்யத் தயாராகவுள்ளனர். பஸில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர். எனவே, அரசில் அவரின் வகிபாகம் முக்கியம்” – என்றார்.

 

பஷில்ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகிறார் என்ற தகவலே அண்மைய நாட்களில் அதிகம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அமைச்சர் ஹெஹலியரம்புக்வெல தெரிவித்திருக்கும் இந்தக்கருத்தானது அவருடைய நாடாளுமன்ற வருகைக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *