“அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழ் கைதிகள் சிலர் உள்ளனர். எனினும் எந்தவித வழக்கும் தொடராது நீண்டகாலமாக இவர்களுக்கு பிணை வழங்காது தடுத்து வைக்கவும் முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.
எனினும் இவர்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்க வேண்டும், இன்னமும் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் சபையில் கேள்வி எழுப்பியதற்கே நீதி அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதே நேரம் , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்திருந்தாக மாவை.சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது.