“ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் நாட்டுக்கு அவசியமானது , அந்த நிறைவேற்று அதிகாரம் இருந்தமையால் தான் யுத்தத்தை நாம் வெற்றி கொண்டோம்”- பிரதமர் மகிந்தராஜபக்ஸ

“ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல, அந்த நிறைவேற்று அதிகாரம் இருந்தமையால் தான் யுத்தத்தை நாம் வெற்றி கொண்டோம்”- என நிறைவேற்று தெிகார ஜனாதிபதிமுறைமையின் தேவை பற்றி பிரதமர் மகிந்தராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“இன்று எமக்கு மிகவும் முக்கியமான ஒரு தினமாகவே நாம் கருதுகிறோம். 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்பது மக்களின் ஆணைக்கு இணங்கவே கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், அது நீண்ட காலத் தீர்வாக என்றும் அமையாது. அதற்கிணங்க நாம் விரைவில் புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். நாம் 20ஐ, ஜனநாயக ரீதியாகத்தான் கொண்டுவந்துள்ளோம். எனினும், 19 ஆவது திருத்தச்சட்டமூலம் அவ்வாறு கொண்டுவரப்படவில்லை.

இதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நாடு பலவீனமடைந்தது. 19 இன் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. இதனால் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தார்கள் என ஆணைக்குழுவில் சாட்சி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், இதனை தடுத்துக்கொள்ள முடியாதமைக்கு 19 தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனையிட்டு நாம் வெட்கமடையவேண்டும். நாட்டின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருப்பது, நாட்டுக்கு நல்லது அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபரை மாற்றக்கூட அதிகாரம் இல்லை.

இவ்வாறான ஜனாதிபதி முறைமைதான் இன்றும் நாட்டில் இருக்கிறது. நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்திருந்தேன். அந்த அதிகாரம் இருந்த காரணத்தினால் தான் யுத்தத்தை எம்மால் நிறைவுக்குக் கொண்டுவர முடியுமாக இருந்தது.

புலனாய்வுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் பிரிவும் அந்தக் காலத்தில் சக்திமிக்கதாக இருந்தது. ஆனால், இந்த நிலைமைகள் எல்லாம் இன்று மாற்றமடைந்து விட்டது. 19 ஐ கொண்டுவந்தவர்களே இது நாட்டுக்கு சரியில்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பொதுத் தேர்தலின்போது, 20 தொடர்பாக நாம் மக்களிடம் ஆணைக் கோரியிருந்தோம். அதற்கிணங்கவே நாம் தற்போது அதனைக் கொண்டுவந்துள்ளோம். எனவே, இதனைப் புரிந்துக் கொண்டு எதிரணியினரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *