வன்னிப் பிரதேசங்களில் அனைத்து பயிர்வகைகளும் அழிவடைந்துள்ளதால் மரக் கன்றுகள் உட்பட பலதும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும், தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக வன்னியில் அதிகளவில் காணப்பட்ட வாழை மரங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதால் வாழைப்பழங்கள் யாவும் யாழ்ப்பாணத்திலிருந்தே வன்னிக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. நடுகைக்காக வாழைக் கன்றுகளும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதே போல, மரவள்ளித்தடிகள், தென்னங்கன்றுகள், பல வகையான மரக்கன்றுகள் போன்றவையும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
வன்னியில் கோழிகள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், திருகோணமலை கின்னியா பகுதிகளிலிருந்து இவை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.