ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா “ டான் பிரியசாத்”
2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 இல் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிற்கு மூளையாக செயற்பட்டவருக்கு டான் பிரியசாத் உதவியர் என்று கூறப்படுகிறது. இனவாதி டான் பிரியசாத் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா அதாவது உதவியாளராக செயற்பட்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் வரை ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கின்றார். பாதாள உலக நடவடிக்கைகளிலும் கலவரங்களிலும் ஈடுபடுபவர் டான் பிரியசாத் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
என்பிபி அரசாங்கம் மக்களுக்கு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை கடந்த ஈஸ்டர் தினமான ஏப்பிரல் 21 முன்னர் வெளிப்படுத்துவதாக வாக்களித்திருந்தது. ஆனால் இதுவரை என்பிபி அரசாங்கம் பகிரங்கமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் அவரது சாரதி போன்றோரின் கைதுடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி தொடர்பான ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்பிபி கிட்டத்தட்ட சூத்திரதாரியை நெருங்கி விட்டதாகவே என்பிபியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களிலிருந்து தெரியவருகின்றது.
இந்தப் பின்னணியிலேயே ராஜபக்ச குடும்பம் டான் பிரியசாத்தை இல்லாதொழித்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான முக்கிய சாட்சியத்தை அழித்து விட்டதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் நெருங்கி நட்புப் பாராட்டுபவர். இந்தமுறை உள்ளூராட்சித் தேர்தலில் மொட்டுக்கட்சியின் வேட்பாளராகவும் உள்ளார்.
நவ சிங்ஹலே என்ற அமைப்பின் தலைவராக செயற்படும் டான் பிரியசாத் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டியவராவர். தனது முகநூல் கணக்குகளூடாக இஸ்லாமிய போவியா கருத்துக்களை பரப்பி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
டான் பிரியசாத் கொலை தொடர்பில் ஆரம்பத்திலிருந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகியிருந்தன. டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்து விட்டார் என்றும் இல்லை அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக நேற்றைய தினம் பொலிஸார் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். டான் பிரியசாத்தின் கொலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன.
பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையின்படி ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவின் ஒப்பந்த துப்பாக்கிதாரிகளால் தான் டான் பிரியசாத் சுடப்பட்டுள்ளார். இதுவரை டான் பிரியசாத்தின் தங்குமிடம் பற்றிய தகவல்களை வழங்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சமீப காலங்களில் சில விடயங்களை மறைப்பதற்காகவே முற்கூட்டியே இக்கொலைகள் இடம்பெறுவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.