கஜேந்திரகுமாரின் திடீர் கூட்டணி – புனிதர்கள் எல்லாம் மாறிவிட்டார்கள் என்கிறார் சுமந்திரன் !
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொ.ஐங்கரநேசன், தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், என்.ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி மற்றும் கே.வி.தவராசா தலைமையிலான ஜனநாயக தமிழரசு கூட்டணி ஆகியன தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது சகலரும் அறிந்ததே.
இக்கூட்டணி தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒருதலைப் பட்சமாக எந்த விதமான நியாயமும் இல்லாமல் கொள்கையளவிலே இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற பேச்சுவார்த்தையை தமிழரசுக் கட்சி முறித்ததாக ஆதங்கம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆசனம், பதவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாகப் பயணிக்கக் கூடிய எம்மைப் பலப்படுத்துவதுதான் காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இப்புதிய கூட்டணி தொடர்பில் குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன், “இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.