சிங்களவர்களால் எனக்கு ஆபத்து இல்லை. முஸ்லீம்களால் தான் ஆபத்து’ – எம்.பி அர்ச்சுனா !
அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் தனக்கு சிங்களவர்களால் ஆபத்து இல்லை சிறுபான்மை இனத்தால் தான் பாதிப்பு என்று மறைமுகமாக முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் பேசிய அவர், சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடர முடியும். ஏனெனில் 77 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் பேச விடாது தடுத்துள்ளார். என்.பி.பி அரசாங்கத்திற்கு நான் உயிரோடு இருப்பதில் பிரச்சினை இருக்கின்றது. குறிப்பாக சிங்கள மக்களினாலோ அல்லது வேறு நபர்களாலோ எனக்கு பிரச்சினை இல்லை. சிறுபான்மை இனத்தவர்களாலேயே அதிக பிரச்சினை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இனியாவது அர்ச்சுனா தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என எதிர்பார்க்கிறோம் , நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.