விகாரையை இடிக்க வாரீர் ! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக மல்லாக நீதிமன்றம் அழைப்பாணை
“ பொதுமக்களை திரட்டி பலாலி திஸ்ஸ மகாராம பௌத்த விகாரையினை சேதப்படுத்த சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டமை” தொடர்பில் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் மல்லாகம் நீதிமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும்படி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பெப்ரவரி 11 ஆம் திகதி அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நீதிமன்ற அழைப்பாணை கிடைத்தமையை உறுதிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார். இவ் விவகாரம் தொடர்பில் கூறிய அவர், தான் ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி காணிகளை விடுவிக்கும்படியே கூறியதாகவும், விகாரையை இடிக்க வாரீர் என சமூக வலைத்தளங்களூடாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.
இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் எனவும், இவ் விடயம் தெரிந்ததும் தான் தனது உத்தியோக பூர்வ சமூக ஊடகங்கள் மூலமாக இதனை மறுத்ததாகவும் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தையிட்டு விகாரை உடைப்பை தொடக்கி வைத்தில் இருந்து அவருடன் சமீப காலத்தில் பயணிக்கும் எம்பிமார்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் என எல்லோரும் விகாரை உடைப்பை வழிமொழிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தையிட்டியில் தனியார் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பொலிஸ் முறைப்பாடோ அல்லது நீதிமன்றில் சட்ட நடவடிக்கைகளோ கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பொலிஸார் தையிட்டி விகாரை தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.