கசிப்பு உற்பத்தியை தடுக்க பார் வேண்டுமாம்: கிளி பார் அனுமதிகளை ஆராய விஷேடகுழு !

கசிப்பு உற்பத்தியை தடுக்க பார் வேண்டுமாம்: கிளி பார் அனுமதிகளை ஆராய விஷேடகுழு !

கசிப்பைத் தடுக்க பார்கள் திறக்கப்பட வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு பார் வேண்டும், பார்களினால் மாவட்டத்துக்கு வருமானம் வரும் என்றெல்லாம் முன்னைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யாழ் மாவட்ட பா உ க இளங்குமரன் தற்போது பார்களும் கூடிவிட்டது கசப்பு காச்சுவதும் கூடிவிட்டது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். டிசம்பர் 26 இல் கிளிநொச்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சண்முகநாதன் ஶ்ரீ பவானந்தராஜா, இராமநாதன் அர்ச்சுனா, சிவஞானம் சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டனர்.

அப்போது கிளிநொச்சியில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பார் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் கிளிநொச்சியின் நகர்ப்புறத்தை சூழவுள்ள பார்களின் பெருக்கத்தைப்பற்றியும் விவாதிக்கப்பட்டது. இவ் விவாதங்களின் போது பார் அனுமதிப்பத்திரத்திற்கு யார் சிபார்சு வழங்கியது என்பதும் மீண்டும் பேசு பொருளானது. சம்பந்தப்பட்ட சிபாரிசு கொடுத்தவர்களின் விபரங்களை நாங்கள் பாராளுமன்றத்தில் கேட்டு வாங்குவோம் என இராமநாதன் அர்ச்சுனா கூற அதனை ஆமோதித்த சிவஞானம் சிறிதரன், அப்போது எல்லாப் பிரச்சினையும் முடியும் என்றார்.

கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த ரணிலால் வழங்கப்பட்டது என்று கருதப்படுகிற பார் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக இரத்து செய்து தீர்மானம் போடுவோம் என சிறிதரன் பரிந்துரைத்தார். அதற்கு அர்ச்சுனாவும் ஒத்து ஊதினார். இவ்விடயத்தில் நிதானத்தை கையாண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபரினுடைய ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டார். மேலும் பார் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் போது பணத்தை செலவு செய்து பார்களை திறந்துள்ள பார் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்புக்கள் பற்றி குறிப்பிட்டடார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களையும் கேட்டுக் கொண்டார். அரசாங்க தரப்பில் பார் அனுமதிகள் வழங்கப்படும் போது மதுவரி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதாவது பாடசாலைகள், வழிபாட்டுத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் புழங்கும் இடங்கள் போன்ற மேலும் பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. பொதுமக்கள் சார்பிலும் பார் விடயம் மட்டுமல்ல கள்ளச்சாராயம் என்றழைக்கப்படும் அதிகரித்த கசிப்பு வியாபாரம் தொடர்பிலும் விசனம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கருத்து தெரிவித்த என்பிபி பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் “இப்போது போதைப்பொருள் மற்றும் கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதாக முறைபாடுகள் வருவதாக கூறிய அவர், மேலும் கூறுகையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இதேமாதிரியான கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியை தடுக்க பார்கள் தேவை என கூறப்பட்டதாகவும் இப்போது பார்களும் அதிகரித்திருக்கின்றது கசிப்பு உற்பத்தியும் அதிகரித்திருப்பதாக சர்ச்சையை கிளப்பினார். இதனை உடனடியாக மறுத்த சிறிதரன் , அப்படியாக ஒரு விடயம் பேசப்பட்டிருந்தால் அறிக்கைகளில் வந்திருக்கும் எனவே கடந்த கால கூட்டங்களின் அறிக்கையை பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். இறுதியாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் பார் விடயம் தொடர்பில் ஆராய ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *