ஜனாதிபதியின் இந்திய விஜயமும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமும்!
நேற்று பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின் போது எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட “எட்கா ஒப்பந்தம்” தொடக்கம் அனைத்திற்கும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனுமதி வழங்கியதா? அல்லது எட்கா (ETCA – Economic and Technology Cooperation Agreement) ஒப்பந்தத்தை செய்ய ரணில் விக்கிரம சிங்கவிற்கு மக்கள் ஆணை இல்லை என்று கூறி அவ்வொப்பந்தத்தை எதிர்த்து வந்த என்பிபி தற்போது எதிர்ப்பதை நிறுத்தி விட்டதா? எனக் கேட்டார். எட்கா ஒப்பந்தம் எனப்படுவது இலங்கை இந்தியாவிற்கிடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகும்.
எட்கா ஒப்பந்தம் பற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை கடும்போக்குடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். எட்கா ஒப்பந்தத்தின் படி இலங்கை – இந்தியா இரு நாடுகளுக்குமிடையே பொருட்கள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் வர்த்தகம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குதல் பற்றியதாகும். எட்கா ஒப்பந்தம் வருவதை எதிர்த்தவர்கள், கைச்சாத்தானால் இலங்கை இந்தியாவின் கொலனியாகிவிடும் என சிங்கள மக்கள் மத்தியில் பீதியையும் கிளப்பியிருந்தனர்.
இந்தநிலமையிலேயே அநுராவின் இந்தியப் பயணம் தொடர்பில் இக்கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுடனான வலுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க அநுரகுமார திஸ்ஸநாயக்காவிற்கு மக்கள் ஆணை உள்ளது. அதன்படி மேலதிகமாக உற்பத்தி செய்யும் வலுசக்தியை பிம்ஸ்டெக் வலயத்திற்குள் ஏற்றுமதி செய்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்போம் என்றார். அத்துடன் நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்த ஒப்பந்தத்திலும் நாங்கள் இந்தியாவுடன் கையொப்பம் இடவில்லை என்றும் அறிவுள்ளவர்கள் அதனைப் படித்துப் பாருங்கள் என்றும் காட்டமாக பதிலளித்தார்.