“16 வயதிலேயே போராட்டத்திற்கு போனவன் நான் – எதற்கும் மிரண்டு போக மாட்டேன் ” – பிள்ளையான்
மாகாண சபை முறை நீக்கம் – ஜே.வி.பி ரில்வின் சில்வாவை வைத்து இனவாத தீயை வளர்க்கும் தமிழ்தேசியம்
இன்றைய செய்திகள்: 02.12.2024
1. “நான் எந்த நாட்டுக்கும் தப்பித்துப் போகப் போவதில்லை! ஈஸ்டர் குண்டுதாரிகளை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்!” – பிள்ளையான்: “அசாத் மௌலான தனக்கும் குடும்பத்துக்கும் விஸா எடுப்பதற்கு விட்ட ரீல்களை வைத்துக் கொண்டு படங்காட்ட வேண்டாம். ஈஸ்டர் குண்டுதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள்” என்று தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று தேசம் ரியூப்பில் வெளியாகியுள்ள இக்காணொலியில், “இந்த ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்ற மௌலவியை சிறையிலிருந்த 500 வரையானவர்களில் ஒருவராக கண்டிருக்கிறேன். பேசியிருக்கிறேன். அவர்களுடைய அதிதீவிரவாதத்தை அவர்களிடமே கண்டித்து இருக்கிறேன்” என்றும் பிள்ளையான் தெரிவித்தார்.
“அசாத் மௌலானா விசா எடுப்பதற்காகவும் பணத்திற்காகவும் சுவிஸில் உள்ள யாழ்ப்பாணத்துப் புலிகளுக்காகப் புனைந்த கதை தான் அது. ரிஎம்விபியினது அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சுவிஸில் உள்ள யாழ்பாணத்து புலிகள் தமிழ் தேசியம் தமிழரசுக் கட்சி செய்த சதி தான் இது” எனவும் பிள்ளையான் குற்றம்சாட்டினார். “யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றவர்களுக்கு ஒப்பாக நான் முப்பதினாயிரம் வரை வாக்குகளைப் பெற்றவன். என்னிலும் பார்க்க பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு, செல்வம் அடைக்கலநாதனுக்கு எல்லாம் குறைந்த வாக்குகளே கிடைத்தது. இந்த நெருக்கடியிலும் மட்டக்களப்பு மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள்” என்றும் பிள்ளையான் குறிப்பிட்டார்.
“ரிஎம்விபி யும் பிள்ளையானும் இந்த வீழ்ச்சியில் இருந்து நிச்சயம் மீள எழுவோம் எனத் தெரிவித்த பிள்ளையான் 16 வயதிலேயே போராடப் போய் எத்தனையோ அனுபவித்துவிட்டோம் இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிடமாட்டோம். ஜனாதிபதி அனுரா தேர்தலில் என்னைத் தோற்கடிக்க என்னை விசாரணைக்கு அழைத்தார்;. அவர் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்” என்றும் அந்த நீண்ட நேர்காணலில் பிள்ளையான் தெரிவித்தார்.
2. தமிழ், மலையக, முஸ்லீம் தேசியவாதம் அதன் இறுதிக்கட்டத்தில்: தமிழ், முஸ்லீம், மலையக சிறுபான்மையினத் தேசியக் கட்சிகளுக்கு இதுவொரு இருப்புக்கான ஆபத்து என்று தெரிவிக்கின்றார் சட்டத்தரணியும் ஆய்வாளருமான நிஸ்தார் மொமகட். இவர்கள் இனி இனவாதம் பேசி இனமுரண்பாடுகளை தீவிரப்படுத்தவே முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மையினங்களுக்கு தேசிய மக்கள் சக்தியைவிட மாற்றுத் தெரிவு இல்லையெனத் தெரிவித்த நிஸ்தார் மொகமட், தேசிய மக்கள் சக்தி இதுவரை நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றது என்றும் அவர்களுக்கு இந்த 75 ஆண்டுகால அரசியற் பொறிமுறையை மாற்றி அமைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்த அவகாசம் அடுத்த ஜனாதிபதி,பாராளுமன்றத் தேர்தல் வரை வழங்கப்படுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்தார்.
3. 13வது திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்களுக்கு எவ்வித பயனும் இல்லை! ஜனாதிபதி முறைமை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்: “13வது திருத்தச் சட்டம் இந்தியா தனது நலன்களைப் பேறுவதற்காக உருவாக்கிய விடயம் அதில் முஸ்லீம்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்கிறார் சட்டத்தரணியும் மனித உரிமைவாதியும் அரசியல் ஆய்வாளருமான சையட் பஷீர். “கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஒருவர் முதலமைச்சராக வந்தார். ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினை காணிப்பிரச்சினை.
4. தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் “முஸ்லீம் ஒருவர் அமைச்சராக இல்லாததை இனவாதமாகப் பார்க்க முடியாது ஏனெனில், முஸ்லீம்கள் கடந்த ஜந்து ஆண்டுகளில் தான் தேசிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள். அவர்கள் அந்தக் கட்சியில் இருந்து படிப்படியாகவே தலைமைத்துவத்திற்கு வரமுடியும்” என்றும் சுட்டிக்காட்டினார் சையட் பசீர்.
இராமலிங்கம் சந்திரசேகர் ஜேவிபி இன் மிக நீண்டகால உறுப்பினர். போராடியவர். அக்கட்சிகாக சிறை சென்றவர். அருண் ஹேமச்சந்திராவும் கட்சியில் நீண்டகால உறுப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டவர். சரோஜினி போல்ராஜ்ம் அவ்வாறே எனக் குறிப்பிட்ட அவர், அடுத்தடுத்த பாராளுமன்றங்களில் தேசிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லீம்கள் தங்களை வளர்த்துக்கொள்வார்கள் அடுத்தடுத்த பதவி நிலைகளுக்குச் செல்வார்கள் என்றும் சையத் பஷீர் தெரிவித்தார்.
“ஆனால் ஜனாதிபதி முறைமை இயலுமான வரை ஒழிக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயகம் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதையும் சையத் பஷீர் அந்நேர்காணலில் சுட்டிக்காட்டினார். அம்பாறை மாவடிப்பாலத்தில் நடந்தது மிகப்பெரும் இழப்பு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சையட் பஷீர் மதராசா பள்ளி ஏன் மாணவர்களை உழவு இயந்திரத்தில் அனுப்பியது, பாதுகாப்புப் படையினர் ஏன் மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரத்தை அப்பாதையினூடாக அனுமதித்தனர் போன்ற கேள்விகளுக்கு முறையான நீதிமன்ற விசாரணையூடாகவே விடைகிடைக்கும் என்றும் அதுவரை நாங்கள் யாரையும் குற்றம்சாட்டுவது பொருத்தமில்லை எனவும் தெரிவித்தார் சையத் பஷீர். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாதுகாப்பு படையினர் மீது மட்டும் உடனடியாகக் குற்றம்சாட்டுவது அவரது தேர்தல் தோல்விக்கு பழிவாங்கும் அரசியலே எனவும் சையத் பஷீர் குற்றம்சாட்டினார்.
5. இரத்தம் தானம்! அது விற்பனைக்கு இல்லை! மீறுவது சட்டப்படி குற்றம்!: இரத்தத்திற்கு பணம் வசூலிக்கும் தனியார் வைத்திய சாலைகளின் மோசடி அம்பலம். தனியார் மருத்துவ மனைகளில் இரத்தத்திற்கு மக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்கிறார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி . நாட்டின் எப்பகுதியிலும் இரத்தத்தை விற்பனை செய்வோ கொள்முதல் செய்யவோ முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரத்த வங்கியில் தொண்டர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இலவசமாக தனியார் வைத்தியசாலை உட்பட அனைத்து நோயாளிகளுக்கும் ஏற்றப்படுகிறது என்கிறார் வைத்தியர் சத்தியமூர்த்தி.
“ஊசி அர்ச்சுனா பொய் சொல்லி பாராளுமன்ற பதவியைப் பெற்றுள்ளார்”: ஊசி அர்ச்சுனா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும், மருத்துவதுறையில் காணப்பட்ட மோசடிகளை, ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் ஊசி அர்ச்சுனா என்றால் மிகையல்ல. அந்த அடிப்படையில் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பிய பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களின் கோபம் இருந்தது என்ற ஐபிசியின் கேள்விக்குப் பதிலளித்த வைத்தியர் சத்தியமூர்த்தி “ஊசி அர்ச்சுனா பொய் சொல்லி பாராளுமன்ற பதவியைப் பெற்றுள்ளார்” எனக் குற்றம்சாட்டினார்.
அதீத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்: அந்நேர்காணலில், பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் வைத்தியர் த சத்தியமூர்த்தி நிராகரித்தார். மருத்துவத்துறையில் தவறுகள் இடம்பெறும் போது அது தொடர்பாக முறையாக விசாரித்து தண்டணைகள் வழங்கப்படவில்லை, நோயாளிகளை வைத்திய நிபுணர்கள் பார்வையிடுவதற்குப் பதிலாக வைத்திய மாணவர்கள் பரிசோதிப்பதிக்கின்றார்கள், மருத்துவ மாணவர்கள் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர் என்றும், வைத்தியர்கள் மீது அதீத குற்றச்சாட்டுக்கள் எழும் போது அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார் வைத்தியர் த சத்தியமூர்த்தி.
6. பாலஸ்தீன மக்களின் துயரங்கள் சகித்துக்கொள்ள முடியாதவை ஜனாதிபதி அனுரா: பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்குஆசியாவிலும் ஒருவருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரும் அழிவுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை சகித்துக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர், பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உடனடி யுத்த நிறுத்தத்திற்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கான ஆதரவிலிருந்து இலங்கை பின்வாங்ககூடாது என்பதை பாலஸ்தீனியர்களி;ற்கான ஐநா தினம் வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் சர்வதேச சட்டம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அமைதியான சமத்துவ தீர்வை காண்பதை சர்வதேச சமூகம் கைவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி ஆபத்தான விதத்தில் தீவிரமடைந்துள்ளமையும், சர்வதேச அளவில் அதன் தாக்கமும்,பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக ஏழு தசாப்தங்களாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மேலும் அவசியமானவையாக மாற்றியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
7. மாகாணசபையை நீக்கி புதிய அரசியலமைப்பு– ஜேவிபி செயலாளர் ரில்வின் சில்வா: மாகாண சபை முறையை நீக்கப்போவதாக ரில்வின் சில்வா அறிவித்ததாக மேற்கோள் காட்டி குறும்தேசியவாத ஊடகங்கள் மீள ஓர் இனவாத தீயை வளர்க்க ஆரம்பித்துள்ளன. இது தொடர்பில் ரில்வின் சில்வா குறிப்பிட்டதாவது, “இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்கவில்லை. மாறாக இலங்கையில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையிலான நிலைமையே காணப்படுகிறது. எனவே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை தோற்றவிக்காத வகையிலான அரசியல் ரீதியிலான தீர்வுத்திட்டத்தை எமது அரசாங்கம் முன்வைக்கும்.”
“பயனற்ற மாகாண சபை முறைமைக்கு பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையை பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்பட உள்ளதாகவும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகுகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8. இந்திய உயர்ஸ்தானிகர் – கடற்தொழில் அமைச்சர் சந்திப்பு: கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா எதிர்வரும் புதன்கிழமை டிசம்பர் 04ம் திகதி கொழும்பில் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது. விசேடமாக, இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன், ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்கு கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கிறார். இதேநேரம், கடற்றொழில் மற்றும் கடல்சார் ஆய்வுகள் குறித்தும் இந்தியாவுடன் கூட்டுச் செயற்பாடுகளில் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தமிழ்தேசியம் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவிடம் பேசியதும் இல்லை அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சமும் முன்னெடுத்தது இல்லை. இந்தியா தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் – இலங்கை தமிழருக்கு இந்தியா தான் உற்ற நண்பன் என கூறி இந்தியாவின் காலில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்தேசியம் பேசும் தலைவர்கள் எவருமே வடக்கு மீனவர்கள் பிரச்சினை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.
9. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூவர் கைது: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மூன்று கைதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பகிர்ந்தமைக்காக கைதாகியுள்ளார். அதேவேளை தென்னிலங்கையை சேர்ந்த இருவரும் கைதாகியுள்ளது தற்போது பாரிய பேசுபொருளாகியுள்ளது. தமிழர்கள் மேற்கொண்ட நினைவேந்தல் நிகழ்வுகளை புலிகளை மீள உருவாக்கும் செயல் – பயங்கரவாதத்தை மீள உருவாக்குகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டமைக்காக தென்னிலங்கையை சேர்ந்த இருவர் கைதாகியுள்ளனர். பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் தவறான வகையில் கருத்து பரப்பிய அடிப்படையில் தான் இந்த கைதுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
10. பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயணதடையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை கொண்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 2009 இல் வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த இந்த நபர் பிரிட்டனில் பயங்கரவாத அமைப்பிற்காக நிதி சேகரித்தார்,அவற்றை கொழும்பு வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2009 இல் சந்தேகநபரின் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் பயண தடையை பெற்றிருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இவர் சனிக்கிழமை பிரிட்டனில் இருந்து கொழும்பு விமானநிலையம் வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
11. பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கு தடகொல – சட்டத்தின் முன் யாருக்கும் விதிவிலக்கு அல்ல
போக்குவரத்து விதிமுறைகளை சாதாரண மக்கள் மீறும் போது ஓர் சட்டமும், பாராளுமன்ற எம்.பிக்கள் அல்லது அமைச்சர்கள் மீறும்போது ஓர் சட்டமும் என்ற வழக்காறு நீண்ட காலமாகவே இலங்கையில் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக போக்குவரத்து விதிமுறை சார்ந்த குற்றங்களில் ஈடுபடும் போது எந்த ஒரு தண்டனையும் இன்றி சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ளும் போக்கு காணப்பட்டது. இருந்தாலும் தேர்தல் பிரச்சார காலம் முதல் நாட்டின் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது. அதனை மீள நினைவுபடுத்தும் படியான ஓர் சமூக வலைத்தள பதிவை பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார். அதாவது தான் போக்குவரத்து விதிமுறையை மீறியதாகவும் அதற்காக போக்குவரத்து பொலிசாரினால் அறவிடப்படும் தண்டனைப் பணமும் அதற்கான தடகொலவும் தான் செலுத்தியதக ஓர் பதிவை அவர் பதிவேற்றியுள்ளார்.
குறித்த பதிவில் அருண் ஹேமச்சந்திரா “Let the change start from us. Let no one be above the law despite of their position” என குறிப்பிடப்பட்டுள்ளார். அதாவது” மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும். பதவியில் இருந்தாலும் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டாம்” என அவர் குறித்த பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.