அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகவும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் – மக்கள் போராட்ட முன்னணி விசனம்

அனுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகவும் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் – மக்கள் போராட்ட முன்னணி விசனம்

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறிய அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மிகக்குறுகிய கால இடைவெளியில் இரண்டாவது தடவையாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மக்கள் போராட்ட முன்னணி ஓர் ஊடக அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

குறித்த ஊடக அறிக்கையில் “பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாக ஆறு மாத காலத்திற்குள் நீக்கப்படும் எனத் தெரிவித்தே நிறைவேற்றப்பட்டது என்பதோடு இந்த சட்டத்தின் அமுலாக்கம் பாரிய இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களுக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, இந்தச் சட்டம் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்ததையும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்ததையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்துவதன் ஊடாக அதை சமூகத்தில் சாதாரண விடயமாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாறாக தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்சட்டத்தை விரைவில் ரத்துச் செய்ய வேண்டும். மேலும், அதற்குப் பதிலாக வேறொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்பது கொள்கையாக இருக்க வேண்டும். இனவாதத்தை முறியடித்து அதற்கு அடிப்படையாக இருக்கும் அரச அடக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை எமது சமூகத்திடம் வலியுறுத்துகிறோம்.” என குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் தொடர்பில் தேர்தல் காலத்திற்கு முன்பிருந்தே அனுர தரப்பு பேசி வந்த நிலையில் தற்போது பின்னடிப்பது மக்கள் மத்தியில் விசனமான ஓர் நிலையை தோற்றுவிக்க ஆரம்பித்துள்ளதுடன் புதிய பாராளுமன்ற அமர்வுகள் கூட ஆரம்பித்துள்ள நிலையில் இது தொடர்பான மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை குறித்த பயங்கரவாத தடைச் சட்ட நீக்கம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ்தேசிய தரப்பு எதிர்த்து ஓர் ஊடக அறிக்கையை கூட வெளியிடவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியினரும் – தமிழ் தலைமைகளும் இந்தியாவின் காலடியில் வீழ்ந்து கிடப்பதுடன் – உட்கட்சி பூசல்களிலும் ஈடுபட்டு வருகிறது. மாவீரர் தினம் என மக்களை உசுப்பேற்றி அவர்களை மீள மீள இனவாத சகதியில் தள்ளும் வேலையை தற்போதைய தமிழ்தேசிய அரசியல் தலைமைகள் கச்சிதமாக செய்து வருவதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

மக்கள் போராட்ட முன்னணியின் ஊடக அறிக்கை முழுமையான வடிவம் !

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை’ பயன்படுத்தி நபர்களை கைது செய்வதை நிறுத்தி, நாடாளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அடக்குமுறைச் சட்டத்தை நீக்கு!

 

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில், ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

ஆனால் அந்த நபர்கள் மீது பொதுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பது இது இரண்டாவது தடவையாகும். முன்னதாக, அறுகம் குடா சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

இவ்வாறு நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையிலும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் முன்வைத்தது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி 1783/2024 என்ற இலக்கத்துடனான பொலிஸாரின் ஊடக அறிக்கையில், ‘புலிகளின் மாவீரர் தினப் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேகநபர்கள் கைது’ என்ற தலைப்பில், குறித்த கைது தொடர்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

 

நாட்டில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூல் சமூக வலைத்தளக் கணக்கின் ஊடாக வெளியிட்டமை தொடர்பிலும் கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களைக் கொண்டாடும் போது எடுக்கப்பட்ட கானொளியை இந்த வருடம் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டதாகக் கூறி முகநூல் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பிலும் அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக ஃபேஸ்புக் ஊடாக இணையத்தில் பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் காணொளிகளை பரப்பியதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 27 மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 120 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக டிசம்பர் 02 ஆம் திகதிய தினமின பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாட்டுச் சட்டமாக ஆறு மாத காலத்திற்குள் நீக்கப்படும் எனத் தெரிவித்தே நிறைவேற்றப்பட்டது என்பதோடு இந்த சட்டத்தின் அமுலாக்கம் பாரிய இனப்படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களுக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக, இந்தச் சட்டம் போராட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட காலத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்ததையும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை தொடர்ந்து எதிர்த்து வந்ததையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியும் அதே நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வந்ததோடு, இந்தச் சட்டத்தை ரத்துச் செய்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர அப்போதைய அரசாங்கம் முயற்சித்த போதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டது.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது, சிலர் கூறுவது போல, இந்தச் சட்டம் அரசாங்கத்தால் நல்லெண்ணத்துடன் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்ற எளிய வாதமாகச் சுருக்கப்படவில்லை. மேலும் வரலாற்று ரீதியாக இச் சட்டம் தமிழ், முஸ்லிம் மற்றும் முற்போக்கு மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சூழலில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. மேலும் இச்சட்டத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் குற்றவியல் சட்டம், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் போன்ற ஏற்கனவே உள்ள கணிசமான சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நீதித்துறை மேற்பார்வையின்றி நிறைவேற்று அதிகாரத்தின் எதேச்சதிகார விருப்பப்படி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

 

மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட நபர்களின் வரலாற்று ரீதியான இனவாத தலையீடுகளையும் இந்த சம்பவங்கள் தொடர்பான செயற்பாடுகளையும் நாம் அரசியல் ரீதியாக தெளிவாக நிராகரிக்கின்றோம் என்பதை இங்கு மேலும் வலியுறுத்துகிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இனவாதத்தைத் தூண்டும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை படிப்படியாக அமுல்படுத்துவதன் ஊடாக அதை சமூகத்தில் சாதாரண விடயமாக மாற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாறாக தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இச்சட்டத்தை விரைவில் ரத்துச் செய்ய வேண்டும். மேலும், அதற்குப் பதிலாக வேறொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என்பது கொள்கையாக இருக்க வேண்டும். இனவாதத்தை முறியடித்து அதற்கு அடிப்படையாக இருக்கும் அரச அடக்குமுறையையும் தோற்கடிக்க வேண்டிய இரட்டைப் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்பதை எமது சமூகத்திடம் வலியுறுத்துகிறோம்.

 

தேசிய செயற்குழு

மக்கள் போராட்ட முன்னணி

02 டிசம்பர் 2024

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *