என்.பி.பியின் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க தயார் – சுமந்திரன் வழியில் சாணக்கியன்!
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டுக்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். இது நாட்டுக்கு மிகவும் நல்லது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருகிறார். அது சாதகமான அறிகுறி. ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
காலாதி காலமாக எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் செய்துவந்ததுள்ளதே கடந்த கால வரலாறு.இதனால் எதையுமே தமிழர் தரப்பால் சாதிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி குறித்தான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தமிழ்தேசிய அரசியல் பரப்பில் முதன்முதலில் பகிரங்கமாக முன்வைத்தவர் எம்.ஏ.சுமந்திரன் தான். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது யாழ்ப்பாணத்தில் வைத்து அனுர குமார இனவாதத்தை தூண்டினார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினர் கருத்துக்களை முன்வைத்த போது அதனை மறுத்து உடனடியாகவே அனுர குமார இனவாத கருத்துக்களை வெளியிடவில்லை என சுமந்திரன் கூறியது நல்ல ஒரு நகர்வு என பல அரசியல் நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான இணக்கமான சூழல் ஒன்று இருப்பதாகவும் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார். இப்படியான சூழலில் தமிழரசுக்கட்சியின் நகர்வுகளில் சுமந்திரனுக்கு மிக்க நெருக்கமான சாணக்கியனும் அதே போன்றதொரு நிலைப்பாட்டை பின்பற்றுவதானது ஆரோக்கியமான சூழலை நோக்கி தமிழ்தேசிய அரசியல் நகர்வதை காட்டுவதாக அமைந்துள்ளது.