அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் போரை நிறுத்த சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. வேண்டுகோள்

tna_3mps.jpgஸ்ரீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புப் போரினால் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியில் விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தி உடனடிப் பேச்சு வார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேச  சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் புலம்பெயர் மக்கள் இக் கோரிக்கைகளை முன்வைத்து தத்த மது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாக யாரும் கருதினால் விடுதலைப்புலிகளின் போரியல் தந்திரோபாயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பர். புலிகள் தற்போது தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ள மக்கள் வதந்திகளை நம்பாமல் தமக்கான பணிகளைச் செய்யவேண்டும். அதுவே தற்போழுது வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் – என்றும் ஜெயானந்த மூர்த்தி எம்.பி தெரிவித்தார்.

கிழக்கில் பெரும்பான்மையினக் குடியேற்றம் தொடர இனியொரு போதும் இடமளிக்க முடியாது

batti_.jpgகிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழ் ,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் எந்த விதமான குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தில் சமகாலத்தில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகப்போவதில்லை. தற்போது புதிய குடியேற்றத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசாங்கத்திற்கு உண்டு.

இன்றைய எமது இளைஞர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைமையை ஏற்கவுள்ளனர். எனவே இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்த்து வைக்கவேண்டும். இன்று இளைஞர்கள் அதிகம் முகம் கொடுப்பது வேலை இல்லாப் பிரச்சினையாகும். எமது நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாமலும் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையில் வேறு பிரதேசங்களுக்கு செல்வதற்கும் பல தடைகள் காணப்பட்டன. அதேவேளை பல இளைஞர்கள் எமது நாட்டில் தொழில் கிடைக்காததினாலும் குடும்ப சுமையை தாங்க வேண்டி இருந்ததாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி. கண்டனக் கூட்டம்

jvp.jpgஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர் படுகொலை போன்றவை உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் கண்டனக் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது.  ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும், பிரமுகர்களும் உரையாற்றவிருப்பதாகவும் கூட்டம் மாலை 4 மணிக்கு நுகேகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகரசபை மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரச மீதான தாக்குதல் மூவர் பொலிஸில் சரண்

sirasa-02.jpgதெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூவர் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையிலேயே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் நேற்று இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்

புலிகளின் 31 சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

truck.jpgவன்னிப் போர் முனைத் தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் 31 சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன.

இந்த சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்களும் அடங்கியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை வவுனியா மாவட்ட நீதிவான் எம். ஜி. அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார். சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மேலும் 28 புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா இன்று

logo1.gifதென் கிழக்கு பல்லைக் கழகத்தின் 5 வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ஏ. ஜி. ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு விழாவில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சூழல் கற்கை நெறியில் முதுநிலை பட்டத்தை நிறைவு செய்து கொண்ட 5 பட்டதாரிகளுடன் 75 விஞ்ஞான பட்டதாரிகளும், முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் 70 பட்டாரிகளும், கலை கலாசார பீடத்தில் 138 பட்டதாரிகளும் அரபு மொழி பீடத்தில் 2 பட்டதாரிகளுமாக மொத்தம் 285 பேர் பட்டமளித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.

அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் – இராணுவத் தளபதி

sarath-finseka.jpgசித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும். கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது. 2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம் எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார். இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு போர் நிலவரத்தால் மாகாணசபைத் தேர்தல் களையிழப்பு. மக்கள் அக்கறைப்படவில்லை; பவ்ரல்

paffre.jpgமத்திய மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் மக்களுக்கு அக்கறை இல்லையெனத் தெரிவித்த பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ வடபோர்முனை நிலவரத்தால் தேர்தல் களையிழந்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சமூக, சமய மத்திய நிலையத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் 937 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 50 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதேவேளை, மத்திய மாகாணசபை உறுப்பினர்களாக 56 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு நிலையான கண்காணிப்பாளர் வீதம் 2,600 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், தேர்தல் தொகுதி ஒன்றிற்கு இரு வாகனங்கள் வீதம் 40 தேர்தல் தொகுதிகளிலும் 80 நடமாடும் கண்காணிப்பு வாகனங்களில் 400 கண்காணிப்பாளர்கள் தேர்தல் தினத்தன்று தமது சேவையை வழங்கவுள்ளனர்.

அத்துடன், இத்தேர்தல் கண்காணிப்பிலும் சர்வோதயம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் பலவும் எம்முடன் இணைந்து பணியாற்றவுள்ளனர். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தும் பொருட்டு ஒவ்வொரு அரசியல் கட்சியுடனும் நாம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு கட்டமாக ஐ.தே.க.வுடன் நடைபெற்ற பேச்சுகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய கட்சிகளுடனான பேச்சுகளும் நடத்தப்படவுள்ளது. இதேபோல் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்துடனும் நாம் பேச்சுகளில் ஈடுபடவுள்ளோம்.

தேர்தல் கண்காணிப்பு குறித்த நடைமுறைகளை விளக்குவதற்காக பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுத் தாக்கல் செய்தது முதல் பாரதூரமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இதுவரை இடம்பெறவில்லை. ஆனாலும், இரு மாகாணங்களிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. எனினும், அவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வேட்பு மனுத்தாக்கல் செய்தது முதல் இதுவரை தேர்தல் உஷார் நிலை அடைந்ததை அவதானிக்க முடியவில்லை. வடக்கில் நடைபெறும் படை நகர்வுகள் மீது சகலரும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றமையே இவ்வாறான உற்சாகமற்ற தன்மைக்கு முக்கிய காரணமாகும். இதேவேளை, இந்தத் தேர்தல் அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், மக்களுக்கு இத்தேர்தலில் அக்கறை இல்லை. மக்கள் தேர்தலை நடத்துமாறு கேட்கவில்லை அரசியல்வாதிகளிற்காகவே இத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

மக்களினதும் அரசியல் வாதிகளினதும் கருத்துகளை உள்வாங்கியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. ஏனைய மாகாண சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.