அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு இதுவரையில் விடுதலை செய்யப்படாதவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத் திற்கான விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலும், யாழ். குடாநாட்டிலும் அரசியல் காரணங்களுக்காகக் காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் பலர் தன்னைச் சந்தித்தும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் பல முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக காணாமற்போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் வெறுமனே அறிக்கைகளையும் பட்டியல்களையும் வெளியிட்டு குறுகிய சுயலாபம் கருதிய அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் எவருக்கும் எவ்விதப்பயனும் கிட்டப்போவதில்லை எனவே அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்கள் பல பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நன்கு உணர்ந்து வருகிறேன். இக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து வருவதால் இக்குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் திட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.