அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவர் கைது!

சென்னை சென்ரல் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று காலையில் சென்ரல் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் வரை யாரும் வரவில்லை.

இதற்கிடையில் திடீரென்று மாலையில் வாலிபர் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கையில் பெட்ரோல் கேனுடன், மெமோரியல் ஹால் அருகே வந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரது பெயர் ராஜி என்ற ராஜசேகரன். சென்னை ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் சப்ளையராக பணிபுரிகிறார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு போட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே ரவி தீக்குளித்தார் – டிஜிபி ராஜேந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு. ரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

ரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடலூரில் ஒரு இளைஞர் செல்போன் டவரிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் தீனதயாளன். 22 வயதாகும் இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடந்து வந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அங்கிருந்த ரிலையன்ஸ் செல்போன் டவர் மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்தார் தீன தயாளன். அப்போது அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகிறது – திஸ்ஸ அத்தநாயக்க

மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு டிபென்ட்டர் வாகனங்களில் ஆயுததாரிகள் மாத்தளை பிரதேசத்தில் நடமாடி வருவதை ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,ஆயுதங்களுடன் இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சோதனைச் சாவடிகளில் ஆள் அடையாளத்தைக் காட்டி விட்டு அச்சமின்றிச் செல்கின்றனர் என்றார்.

தம்புள்ள வீதியில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் வீட்டுக்கு முன்னாள் பொலிஸ் அனுமதியின்றி வீதித் தடைகள் போடப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனங்களில் செல்வோர் அடையாளம் காணப்படுகின்றனர்.  மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிந்து கொண்ட பின் அதனைத் தடுப்பதற்காக இவ்வாறு அரசு நடந்து கொள்கின்றது.

மகிந்த சிந்தனையை மத்திய மாகாண மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பதையே தேர்தல் நிலைமைகள் வெளிப்படுத்துகின்றன.  வடக்கே யுத்தத்தில் 98 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மீதி 2 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் அரசு கூறி வருகிறது. கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இயல்பு நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மீதி 2 சதவீத வெற்றியை அரசு பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு வருகின்ற போதும் தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கலைப்பிரிவு பட்ட மேற்படிப்பை தொடர இந்திய புலமைப்பரிசில் பிரிவில் திட்டம்

india_map_.jpgகலைப் பிரிவின் பட்ட மேற்படிப்பை தொடருவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றினை இந்திய உயர்ஸ்தானிகராலயம் வழங்குகின்றது. இப்புலமைப்பரிசிலை பெற விரும்புவோர் 20 – 25 வயதுக்குட் பட்டவராகவும், க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவராகவும் தெரிவு செய்யும் பிரிவிற்கான பாடத்தில் திறமைச் சித்தி (B) அடைந்தவராகவும், க.பொ.த.ச.பரீட்சை ஆங்கிலப் பாடத்தில் சாதாரண சித்தியும் (C) அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரி ஒரு விண்ணப்பப் படிவத்தை மாத்திரம் பெற முடியும் எனவும் விண்ணப்பங்களை பெற விரும்புவோர் வாரநாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் 1 மணி வரை இலக்கம் 133 பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 04 இல் அமைந்துள்ள இந்திய கலாசார நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பங்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை விநியோகிக்கப்படவுள்ளது.

முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பு, பகல் 2 மணி முதல் 4 மணிவரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலதிக தகவல்களுக்கு 0112500014 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.  மலையகப் பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

லிபியாவில் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு ஏப்ரலில் ஒரு பகுதியினர் செல்வார்கள்

topics_libya.jpgதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களில் ஒரு தொகுதியினர், வேலை வாய்ப்புக்காக ஏப்ரல் மாதத்தில் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறைகளில் நிலவும் வெற்றிடங்களில் இவர்கள் வேலைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெப்ரவரி நடுப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகள் லிபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த வருடத்தில் இலங்கையும் லிபியாவும் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள், லிபியாவில் தொழில்வாய்ப்பை பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகவும், பல வெற்றிடங்கள் இலங்கையருக்காக அங்கு உள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார். லிபியாவில் தொழில் வாய்ப்பு நிலைமைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள அதேநேரம், வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் முக்கிய வீதிகள் ஐந்து நாட்கள் மூடப்படும்

ranjith-gunasekara.jpgஇலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் ஒத்திகைகளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் நான்காம்திகதி வரை கொழும்பில் முக்கிய வீதிகள் சில மூடப்படவுள்ளன. இதனால், கொள்ளுப்பிட்டி சந்தி முதல் செரமிக் சந்தி வரையான வீதி மற்றும் கொம்பனி வீதிச் சந்தி முதல் காலிவீதி வரையான வீதிகள் குறிப்பிட்ட நாட்களில் அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை மூடப்பட்டிருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இவ்வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வன்னி மக்களின் அவல நிலையை மூடிமறைக்க அரசு பெரு முயற்சி – ஐ.தே.க. குற்றச்சாட்டு

logo_unp.jpgயுத்தம் காரணமாக வன்னியில் நான்கு இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தி இருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.  அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவு, மருந்துவகை, குடிநீர் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர் நோக்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களைத் திசை திருப்பி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சி இனவாதம், பிற்போக்கு வாதம் கொண்ட கட்சியோ, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட கட்சியோ அல்ல, அதிகாரத்திலிருந்தாலும் எதிர்க்கட்சியிலிருந்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது நாம் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தையோ, யுத்த வெற்றிகளையோ ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதே இல்லை. எதிர்காலத்திலும் பயன்படுத்தப் போவதில்லை.

நாட்டின் இறைமை, சுயாதிபத்தியம் என்பவற்றை பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமை இருக்க வேண்டும் என்பதும் நாட்டில் எவரும் எங்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும் என்பதும் தான்.

எனினும், நாட்டின் ஒரு பகுதியான வன்னியில் இன்று எமது சகோதர இனத்தவர்கள் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த உண்மை நிலையை அரசாங்கம் தெற்கில் மூடி மறைக்கின்றது. உள்ளூரில் மறைக்கப்பட்டாலும் சர்வசேத்துக்கு அவை கிட்டியுள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகம் வரை இந்த விவகாரம் சென்றடைந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் அரசு வஞ்சகப் போக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறும் அரசு, மறு

புறத்தில் தமிழர்களை முற்று முழுதாக புலிகளாகவே பார்க்கின்றது. இந்தப் போலி நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகின்றது எனக் கேட்கவிரும்புகின்றோம். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த அரசாங்க அதிபர்கள் வவுனியாவிலிருந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் ஒன்று புலனாகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அன்று ஏற்படுத்திய சிவில் நிருவாகம் இந்த இரண்டு மாவட்டங்களிலும் இன்று முற்று முழுதாக செயலிழந்து போயுள்ளது தான். வடக்கிலும், வன்னியிலும் இன்று என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை தெற்கு மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மறைமுகமாக வாய்ப்பூட்டுப் போடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் சக்தி எழுச்சி பெறாது போனால் நாடு முற்று முழுதான சர்வாதிகாரத்துக்குள் தள்ளப்பட்டு விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் – தமிழக டாக்டர்கள் அறிவிப்பு

surgery.jpgஇலங்கையில் குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, மருத்துவ வசதிகளை அளிக்கத் தயாரென தமிழக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மனித உரிமைகளுக்கு எதிராக அப்பாவித் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கும் இலங்கை அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சிகிச்சை வழங்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில்; முல்லைத்தீவுப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதனால், அப்பாவி தமிழர்கள் ஏராளமாகக் கொல்லப்படுகின்றனர்.

மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போதிய மருந்துப் பொருட்களும், மருத்துவ வசதிகளும் இன்றி போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏராளமான குழந்தைகளும் பேறுகால தாய்மார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எல்லைகளற்ற டாக்டர்கள் அமைப்பு முழுமையாக பயன்படுத்த வேண்டும். அனுமதி வழங்கினால் தமிழக மருத்துவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ சகிச்சை வழங்கத் தயார். மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.

ஐ.நா.சபை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காணவும் இந்திய அரசும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்களால் 10.11.2008 இல் சேகரிக்கப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் தமிழக அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு இதுவரை அனுப்பப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.