தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களில் ஒரு தொகுதியினர், வேலை வாய்ப்புக்காக ஏப்ரல் மாதத்தில் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறைகளில் நிலவும் வெற்றிடங்களில் இவர்கள் வேலைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பெப்ரவரி நடுப்பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதிநிதிகள் லிபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். கடந்த வருடத்தில் இலங்கையும் லிபியாவும் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்கள், லிபியாவில் தொழில்வாய்ப்பை பெறுவதில் ஆர்வமாக இருப்பதாகவும், பல வெற்றிடங்கள் இலங்கையருக்காக அங்கு உள்ளதாகவும் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டார். லிபியாவில் தொழில் வாய்ப்பு நிலைமைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ள அதேநேரம், வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்படுவதாக ரணவக்க தெரிவித்தார்.