அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மனிதாபிமான நிலைவரத்தை கண்டறிய இலங்கைக்கு ஐ.நா.குழு -அனுப்பிவைப்பது தொடர்பாக பான் கி மூன் பரிசீலனை

banki-moon.jpgஇலங் கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கிமூன் மனிதாபிமான நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்றை அனுப்பி வைப்பது தொடர்பாக தான் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். தெற்காசிய விஜயத்தின் ஓரங்கமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை பான்கிமூன் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட இந்தியத்தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பான்கி மூன், இலங்கை விவகாரம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

புதுடில்லியில் அசோக் ஹோட்டலில் பான்கிமூன் தங்கியிருந்தபோது சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகை ஆசிரியர் என்.ராம் பான்கி மூனை பேட்டிகண்டுள்ளார். அப்பேட்டியின்போது மும்பைத்தாக்குதல்கள், இந்திய பாகிஸ்தான் உறவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, காஸா, ஈரான் பிரச்சினைகள், காலநிலைமாற்றம் என்பன தொடர்பாக “இந்து’ ஆசிரியர் ராம் எழுப்பிய கேள்விகளுக்கு பான் கி மூன் பதிலளித்திருக்கிறார். இலங்கை தொடர்பாக ராம் எழுப்பிய கேள்வியும் பான்கிமூன் அளித்த பதிலும் இங்கு தரப்படுகிறது.

எமது சொந்த இடத்துக்கு (பத்திரிகை பிரசுரிக்கப்படும் தலைமையகம்) சமீபமாக உள்ள இலங்கையில் 31 நாடுகளால் பயங்கரவாதப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட இயக்கமானது 1 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நீங்கள் அறிந்தது என்ன? இவை தொடர்பாக தங்களுக்கு பல அறிக்கைகள் கிடைத்திருக்குமே? என்று ராம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பான் கி மூன் தெரிவித்ததாவது;

இலங்கை நிலைவரம் கரிசனைக்குரியதாகும், இது தொடர்பாக அண்மையில் இலங்கைத் தலைவர்களுடன் நான் ஆராய்ந்துள்ளேன். இன்று கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நான் பேசவுள்ளேன். (இலங்கை ஜனாதிபதியும் பான் கி மூனும் தெலைபேசியில் உரையாடியுள்ளனர்) யாவற்றிலும் முதலாவதாக இந்த நிலைவரத்தை மதிப்பிட்டு மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக எனது கவலையை வெளிப்படுத்தியுள்ளேன். குறிப்பாக பொதுமக்கள் இழப்புகள் குறித்து எனது கரிசனையை தெரிவித்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு முன்னர், நான் பயணமாவதற்கு முன்னராக நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவர் என்னை சந்தித்தார். அச்சமயம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடினோம். எமது விஷேட தூதுவர் ஊடாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படக்கூடாது என்றும் அதனை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரின் அரசாங்கத்திற்கும் நான் தெரியப்படுத்தியுள்ளேன். அத்துடன், ஐ.நா.பணியாளர்கள் மற்றும் நிவாரணப்பணியாளர்களின் பாதுகாப்பு முழு அளவில் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் கேட்டுள்ளேன். இதனை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி எனக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார் அங்கு மிகவும் பாரதூரமான மனிதாபிமான அக்கறைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை மதிப்பீடு செய்ய குழுவொன்றை அனுப்பிவைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறேன். என்று பான்கிமூன் கூறியுள்ளார்.

இனப்படுகொலையை தடுக்கக் கோரி மலேசியாவில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

0802-raja.jpgஇலங் கையில் போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்வர வேண்டும், முயற்சி எடுக்க வேண்டும், ஈழத் தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி மலேசியாவில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஈழத்தைச் சேர்ந்தவர் ராஜா. 27 வயதாகும். இவர் கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த  சம்பவம் நடந்துள்ளது. உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார். விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டைரி, ஒரு பர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, இலங்கை ராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம். தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய போலீஸார் மீட்டுள்ளனர்.

அதில் ராஜா கூறியிருப்பதாவது …

எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன். எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் நான் ஈடுபட்டேன்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே அமைதித் தூதர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும். எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.

ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமைகள் குறித்து பேச்சு பெருமளவில் ஆயுதங்களும் விற்பனை

flag_uk.jpgஇலங் கையில் யுத்தப் பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் பிரிட்டன் அரசு இலங்கைக்கு மிகப் பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளமை தெரிய வந்துள்ளதாக பி.பி.ஸி.தெரிவித்துள்ளது.  இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் சமர் நடைபெற்று வரும்நிலையில் இலங்கை அரசுக்கு பல இலட்சம் பவுன்ஸ் பெறுமதியான போர்த்தளபாடங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தமொன்றுக்கு பிரிட்டிஷ் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக இயந்திரத்துப்பாக்கிகள், விமானப்படை விமானங்களுக்கான தொலைத்தொடர்புக் கருவிகள், ஹெலிகொப்டர்களுக்கான உதிரிப் பாகங்களும் இந்தவிற்பனை ஒப்பந்தத்தில் அடங்குகின்றன. இதேநேரம் இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்து தனது கொள்கைகள் குறித்து பிரிட்டிஷ் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வெளியுறவு விஷேட குழுவின் தலைவரும் தொழிற்கட்சி பாராளுமன்ற உருப்பினருமான மைக்கேப்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு பிரிட்டன் விற்பனை செய்யும் ஆயுதங்கள் வடபகுதியில் நடைபெற்று வரும் போரில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிட்டிஷ் அரசின் வழிகாட்டு விதிகளை மீறுவதாயிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தடைகளையும் மீறி 5000 சிவிலியன்கள் நேற்று வருகை

udaya_nanayakkara_.jpgமோதல்கள் நடைபெறும் வன்னிப் பகுதியிலிருந்து நேற்று மேலும் சுமார் 5000 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இவர்களுள் மிதிவெடியில் சிக்கி காயமடைந்த ஒருவரும், புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நேற்றுவரை வவுனியாவுக்குள் 8200 பொதுமக்கள் வந்துள்ளனர். வன்னியிலிருந்து வரும் பொது மக்களை தங்கவைக்கவென பம்பைமடுவில் மேலும் ஒரு முகாம் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஸ்வமடு, இராமநாதபுரம், புதுக்குடியிருப்பு, குப்பிலான் குளம் பகுதியிலிருந்து நேற்றுமுன் தினம் 5000 பேர் படையினரின் கட்டுப்பட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் நேற்று படையினர் கிளிநொச்சிக்கு அழைத்து வந்தனர். இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்தவர்களுள் சுமார் 1000 பேர் நேற்று வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். காயமடைந்தவர்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 400 நோயாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வந்து தருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது.

புதுக்குடியிருப்புக்கு வடகிழக்கே 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சனசமூக நிலைய ங்களிலேயே தற்காலிகமாக புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இயங்குகின்றது. இப்பகுதி கடற்கரைப் பகுதியை அண்டியுள்ளதால் நோயா ளிகளை கடல்மார்க்கமாகவேனும் திருகோணமலைப் பிரதேசத்திற்கு அழைத்துவருமாறு சுகாதார அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுள்ளது என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் கஹந்த லியனகே தெரிவித்தார்.

அத்துடன் கிளிநொச்சி நகர் படையினரின் முழுமை யான கட்டுப்பாட்டில் வந்துள்ளமையால் கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு மாவட்ட வைத்திய பணிப்பாளர் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்பவும் கிளிநொச்சி ஆஸ்பத்திரியை மீண்டும் இயங்கவைக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைக்கு ஆயுதம் அனுப்பவில்லை: காங். தங்கபாலு

thangabalu.jpgஇலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண கோரியும் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,  

இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசும், தி.மு.க.வும் பல முனைகளில் போராடி உள்ளன. இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக பலநேரங்களில் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இலங்கை பிரச்சினைக்காக இப்போது குரல் கொடுக்கும் கட்சிகளே அப்போது கிடையாது.

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்படுகிறது. தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்பதை இந்த மேடையில் பட்டவர்த்தனமாக சொல்கிறேன். மத்திய, மாநில அரசுகளுடன் அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்றார்.

புலிகளின் அதிவேகப்படகு ராமேஸ்வரத்தில் கண்டுபிடிப்பு

_bort.jpgபுலிகள் பயன்படுத்தும் அதிவேக படகு ஒன்று ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கியது. இலங்கையில் இருந்து புலிகள் யாரும் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ராமேஸ்வரம் ஓலைக் குடா அருகே உள்ள நரிக்குட்டி கடற் கரையில் நேற்று முன்தினம் அதிகாலை இலங்கையில் இருந்து வந்த ஒரு பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தது. நல்ல நிலையில் காணப்பட்ட அந்த படகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. அதன் உள்பகுதியில் நாவல்மர இலைகள் கிடந்தன. இதனால் இந்த படகு காட்டுப் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

அந்த படகில் என்ஜின், டீசல் கேன்கள் எதுவும் இல்லாததால் படகில் வந்த மர்ம நபர்கள் அவற்றை அந்த பகுதியில் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்று பொலிஸார் சோதனை நடத்தினார்கள். முட்புதர்கள் நிறைந்த காட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை.அதன் பின்னர் இந்திய கடற் படையினர் வந்து அந்தப் படகை மீட்டு ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுவாக, இது போன்ற அதி நவீன பிளாஸ்டிக் படகுகளை புலிகளின் கடற் பிரிவினரான கரும்புலிகள் பயன்படுத்துவது வழக்கம். இலங்கை அரசின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த அதிவேக பிளாஸ்டிக் படகுகளை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியிலிருந்து வரும் மக்களை தங்கவைக்க நவீன மாதிரிக் கிராமம் அமைக்கும்பணி முன்னெடுப்பு – வவுனியாவில் பசில் ராஜபக்ஷ

basil.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, அங்கிருந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான நவீன மாதிரிக் கிராமங்களை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக் பார்ம் பகுதியில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் கதிர்காமர் கிராமத்தைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த, நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வடமாகாண ஆளுநர் டிக்ஸன் தாலா உட்பட அரச அதிகாரிகளும் இவ்விஜயத்தின் போது பஷிலுடன் இணைந்துகொண்டனர். வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பஷில் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்; கிழக்கில் விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அங்கு யுத்தத்தால் இடம்பெயர்ந்த 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது தாயக மண்ணில் மீளக் குடியமர்த்திய பணியை எமது ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியது.  மக்களை மீளக் குடியமர்த்தியது மட்டுமல்லாமல், கடற்றொழில், விவசாயம், சுயதொழில், போன்றவற்றை அம்மக்கள் மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தியதுடன், அதற்கான உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

தாம் வாழ்ந்த பிரதேசத்தில் சிறிய வீடுகளாக இருந்தாலும், மக்கள் அதையே பெரிதும் விரும்புவர் என்பதை நாமறிவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களிடமிருந்து மீட்டு, மீண்டும் அதே பிரதேசத்தில் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவே இராணுவத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அப்பிரதேசங்களில் அகற்றப்பட்டதும், இம்மக்கள் மீண்டும் மீளக் குடியமர்த்தப்படுவர். பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட மடு புண்ணிய தலம் உட்பட அப்பிரதேசம் இன்று பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.

யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மின்சாரம், குடிநீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. மனிதநேய நடவடிக்கைகள் ஒருபுறம் இடம்பெறும்போது, அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்திகளும் இடம்பெறுவது இந்த ஜனாதிபதியின் ஆட்சியில் தான் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். தற்போதைய இராணுவ நகர்வை குறைத்து மதிப்பிட்டு, போலியான பிரசாரங்களை வெளிநாட்டு சக்திகள் மேற்கொண்டு நச்சு விதைகளை விதைக்கின்ற போதும், அவற்றுக்கு எதிராக உண்மையை உள்ளபடி கூறி, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள தலைவர் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்றார். இம் முகாமில் உள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்துகொண்ட பசில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கான சிற்றுண்டிகளையும் வழங்கினர்.

அனைவரும் ஒன்றுபட்டால்தான் இலங்கையில் தமிழினம் காக்கப்படும் – முதல்வர் கருணாநிதி

0302-karunanidhi.jpgதிமுக வினருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே …

உடன்பிறப்பே என்று அழைத்து இந்த வேண்டுகோள் கடிதம் நான் எழுதும் போது, தி.மு.க. உடன் பிறப்புகளை மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று கருதாமல், தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளின் செயல் வீரர்களையும், தூய தொண்டர்களையும் விளித்து எழுதுவதாகவே கருதி, நான் உறவு கொண்டாடி உரைக்கின்ற விளக்கங்களையும், விடுக்கும் வேண்டு கோளையும் சிந்தித்து ஏற்பீர் என்ற நம்பிக்கையில் எனக்காக -உனக்காக என்றில்லாமல் தமிழ் இனத்துக்காக கடமையாற்றிடக் கனிவுடன் அழைக்கிறேன்.

தமிழ் இனம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்று பட வேண்டும் என்று கூறுவது, வெறும் உபதேசமல்ல, `ஊருக்கல்லவா சொன்னேன், உனக்கும் எனக்குமல்லவே’, என்று நினைத்திடும்- அல்லது அவ்வாறு நடந்திடும் உபதேசிகளையும் கொண்ட உலகம் தான் இது. அத்தகைய ஒவ்வா நிலையிலிருந்து ஒதுங்கி வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்பே, உனக்கு இதை உரைக்கின்றேன்.

50 ஆண்டுகளுக்கு மேலாக – அறநெறியில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும், ஆயுதம் தாங்கி அடலேறுகள் நடத்திய போராட்டங்களிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்வு காணாமல் நீடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கிடையே நடைபெற்ற சகோதரப் போராட்டங்களும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுதர இங்கே தமிழகத்தில் இயங்கிடும், அரசியல் இயக்கங்களுக்கிடையே தொடரும் சகோதர யுத்தங்களும் தான் என்பதை மறக்கவும் கூடாது, மறைப்பதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவுக்கு வழி வகுக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களைப் போரின் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், ஒரே விதமான உணர்வும் கொள்கையும் கொண்டவர்கள் இங்கே, தமிழ்நாட்டில் ஒற்றுமையாகச் செயல்பட முடிந்திருக்கிறதா என்பதைத் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, இனியாவது நல்ல முடிவு எடுத்து ஒற்றுமைச் சூழ்நிலையை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் சேர்ந்த உடன் பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க.  தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.

அதிமுக, மதிமுக புறக்கணித்தன …

அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற “மனிதச் சங்கிலி” நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன.

டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிட என் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் சென்ற போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ம.தி.மு.க. ஆகியவை அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஆளுங் கட்சி சார்பில் நானே முன் மொழிந்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்திட சட்டமன்றத்தில் 3 முறை விடுப்பித்த வேண்டுகோள் தீர்மானம் கூட பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு என்ற செய்தியோடு தான் முடிவுற்றது.

திமுகவை அழைக்கவில்லை …

பிரதான எதிர்க்கட்சியின் தோழமை கட்சிகள் இலங்கை பிரச்சினைக்காக நடத்திய அறப்போர்களிலும், பிரதான எதிர்க்கட்சி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இந்த கட்சிகளால் முறையாக அழைக்கப்படவே இல்லை.

எனினும் ஆளுங்கட்சி என்ற பொறுப்பும் கடமையும் இருப்பதை எண்ணி எதிர்க் கட்சி முதற்கொண்டு எல்லா கட்சிகளின் ஆதரவையும் திரட்ட முயற்சி மேற்கொண்டு அதிலும் வெற்றி பெற முடியாத நிலைமையே ஏற்பட்டது.

சில கட்சிகளின் தலைவர்கள், இந்தப்பிரச்சினையில் தி.மு.க. தான் முன் நிற்க வேண்டுமென்று முழங்கினார்களே தவிர, நாம் என்னவோ, போர் நிறுத்தம் என்பதற்கு எதிரிகள் போலவும், இலங்கைத் தமிழர் பற்றி அக்கறையற்றவர்கள் போலவும் அறிக்கைகள் – பேட்டிகள் அளிக்க முற்பட்டு, ஒற்றுமை முகிழ்ப்பதைக் குலைத்திடக் காரணமானார்கள். குறிப்பிட்டு அவர்கள் யார் என்று சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை. இனியும் பிளவு மனப்பான்மை அதிகமாகி விடக் கூடாதே என்பதற்காக.

இதோ, அயல்நாடுகள் பலவும் அக்கறையுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திட அறிவிப்புகள் செய்துள்ளன.

நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை வரவேற்கிற அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இம்மாதம் தொடர்ந்து நாம் நடத்த இருக்கிற பேரணிகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் இவற்றில் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே ஆம் நம குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிராமல், இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை.

இது பாசம், உறவு, உணர்வு இவற்றோடு ஒன்றிக் கலந்தது எனும் உண்மை உணர்ந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு ஒரே குரலில் ஒலித்து, இரண்டு பிரிவுகளாய் இருப்பினும், கத்திரிக்கோல் போல இருந்து காரியமாற்றிடக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைய பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க.வின் சார்பில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய கொள்கையை, அவர் ஏற்ற நடைமுறையை, இன்றைக்கும் அக்கட்சியின் உடன்பிறப்புகள், ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டு, அவ்வாறே எதிர்பார்த்து.

ஒன்றாக இருப்போம் வாரீர் …

இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர் களின் உரிமை களை யும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அழைக்கிறேன்.

எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி, உறுதி, உறுதி.

அந்த நிலையை நோக்கி நாம் நடக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேர வையின் சார்பில் நடைபெறும் – பேரணி, பொதுக் கூட்டம் அறப்போர் ஆர்ப்பாட்டம் அனைத்திலும் யாரையும் புண்படுத்தாத முழக்கங்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்க!, நிலையான அமைதிக்கு வழி காண்போம்; வாரீர்!, தமிழினம், தாழாது, தாழாது! யாரையும் தாழ்த்தாது!, தடுப்போம் – தடுப்போம், இனப்படுகொலையை தடுப்போம்!.

உடன்பிறப்பே இந்த முழக்கங்களை மட்டும் இதனையொட்டிய முழக்கங்களை மட்டும் பேரணிகளில் கூட்டங்களில் ஒலித்திட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? – ஐ.தே.க. தலைவர் ரணில் கேள்வி

ranil-2912.jpgமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத மகிந்த அரசு யுத்தத்தின் பின்னாள் ஒளிந்து கொள்வதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கும் வடக்கு யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பினார். கம்பளை நகரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு வினவிய எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

வடக்கு யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. எமது படையினர் பெற்ற யுத்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். ஆனால், யுத்தம் முடிவுற்றதாக கூறும் அரசு ஏன் மத்திய மாகாண சபையின் ஆட்சியை மக்களிடம் கோருகின்றது. மத்திய மாகாண சபைக்கும் யுத்தத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன? மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றாலும் இல்லாவிட்டாலும் யுத்தம் தொடரும். எனவே, அரசு யுத்தத்தின் பின்னால் நின்று கொண்டு அரசியல் நடத்த முற்படக்கூடாது.

மத்திய மாகாணத்தில் எஸ்.பி. திசாநாயக்க சரத் ஏக்கநாயக்கவுடன் அல்ல, ஜனாதிபதியுடன் தான் போட்டியிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி டி.பி. விஜேதுங்கவை மலையக பிரஜை என்ற போதிலும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது. அதேபோல் ஹங்குராங்கெத்தவை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பி. திசாநாயக்கவை மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக்குவோம். பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசிடம் பணமில்லை என்கின்றனர். ஆனால், மிஹின் எயார் விமான சேவைக்கு 600 கோடி ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகிய இரண்டு யுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது. எனினும், ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு மாதத்தினுள் அமுல் செய்யக்கூடிய வகையில் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையொன்றை முன்வைத்துள்ளார். ஆனால், இலங்கை அரசிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை.

மத்திய மாகாண சபை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட எந்தவொரு பொதுப்பணியையும் மக்களுக்கு செய்யவில்லை. சர்வதேச சந்தையில் பால்மா விலை குறைவடைந்துள்ளது. ஆனால், அரசு பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி 8 சதவீத வரி வருமானத்தைப் பெற முயற்சிக்கின்றது. பால்மா உற்பத்தியை நீண்டகாலத்தில் மட்டுமே அதிகரிக்க முடியும். எமது பால் உற்பத்தி 20 சதவீதம் மட்டுமேயாகும். இதனை உடனடியாக 40 சதவீதமாக அதிகரிக்க முடியாது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாத அரசு அமைச்சர்களின் சம்பளத்தை ஒரு இலட்சம் ரூபாவால் வீட்டு வாடகை என்ற பேரில் வழங்குகின்றது. இது மக்களின் பணமாகும். க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை வினாப் பத்திரத்தைக் கூட சரியாக தயாரிக்கத் தெரியாத அரசு எப்படி கல்வித்துறையை முன்னேற்ற முடியும். மத்திய மாகாணத்தின் அபிவிருத்தியை ஐக்கிய தேசிய கட்சியினூடாக மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.

இதுவரை 700 புலிகள் சரண்; எஞ்சியோரும் சரணடைந்து விடுவர் – அமைச்சர் கெஹெலிய

kkhaliya.jpgபடையி னரை எதிர்கொள்ள முடியாமல் புலி உறுப்பினர்கள் சரணடைந்து விடுவார்கள் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரை, 700 புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளதாகக் கூறிய அவர், சரணடைவதற்கான பொறி முறையொன்றை அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியாது என்றும் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு எந்த நேரமும் புலிகள் சரணடையலாம் என்றும் தெரிவித்தார். ஆயுதங்களின்றி சரணடைவோருக்கு எந்நேரமும் மன்னிப்பு உண்டு என்று கூறிய அமைச்சர், புலிகளின் தலைவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார். படையினரால் மீட்பதற்கு எஞ்சியுள்ள மொத்தப் பிரதேசத்தில் நாற்பது வீதம் மோதல் தவிர்ப்புப் பிரதேசம் என்று தெரிவித்த அவர், அறுபது வீதமான பகுதியிலேயே எஞ்சிய பொதுமக்களும் புலிகளால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை ஓரிருநாளில் படையினரால் மீட்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர், இயன்ற அளவு சிவிலியன்கள் பாதிப்படைவதை தவிர்த்தவாறு படையினர் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.