அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது

tamilnadufishing.jpgஈழத் தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர். கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார். வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களது விபரம் :

1 ) சுப.இராமச்சந்திரன் ,(தூத்துக்குடி)
2) முருகையன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் )
3) நடேசன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர்)
4 ) நெடுஞ்செழியன் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
5) முகமது பரூன் ஹக் ( கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் )
6) சின்னச்சாமி ( கரூர் )
7) லெட்சுமணன் ( கரூர் )
8 ) முருகேசன் ( கரூர் )
9) சுதாகர் ( கரூர் )
10 ) வேலுச்சாமி ( தூத்துக்குடி )
11 ) அரிகரன் ( தூத்துக்குடி )
12)பொன்ராசு ( தூத்துக்குடி )
13) இரகு (( தூத்துக்குடி ) மாணவர் திமுக மாவட்ட அமைப்பாளர் )
14 ) தூத்துக்குடி வழக்கறிஞர்

மதுரையில் வக்கீல்கள்-காங். பயங்கர மோதல்: அடிதடி, கல்வீச்சு, கடையடைப்பு

மதுரையில் வக்கீல்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெரும் மோதல் மூண்டது. அவர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் அடிதடியால் பல கடைகள் தாக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தினசரி ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை அவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸாரையும் குறி வைத்து அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகங்கள் தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்து கோர்ட்டு வளாகத்துக்குள் இருந்த வக்கீல்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களையும், காங்கிரசாரையும் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்தது.

இரு தரப்பினரும் போர்க்களத்தில் மோதுவது போல கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். கற்களாலும் சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர். வக்கீல்கள், காங்கிரஸாரின் இந்த கல்வீச்சால் அந்தப் பகுதியில் இருந்த சில கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கடைகள் அனைத்தும் வேகம் வேகமாக அடைக்கப்பட்டன.
 

இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பவேண்டும்: எம்.பி சிறீகந்தா

srikantha-mp.jpgஇலங்கை தமிழர் பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும். அப்போதுதான் போர் நிறுத்தம் கொண்டுவரமுடியும். இதற்காக ஐ.நா.சபை அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கோவையில் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் எம்.பி சிறீகந்தா பேசினார். 

பாதுகாப்பு வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம்

pranaf.jpgதமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்குமாறு இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி கோரிக்கை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முகர்ஜி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்துமாறு வருடாந்தம் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் முகர்ஜி மேலும் கூறியதாவது;

“பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவிதமான அனுதாபமும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தமிழ்க் குடிமக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டிருக்கிறது. தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அண்மையில் நான் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வலயங்களுக்கு வருமாறு தமிழ்க் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. உணவையும் பாதுகாப்பையும் அந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இலங்கை அரசாங்கம் அத்தகைய ஏற்பாடொன்றைச் செய்தது. பாதுகாப்பான வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம். மனிதாபிமான உதவிகள் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்தில் 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்’.

விசுவமடு, குருவிகுளம் தேடுதல்: மோட்டார் குண்டு ஏவும் கருவிகள் கண்டுபிடிப்பு

udaya_nanayakkara_.jpgவிடு விக்கப்பட்ட விசுவமடு மற்றும் குருவிகுளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது புலிகளின் மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  60 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவிகள் ஒன்றும், 80 மி.மீ. ரக மோட்டார் குண்டுகளை ஏவும் கருவி ஒன்றும் இவற்றில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். படையினர் கடுமையான தாக்குதல்களினால் சேதமடைந்த நிலையில் புலிகள் விட்டுச் சென்றுள்ள இந்த மோட்டார் குண்டுகளை ஏவும் இரண்டு கருவிகளையும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படைப்பிரிவினரே கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு- சுதந்திரபுரம் இடைத்தங்கல் முகாமுக்குள் தற்கொலைத் குண்டுத்தாக்குதல்: 30 பேர் பலி- 64 க்கு மேல் காயம்

vishwamadu_bomb-01.jpgமுல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11. 30 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில்  30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

தாக்குதலில்  20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர்  பலியாகியுள்ளனர். மேலும்  24 படையினரும், 40 பொதுமக்களுமாக  64  பேர் காயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்கொலைக் குண்டு தாக்குதலினையடுத்து குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொள்வதாகவும் தெரியவருகிறது. 

சம்பவ இடத்திற்கு மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுள் பெரும்பாலும்   சிறுவர்களும், பெண்களும் அடங்குகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்துள்ளதாகத் தெரியவருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர்

udaya_nanayakkara_.jpgசிவிலியன்களை இலக்குவைத்து புலிகளால் நடத்தப்பட்ட இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று(09) பிற்பகல் பெளத்தாலோக மாவத்தையிலுள்ள இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில், புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதியும், அரசாங்கமும் விடுத்த அறிவித்தலையடுத்து சிவிலியன்கள் வேகமாக வரத் தொடங்கினர். கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்த வண்ணமிருந்தனர். இந்த அடிப்படையில் நேற்றுக் காலையும், முல்லைத்தீவு சுதந்திரபுர பிரதேசத்தை நோக்கி சுமார் ஐயாயிரம் பொதுமக்கள் வருகை தந்தனர்.

இவ்வாறு வருபவர்களை வரவேற்கவென சுதந்திரபுரத்தில் பாதுகாப்புப் படையினரால் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சகலரையும் சோதனையிடுவதற்கும், பதிவு செய்துகொள்வதற்கும் என இரு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சின்னஞ் சிறார்களுக்கும் என தனியான வரிசை ஒன்றும், ஆண்களுக்கு தனியான வரிசை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மக்களை வரவேற்க காத்திருக்கும் படையினர் நிராயுத பாணிகளாகவே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பலர் பல நாட்களாக உண்ணாதவர்களாகவும், சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் கூட குடித்திருக்காதவர்களுமாகவே உள்ளனர். எனவே அவர்களை வரவேற்று சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களுக்குத் தேவையான ஆகாரங்கள் கொடுக்கப்படும். அதன் பின்னர் அவர்களின் தகவல் பதிவுசெய்த பிறகு பஸ் வண்டிகள் மூலம் நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

இந்த அடிப்படையில் நேற்றுக்காலை 5000 சிவிலியன்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து தஞ்சமடையும் சிவிலியன் போன்றே பெண் தற்கொலை குண்டுதாரியும் வருகை தந்துள்ளார். பெண்களை சோதனையிடும் வரிசையில் வந்த அவரை இராணுவத்தின் பெண் வீரர் ஒருவர் சோதனையிட முற்பட்டபோதே தற்கொலை குண்டுதாரி தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அப்பாவி தமிழர்கள் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக கொண்டு வரப்பட்டு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து வரும் வவுனியா மக்களின் நலன்பேண நான்கு விசேட செயலணிகள்

risard.jpgவிடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைக் கிரமமான முறையில் பெற்றுக்கொடுக்கவென நான்கு விசேட செயலணிகள் அமைக்கப்படவிருப்பதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார். அடுத்துவரும் சில தினங்களுக்குள் விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேர் வந்து சேர்வர் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

விடுவிக்கப்படாத வன்னிப் பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு வந்துசேரும் மக்களுக்கு உணவு, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை எவ்விதமான குறைபாடுகளுமின்றி சிறந்த முறையில் பெற்றுக் கொடுக்க இச்செயலணிகள் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார். இதுவரை வவுனியா மெனிக்பாம் பகுதியில் சுமார் 12 ஆயிரம் பேரை தங்க வைத்துள்ளதாகவும் இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இருந்துவரும் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமைத்த உணவுகள், தங்குமிட வசதி, சுகாதார வசதி என்பன வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டு ள்ளதாக கூறிய அவர் வன்னியில் இருந்துவரும் மக்களை தங்க வைக்க ஆயிரம் ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவர்களுக்கு உதவி வழங்க ஐ.நா. மற்றும் ஐ.நா.வுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன முன்வந்துள்ளன. இது குறித்து அவர்களுடன் பேச்சு நடத்தினேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்காலிக கூடாரங்கள், நீர் வசதி, மலசல கூட வசதி என்பன அளிக்க ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

வவுனியா வரும் மக்களுக்கு சுகாதார வசதி, கல்வி, குடிநீர், மலசல கூட வசதி மற்றும் உணவு வசதிகள் அளிப் பதற்கென 4 செயலணிகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அது குறித்து இன்று (9) வவுனியா செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயலணிகளினூடாக குறித்த வசதிகள் வழங்குவது குறித்து தனித்தனியாக நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது. வன்னியில் இருந்துவரும் மக்களை கவனிப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். உணவுகள், மருந்துகள் என்பவற்றை கையிருப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வட கிழக்கு கடலில் புலிகளின் இரு படகுகள் தாக்கியழிப்பு

_bort.jpgமுல் லைத்தீவு வடகிழக்கு கடலில் புலிகளின் இரண்டு படகுகளை கடற்படையினர் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஆறு புலிகள் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக தாக்குதல் படகான டோராவை பயன்படுத்தி நேற்றுக்காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆறு புலிகளில் இருவரின் சடலங்களை கண்டெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வெளியில் செல்ல முற்பட்ட இரண்டு படகுகளும் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 10 கடல் மைல் தொலைவில் வரும்வரை காத்திருந்த பாதுகாப்புப் படையினர் அந்த படகுகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையிலும் கடற்படையினர் கடற்பரப்பில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொமாண்டர் தஸநாயக்க மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் அரசு விஷேட கவனம்

food.jpgமுல் லைத்தீவு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பிடியிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி இருப்பதாக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

இது விடயமாக பாதுகாப்பு தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு காரணங்களினால் கடந்த சில தினங்களாக மீட்கப்படாத பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், துரிதமாக அங்கு உணவு அனுப்புவது குறித்து அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜனவரி 29 ஆம் திகதி 810 டொன் உணவுப் பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அப்பகுதிக்கு உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டன. அப்பகுதிக்கு துரிதமாக உணவுப் பொருட்கள் அனுப்புவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருகிறோம். இது குறித்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், உலக உணவுத் திட்டம் என்பவற்றுடனும் பேசி வருகிறோம் என்றார்.

வடக்கு அகதிகளுக்கு காத்தான்குடி மக்கள் வழங்கிய உதவி தமிழ்முஸ்லிம் நல்லுறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு – கிழக்கு முதலமைச்சர்

muslim-aid.jpgகிழக்கு மாகாணத்தில் தமிழ்முஸ்லிம் இன நல்லுறவுக்கு மட்டக்களப்புகாத்தான்குடி முஸ்லிம்களால் வடபுல அகதிகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கியமை ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி பிரதேச மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சம்மேளனத் தலைவர் எம்.எம்.சுபைர் தலைமையிலும் மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய வடபுல அகதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு நிகழ்வும் இதே தினம் மாலை 4.30 மணிக்கு பள்ளிவாயலில் வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். கலீல் தலைமையிலும் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காகவும் அல்லது பிறரை வாழவைப்பதற்காகவுமே பிறக்கின்றான். இந்த ரீதியில் கிழக்குமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததையடுத்து கிழக்கு மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தபோதும் வட பகுதியில் பாதிப்புக்குள்ளான எமது உறவுகளுக்கு எம்மால் முடிந்தவரை உதவ வேண்டுமென்ற கோரிக்கையினை எமது மாகாணசபையின் தீர்மானத்திற்கேற்ப முன்வைத்தேன். இதற்காக மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் பெருமளவிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கி இருக்கின்றமை இம்மாவட்டத்தில் விஷமிகளின் திட்டமிட்ட நடவடிக்கையினால் சிதைந்து காணப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு ஜனாதிபதி கிழக்கு மாகாணசபையைத் தோற்றுவித்ததன் பிறகு நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றது.

கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின், நான் மட்டுமல்ல மக்களும் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார்கள். இருந்தும் 13 ஆவது சரத்து முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருந்த நிலையிலும் சமூக மனித உறவுகளை கடந்த 8 மாத காலத்துக்குள் இறுக்கமாக முன்னெடுத்துச் செல்வது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் மூலமே மாவட்டத்தின், மாகாணத்தின்,பிரதேசத்தின் , கிராமத்தின் அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றார்.

இந்நிகழ்வுகளில் நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் , முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரஷாந்தன், பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ்பிள்ளை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் நீதிபதி எம்.எம்.மஹ்ரூப் கரீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

48 மணி நேரத்தில் 10301 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம்

civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 10,301 சிவிலியன்கள் தப்பி வந்து இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 5600 சிவிலியன்கள் நேற்று முன்தினம் 4701 சிவிலியன்கள் நேற்றும் வருகை தந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாத்திரம் விசுவமடு பிரதேசத்தை நோக்கி வருகை தந்த 4701 சிவிலியன்களில் மூவர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூன்று சிவிலியன்கள் படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளால் கொல்லப்பட்ட மூன்று சிவிலியன்களின் சடலங்களை பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன் காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுக்காலை வரை 21,621 சிவிலியன்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பி வரும் பொதுமக்களை நலன்புரி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவென போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 50 பஸ்கள் நேற்றைய தினம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருவதை புலிகள் பல்வேறு விதத்தில் தடுத்துவருவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

புலிகள் பணயமாக வைத்து மேற்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவர்களது பிடியிலுள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நாளாந்தம் கொடுத்துவரும் துன்பங்களையும் வெறுத்த சிவிலியன்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர் இது மேலும் கணிசமான முறையில் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். புலிகளின் பிடியிலிருந்து தப்பிவர முயற்சிப்பவர்களுக்கு சங்கிலிகளால் புலிகள் அடித்து கடுமையாக துன்புறுத்தியிருப்பதுடன் அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களையும் பெருமளவில் குறைத்தும் கொடுப்பதாக தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்ததாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இளம் வயதுடையவர்கள் பலாத்காரப் படுத்தப்படுவதுடன் 45 வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய பயிற்சி வழங்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். காமினி மகா வித்தியாலயத்தில் 1000 பேரும், தம்பைமடு முகாமில் 2799 சிவிலியன்களும், நெலுங்குளம் முகாமில் 2625 சிவிலியன்களும், மெனிக் பாம் முகாமில் 582 சிவிலியன்களும், செட்டிக்குளம் மத்திய கல்லூரியில் 1763 சிவிலியன்களும், கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 1351 பொதுமக்களும், ஓமந்தையில் 6000 பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக் காட்டினார்.