வடக்கு அகதிகளுக்கு காத்தான்குடி மக்கள் வழங்கிய உதவி தமிழ்முஸ்லிம் நல்லுறவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு – கிழக்கு முதலமைச்சர்

muslim-aid.jpgகிழக்கு மாகாணத்தில் தமிழ்முஸ்லிம் இன நல்லுறவுக்கு மட்டக்களப்புகாத்தான்குடி முஸ்லிம்களால் வடபுல அகதிகளுக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கியமை ஓர் நல்ல எடுத்துக்காட்டாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி பிரதேச மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சம்மேளனத் தலைவர் எம்.எம்.சுபைர் தலைமையிலும் மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பும் இணைந்து நடத்திய வடபுல அகதிகளுக்கு பொருட்கள் கையளிப்பு நிகழ்வும் இதே தினம் மாலை 4.30 மணிக்கு பள்ளிவாயலில் வர்த்தக சங்கத் தலைவர் கே.எம். கலீல் தலைமையிலும் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ;

உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்காகவும் அல்லது பிறரை வாழவைப்பதற்காகவுமே பிறக்கின்றான். இந்த ரீதியில் கிழக்குமாகாணசபையை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததையடுத்து கிழக்கு மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தபோதும் வட பகுதியில் பாதிப்புக்குள்ளான எமது உறவுகளுக்கு எம்மால் முடிந்தவரை உதவ வேண்டுமென்ற கோரிக்கையினை எமது மாகாணசபையின் தீர்மானத்திற்கேற்ப முன்வைத்தேன். இதற்காக மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் பெருமளவிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கி இருக்கின்றமை இம்மாவட்டத்தில் விஷமிகளின் திட்டமிட்ட நடவடிக்கையினால் சிதைந்து காணப்பட்ட தமிழ் முஸ்லிம் உறவு ஜனாதிபதி கிழக்கு மாகாணசபையைத் தோற்றுவித்ததன் பிறகு நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளதை வெளிக்காட்டுகின்றது.

கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின், நான் மட்டுமல்ல மக்களும் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தார்கள். இருந்தும் 13 ஆவது சரத்து முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருந்த நிலையிலும் சமூக மனித உறவுகளை கடந்த 8 மாத காலத்துக்குள் இறுக்கமாக முன்னெடுத்துச் செல்வது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இனங்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் மூலமே மாவட்டத்தின், மாகாணத்தின்,பிரதேசத்தின் , கிராமத்தின் அபிவிருத்தியினையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றார்.

இந்நிகழ்வுகளில் நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் , முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் பூ.பிரஷாந்தன், பிரதி மேயர் எஸ்.ஜோர்ஜ்பிள்ளை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் நீதிபதி எம்.எம்.மஹ்ரூப் கரீம் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *