அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரு சட்டமே நடைமுறையில் உள்ளது – ஜனாதிபதி

president.jpgசட்டம் சகலருக்கும் சமமானது அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களுக்காக சட்டத்தைக் கையிலெடுக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புக்குச் சகலரும் தலைவணங்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டில் சகலருக்கும் பொதுவான ஒரே சட்டமே உள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை அதுவே நடைமுறையிலுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தங்கல்லையில் புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, சட்டம் சகலருக்கும் பொதுவானது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குச் சகலரும் தலைவணங்க வேண்டும். எனது மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு நான் மதிப்பளித்தேன். அதற்குத் தலைவணங்கினேன். அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்யவில்லை.

எமது நாடு சுதந்திரமடைந்து கெளரவமான சமாதானம் உருவாகியுள்ளது. சுதந்திரமும் சமாதானமும் கிடைத்துள்ளதால் நாம் திருப்திப்பட முடியாது. நீதியும் நியாயமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்கள் வணக்கஸ்தலங்கள் போன்றவை மக்கள் நம்பிக்கைமிக்கதாக அவை அமைய வேண்டும். நீதி நியாயத்திற்கான உந்துசக்தியாக நீதிமன்றங்கள் மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதே எம் அனைவரினதும் பொறுப்பாக வேண்டும். நீதிமன்றங்களில் வழக்குகள் அளவுக்கதிகமாக தாமதமாகியுள்ளன. பல வழக்குகள் 25 வருடங்களுக்கு மேல் நீள்கின்றன. இதில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் தங்கையின் வழக்கும் 25 வருடங்கள் பழமை வாய்ந்ததாகியது. இத்தகைய நிலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. இதனால் நாடளாவிய ரீதியில் 74 மேன் முறையீட்டு நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான இணக்கப்பாடும் நீதியரசர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

நீதியை நிலைநாட்டுவதற்கு சகலரும் முன்வர வேண்டும். நீதிமன்றங்கள் நீதி நியாயத்தை நிலைநாட்டும் மக்கள் சேவையை முழுமையான அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.

கடந்த காலங்களில் வவுனியாவிற்கு அப்பால் நீதிமன்றங்கள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் மட்டுமே எமது நீதிமன்றம் இருந்தது. வவுனியாவிற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் நீதிமன்றங்களும் சட்ட நிறுவனங்களும் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இயங்கின.

தற்போது பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஒரே நீதி ஒரே சட்டம் என நடைமுறையிலுள்ளது. அதற்கேதுவாக நாடு உருவாக்கப்பட்டு விட்டது. அரசியல் தேவைகளுக்காக எவரும் சட்டத்தில் கைவைக்க முடியாது. சட்டத்தை எவரும் கையிலெடுக்கவும் இடமளிக்க முடியாது. சகல மக்களுக்கும் சட்டம் பொதுவானது. சுயாதீனத்தில் கைவைப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று எமது நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக பேசுகின்றனர். நானும் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி அதே நேரம் ஒரு வழக்காளியாக இருந்தவன். எனினும் நான் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தலை வணங்கினேன். மூன்று தடவை சிறையிலிருந்த அனுபவமும் எனக்குண்டு. எனது மனித உரிமை மீறல் தொடர்பாக நான் ஜெனீவாவுக்குச் சென்றேன். எனது ஆவணங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில் என்னுடன் வந்த பொலிஸ் அதிகாரி எனது நிலைப்பாட்டை அங்கு தெளிவுபடுத்தினார்.

எவ்வாறெனினும் நீதிமன்றமானது எனக்கு எவ்வித மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லையென தீர்ப்பளித்தது. அதற்கு நான் தலை வணங்கினேன். நான் மட்டுமல்ல நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தலைவணங்க நாம் அனைவரும் கட்டுப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. தங்கல்ல தற்போது அபிவிருத்தியில் வளர்ச்சி காணும் ஒரு பிரதேசமாகும் இத்தருணத்தில் இங்கு நீதிமன்றம் அமைவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இப்பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் எப்பிரதேசத்திலும் மக்கள் தேவையை நிறைவேற்ற நாம் எந்நேரத்திலும் தயாராகவுள்ளோம்.

மக்கள் நம்பிக்கைக்குரியதாக நீதிமன்றங்கள் மாற்றப்பட வேண்டும். அவை, மக்களுக்கு பிரச்சினைகளிலிருந்து நிவாரணமளிப்ப தாகவும் தமைய வேண்டும். அதற்கான சகல வேலைத்திட்டங்களையும் நாம் முன்னெடுத்து வருகிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறைக்கு முன் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள்

sri-lankan.jpgபாடசாலை 3 ஆம் தவணை விடுமுறைக்கு முன்னர் க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். டிசம்பர் 9 இல் பாடசாலை விடுமுறை ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடியுமென ஆணையாளர் நாயகம் நம்பிக்கை தெரிவித்தார்.கடந்த ஆகஸ்ட் 9 முதல் செப்டெம்பர் 3 வரை உயர்தரப் பரீட்சை இடம்பெற்றது. 268,933 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.  பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. 2 ஆவது கட்ட மதிப்பீடு செம்டெம்பர் 24 வரை இடம்பெற்றது.

பிரபாகரனின் தாயாரைப் பிள்ளைகள் பார்க்க வாய்ப்பளிக்குமாறு அரசைக் கோரவில்லை சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை அவரின் பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாளை அவரின் வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் வந்து பார்ப்பதற்கு சிவாஜிலிங்கம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்ததாகவும் அதனை அரசாங்கம் நிராகரித்துவிட்டதாகவும் இந்திய ஊடகங்கள் பல நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தன. அத்துடன்,  தனது பிள்ளைகளை பார்க்க பார்வதி அம்மாள் விரும்பியிருந்ததாகவும் ஆயினும் அவரும் பிள்ளைகளும் பாதுகாப்பு தொடர்பாக அச்சம் கொண்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இதுதொடர்பாக தான் அரசிடம் எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை யென்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். அத்தகைய கோரிக்கையை அரசுக்கு நான் விடுப்பதாயின் பார்வதி அம்மாளின் பிள்ளைகள் தாங்கள் தாயாரை பார்வையிட வருகை தர விரும்புவதாக முதலில் அறிவித்திருக்கவேண்டும்.ஆனால், அவர்கள் என்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை. அவர்கள் இலங்கைக்கு வருகைதருவது தொடர்பான பாதுகாப்பு விடயமும் உள்ளது என்று சிவாஜிலிங்கம் அததெரணவுக்கு தெரிவித்துள்ளார்.

அதேசமயம் வல்வெட்டித்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதி அம்மாளின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லை என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

சம்பூர், நீர்கொழும்பில் வெடிபொருட்கள்

சம்பூர் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் எடுத்து வந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதிதாக பாடசாலை அமைக்கக் கோரிக்கை

கிளிநொச்சி, மலையாளபுரம், பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களிற்கென தனியான பாடசாலையொன்றை விரைவில் அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதிகளிற்கென தற்போது பாரதிபுர வித்தியாலயமே இயங்கி வருகின்றது. எனினும் தற்போது இந்தப்பாடசாலையில் மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளதனால் பல மாணவர்கள் நகரை அண்டியுள்ள பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.முற்றாக போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்தப் பகுதியிலிருந்து மாணவர்கள் வெளியில் செல்வதனால் பல்வேறு இடர்களையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான மாணவர்கள் நடந்தே பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.எனவே தற்போதைய சூழலில் இது மிகவும் கஷ்டமாயிருப்பதாக மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குஞ்சுக்குளம் பகுதியில் மக்கள் இன்மையால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த பாடசாலையை மலையாளபுரம் பகுதியில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் சில தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. அதனையாவது உரிய முறையில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் சுமுகமான கல்விச் செயற்பாட்டிலும் உரியவர்கள் கூடிய கவனமெடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.

அரசின் துரித நடவடிக்கை கண்டு ஜேர்மன் குழு மகிழ்ச்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவும் புனரமைக்கவும் அரசாங் கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கை குறித்து ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பீட்டர் ஏர்னஸ்ட்பேர்கர் தலைமையிலான 6 பேரடங்கிய ஜேர்மன் பாராளுமன்ற உறுப் பினர்கள் குழு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜேர்மன் தூதுக்குழு, தங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தது.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலை வெற்றிகொள்வதே எமது அடுத்த இலக்கு என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பை துரிதப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல் -சிதம்பரம் தெரிவிப்பு

இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா கேட்டிருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஓரங்கமான வீடமைப்புப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்தியா கேட்டுள்ள நிலையில் மழைகாலத்தின் பின்னர் இதனை மேற்கொள்வதாக கொழும்பு உறுதியளித்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நேற்று சனிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கோபாலபுரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைவரம், கூட்டணி விவகாரம், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றப்பிரச்சினை ஆகியவை குறித்து இருவரும் பேசினர். டில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்தபோது போரினால் குடிபெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போது கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருப்பதாலும் மழைக்குப்பின் இந்தப்பணி வேகப்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக இச்சந்திப்பின்போது கருணாநிதியிடம் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது

jal.jpgவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.

காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப்பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாகவே காணப்பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது. ‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கையில், கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது. இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும். புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும். கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணிக்கு முதல் தொடர் வெற்றி

upul.jpgஅவுஸ் திரேலியாவுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி டக்வத் லுவிஸ் முறைப்படி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவை தொடரொன்றில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நேற்று நடைபெற்ற இரண் டாவது ஒருநாள் போட் டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதில் முதல் போட்டியில் பங்கேற்காத ஆஸி. அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கள மிறங்கினார். இந்நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு உபுல் தரங்க, டி. எம். டில்ஷான் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இருவரும் இணைந்து 119 பந்துகளுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதில் டில்ஷான் 57 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மஹேல ஜயவர்தனவினால் 5 ஓட்டங்களையே பெற முடிந்தது. எனினும் 3ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் இணைந்த உபுல் தரங்க இலங்கை அணியின் ஓட்டங்களை மேலும் அதிகரித்தனர். இதன்போது இருவரும் இணைந்து 70 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 186 ஆக அதிகரித்தது.

இதனிடையே 34 ஆவது ஓவரில் வைத்து மழை குறுக்கிட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 41.1 ஆவது ஓவரில் வைத்து மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்போது இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டி நீண்ட நேரம் மழையால் தடைப்பட்டதால், இலங்கை அணியின் இன்னிங்ஸ் 41.1 ஓவர்களுக்கே வரையறுக்கப்பட்டது. இதில் இலங்கை சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 112 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் சங்கக்கார 52 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்தார். இதன்படி டக்வர்த் – லுவிஸ் முறை அடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 39 ஓவர்களில் 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் முக்கியமான தருணங்களில் பறிபோயின.

இறுதியில் ஆஸி. அணி 39 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் ஆஸி. ஒரு நாள் அரங்கில் தொடர்ச்சியாக 7ஆவது போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. கடந்த 13 ஆண்டுகளில் ஆஸி. அணி ஒருநாள் அரங்கில் பெற்ற மிக மோசமான பெறுபேறு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இலங்கை அணி ஆஸி. மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடர் ஒன்றை வென்று சாதித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை சார்பில் சிறப்பாக செயல்பட்ட உபுல் தரங்க போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.