வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளோடு காத்திரமானதொரு பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகவும் புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான பொருளாதாரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்துடனான இந்த முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியம், கனடா, , அவுஸ்திரேலியா, நோர்வே, ஜேர்மனி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர்.
இச்சந்திப்பின்போது வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளது பலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வலுவிழந்துபோயுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது பங்களிப்பை வழங்குவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை அவர்கள் கருதுகின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள் தலைமை தாங்கியதோடு விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, அரசியல்யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேக்கர ஜனாதிபதியின் சிரோஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹனவும் கலந்து கொண்டனர். தமிழ் பிரதிநிதிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி நொயெல் நடேசன் பங்குபற்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது