அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் – கோட்டாபய ராஜபக்ஷ

gotabhaya.jpgசர்வதேச சமூகம் தமது அரசிடம் போர் நிறுத்தம் தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதை விட்டு, விடுதலைப் புலிகளை சரணடையச் சொல்லுமாறு செய்ய வேண்டும் என்றும் கூறிய கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டை நிலையை கையாள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்து போராடி வரும் தமது அரசு அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடாது என்பதனை தெளிவு படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கையை தாம் தடுக்கவில்லை என்றும், மாறாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உலக உணவுத் திட்டத்தினருக்கு அவ்வாறான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொடர்ந்து வேண்டியுள்ளதாகவும் கூறுகிறார்.

இன்னமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் சுமார் 15,000 மக்களே இருக்கிறார்கள் என்றும், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தெரிவித்த 1,65,000 எனும் கணக்கீடு தவறானது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளவை பொய் என்றும் அவர் கூறுகிறார்.

இதனிடையே, இலங்கைக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவர்கள் வவுனியாப் பகுதிக்கு சென்று அங்கு தங்கியுள்ள இடம் பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கோட்டபைய ராஜபக்ஷ  தெரிவித்தார்.

அமைதியான தேர்தல் -ஆணையர் திஸாநாயக்க

e-c.jpgமேல் மாகாண சபைத் தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க கிடைத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 2769 மத்திய நிலையங்களிலும் இவ்வாறு தேர்தலை நடத்தி முடிக்க கிடைத்தது.

இத்தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய சகல அராசங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்

விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – அமெரிக்கா

Wanni_War_Bombed_Safe-Zoneஇலங்கையில் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகள் மூன்றாவது தரப்பு ஒன்றிடம் தமது ஆயுதங்களை கையளித்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்கா, பெரும்பாலான விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் சார்பில் அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரு தரப்பும் உடனடியாக மோதலை கைவிட்டு அங்கு மோதல்களில் அகப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

அத்துடன் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கான மறுவாழ்வுத்திட்டம் மற்றும் இலங்கை பிரச்சினை தீர்வுக்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆகியவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கோருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே மற்றும் ஜப்பான் அடங்கலான, இலங்கைக்கு உதவி வழங்கும் கொடையாளிகளின் சந்திப்பு ஒன்று டோக்கியோவில், கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அதில், அமெரிக்காவின் சார்பில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க அரசுத்துறை, மோதல் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரத்தொடங்கியுள்ளதை இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான இணைத்தலைமை நாடுகள் வரவேற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோதல் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஐ. நா அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரின் கோரிக்கையை தாம் ஆதரிப்பதாகவும் அமெரிக்க அறிக்கை கோரியுள்ளது.

மொரவெவ பகுதியில் நான்கு சிவிலியன்கள் சுட்டுக்கொலை

pisto.jpgமொரவெவ நொச்சிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர்கள் நால்வர் இனந்தெரியா தோரினால் கொலை செய்யப்பட்டிருப் பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணேசேக்கர தெரிவித்தார்.

இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே மேற்படி நால்வரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் கோணேஸ்வரன், விவேகானந்தன், விஜேசேகரன், ராஜமணியென அவர்களது குடும்பத்தவர்களால் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

வெவ்வேறு தொழில்களை மேற் கொண்டு வரும் மேற்படி நால்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் வெவ்வேறு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

கொலைகள் இடம் பெற்ற இடங்களுக்கு நேற்றுக் காலை நேரில் விஜயம் செய்த நீதவான் சடலங்களை நேரில் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்களை திருமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்த மொரவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பாணமையில் 5 மீனவர்கள் இரவில் வெட்டிக்கொலை

f-m.jpgஅம்பாறை மாவட்டம் பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் நேற்று இனத்தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டுள்ள ஐவரது சடலங்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உகந்தமலை கடற்கரை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாணமை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, பொன்னுத்துரை, கதிரவேல், உதயா, ஜீவா ஆகிய ஐந்து மீனவர்களே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொத்து வில் பொலிஸார் கூறுகின்றனர்.

சனிக்கிழமை இரவு மீன் பிடிப்பதற்காக நான்கு இயந்திரப் படகில் உகந்தமலை சென்றிருந்த மேற்படி ஐவருமே இனந் தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, அவர்கள் பயணித்திருந்த நான்கு படகுகளும் சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த குடிசை வீடு ஒன்றும் எரியூட்டப்பட்டிருந்ததாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. கொலையுண்டவர் களை அவர்களது பெற்றோர், உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பொத்து வில் நீதிமன்ற நீதிபதியின் மரணவிசார ணைகளைத் தொடர்ந்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

புலிகளை பாதுகாக்க எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது – ஜனாதிபதி

Mahinda Rajapaksaபுலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி இறுதி அத்தியாயத்தின் கடைசி வசனங்களை எழுதத் தயாராகின்ற இச் சந்தர்ப்பத்தில் மேல் மாகாண மக்கள், புலிப் பயங்கரவாதிகளை பாதுகாக்க எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாதென தேர்தல் மூலம் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்கள். தேர்தல் முடிவுகளையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

மேல் மாகாண சபைத் தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிராமத்தைப் போன்று நகரமும் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இத் தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகின்றது. இம் மாகாண சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்திருப்பதும், மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வருவதும் ஒரே நேரகாலத்தில் நடந்திருப்பதால் புதிய எதிர்பார்ப்புகளை கொண்டுவந்திருப்பது புலனாகிறது. மேல் மாகாண சபைத் தேர்தல் ஊடாக கிடைக்கப் பெற்றிருக்கும் ஆணை மூலம் சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான செய்தியொன்றை இம் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள். மாகாண மக்கள் அளித்திருக்கும் செய்தி மூலம் புலிப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க எந்தச் சந்திக்கும் உரிமையும் கிடையாது என்பதாகும். இந்தப் பாரிய வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த சகலருக்கும் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இத் தேர்தலில் வெற்றி பெற்ற சகல அபேட்சகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசியல், இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் நாட்டின் கெளரவத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க ஒன்றுபட்ட சகலருக்கும் தாய்நாட்டின் கெளரவம் உரித்தாகும். கிடைக்கப் பெற்றிருக்கும் பாரிய வெற்றியை யதார்த்தபூர்வமாக்குவதற்காக தோல்வியடைந்த அபிப்பிராயங்களையும் மதித்து சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இந்த நாட்டை கட்டியெழுப்பக் கிடைத்திருக்கும் இப் பொன்னான சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பெறச் செய்யவென சகலரும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கு விரும்புகின்றேன்.

வன்னியிலிருந்து வந்தவர்கள் தங்க வவுனியாவில் மேலும் 5 பாடசாலைகள்

Wanni_War_Welfare_Camp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கு புதிதாக ஐந்து பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாண்டிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன்பாடசாலை, கந்தபுரம் வாணி வித்தியாலயம், பூவரசன்குளம் மகாவித்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் வித்தியாலயம், முதலியார்குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நலன்புரி நிலையங்களாக இயங்கத் தொடங்கியுள்ளன.

ஓமந்தைக்கு இராணுவத்தினரால் கூட்டிவரப்படும் இடம்பெயர்ந்த மக்கள் மேற்படி பாடசாலைகளிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஏற்கனவே 15 தற்காலிக நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மெனிக்பாம் வலயம் இரண்டு ஆனந்தகுமாரசாமி நிவாரண கிராமத்திற்கு வியாழக்கிழமை மட்டும் ஒன்பதாயிரம் பேர் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கானோர் வந்து சேர்ந்துள்ளனர்.

கண்டி தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துக: அமைச்சர் முரளிதரன்

Karuna Colதனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி. முரளிதரன் பொலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா குழுவினர் என தம்மை கூறிக்கொண்டு கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை கப்பல் கேட்கும் கும்பல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதை அடுத்தே அமைச்சர் வி. முரளிதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

பாதுகாப்பு வலயத்தை மீட்டெடுக்க இன்னும் 4 நாட்கள்

images-army.jpgதற்பொழுது இடம்பெற்றுவரும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். பொதுமக்களை மீட்கும் பணியினை படையினர் மிகவும் அவதானத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். எந்தவொரு கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தாது துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்தி முன்னேறி வருகின்றனர் என கூறினார்.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

sarath-fonseka.jpg வவுனியாவுக்கு நேற்று சனிக்கிழமை காலை இராணுத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா விஜயமொன்றை மேற்கொண்டார்.  முல்லைத்தீவு, புதுமாத்தளன் மோதல் தவிர்ப்பு வலயத்தில் இடம் பெறும் படை நடவடிக்கை குறித்து ஆராயும் நோக்கிலேயே சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் சகிதம் இராணுவத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு இடம்பெற்ற முக்கிய சந்திப்பில் கலந்து கொண்ட வன்னிக்கான கட்டளைத்தளபதிகள், வன்னியில் புலிகள் எஞ்சியிருக்கும் பகுதியின் நிலைமைகள் குறித்து இராணுவத் தளபதிக்கு விளக்கம் கூறினார். எதிர்வரும் நாட்களில் அந்தப்பகுதிகளில் மேற்கொள்ளவுள்ள படை நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்த இராணுவத்தளபதி அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.